வியாழன், 31 மே, 2018

நலமுடன் 464

 சிலு  சிலு  காற்றில்  சீதள  நிலவில் --மனம்
தொல்லைகள்  பெறவே  தோகையே  வந்தாய்
தள்ளியே  போயினும்  தாவியே  இழுத்தாய் --நானும்
தஞ்சம்  நீயென்றே   தவறி  விழுந்தேன்

கட்டியே   அணைத்தாய்  கனி இதழ்  கொடுத்தாய் --பெட்டி
பாம்பாய்  உன்பின்னால்  அலைந்தேன்
விட்டுப்  பிரிந்தாய்  வேதனை  கொடுத்தாய் --என்
விழிகளில்   கண்ணீர்  வினையின்  பலனோ

சிதறிய  என்மனம்  சீர் பெற க்  கூடுமோ --உனது
சிற்றிடை  தன்னையும்  என்மனம்  விடுமோ
கற்பனைத்  தேரினில்  ககனம்  செல்வோம் --எனது
காரிகை  உன்னையே   கடிமணம்  செய்குவேன்

நாளும்   பார்ப்பேன்  நலமாய்  முடிப்பேன் --இளம்
நங்கை  உன்னுடன்  நானும்  இணைவேன்
வாழும்  காலம்  வளம்பெற  வேண்டும் -எந்தன்
வனிதா  மணியே  என்றும்  வற்றாத  நதியே

பிள்ளைகள்  அதிகம்  பெற்றிடல்  வேண்டும் --நம்
பின்னால்  அவர்கள்  சுற்றிட  வேண்டும்
நல்லவை  அனைத்தும்  நாம்   பெற  வேண்டும் --அந்த
நாயகன்  அருளால்   நலமுடன்  வாழ்வோம்  

ஆனந்தவேலன் 463

                             பல்லவி
நினைவாலே  உனக்கு  நித்தம்  பூசை  செய்தேன் --என்றும்
துணையாக  வருவாய்  தூயனே  வேலா    (நினைவாலே )
                            அனுபல்லவி
கலை மேவும்  எழிலே  கண் கவர்  அழகா --உனது
காலடி   ஒன்றே  எங்கள்  கவலைக்கு  மருந்தே  (நினைவாலே )
                             சரணங்கள்
இயல்   இசை  நாடக   இலக்கிய  முதல்வா --ஏழைகள்
துயர்  களைய   இன்றேனும்  நீ வா   வா
கயல்  விழி  வள்ளியின்  காதல்  மணவாளா --நீயும்
கற்பக  மயிலேறி   அற்புதம்  தந்திட  வா     வா (நினைவாலே )

சங்கடம்  தீர்த்திட  எங்கள்  சரவணா  வருவாய் --இங்கு
சகல  நன்மைகளும்  அடியவர்  பெறுவார்
பங்கயச்  செல்வி   பார்வதியின்  மகனே --உன்னை
பணிந்திடில்   பாபங்கள்  பறந்திடும்  குகனே   (நினைவாலே )

செந்தமிழ்  வேலனே  எங்கள்  சிவனாரின்  பாலனே --செய்த
சிறு பிழை  பொறுத்திடுக  சீர்மிகு   சீலா
தந்தையும்  நீயே  உலகில்  தாய்மையும்  நீயே --தமிழ்
மறை  யோதிடும்   ஞான  தத்துவப்  பொருளே

சிந்தையில்  வைத்தே  உனது  சிறப்புகள்  சொல்வோம் --என்றும்
சென்னிமலை  வாழும்  செங்கதிர்  வேலா
வந்தனை  செய்வோர்  வளம்பெறல்  உண்மை --அருளினை
வாரியே   வழங்கிடும்  வள்ளல்   நீயே  முருகா (நினைவாலே )

தமிழினில்  பாடிட   பல தகுதிகள்  வேண்டும் --உன்
தாளடி  தொழுதால்   சகலமும்   சேரும்
அமிழ்தென  இனித்திடும்  ஆனந்த  வேலா --எங்கள்
ஐயனே  உன்னையே  அனுதினம்  தொழுவோம்  (நினைவாலே )

புதன், 30 மே, 2018

சிவம் 462

                           பல்லவி
எமையாளும்  ஈசா   இனிய  கயிலை  வாசா --என்றும்
துணையாக  வருவாய்  துதிப்போமே  நாளும்  (எமையாளும் )
                           அனுபல்லவி
நினைத்தோர்  முன்னே  நீயன்றோ  வருவாய் --உன்னை
நினையாத   பேர்க்கும்   நீ யருள்  செய்வாய்  (எமையாளும் )
                           சரணங்கள்
வினைகளைப்  போக்கி வாழ்வினில்  வெற்றிகள்  தருவாய் --நீ
விண்ணில்  இருந்தே  மண்ணகம்  காப்பாய்
கணமேனும்  நினைத்தாலோ  கவலைகள்  மறையும் --உமது
கருணையினால்  அன்றோ  வரும்  கஷ்டங்கள்  குறையும்  (எமையாளும் )

தினம்  உன்னை  நினைத்து   தேவாரம்  படிப்போம் --வாழ்வில்
தீமைகள்  புரிந்தோரை  திருந்தவும்  வைப்போம்
மனமெனும்  கோவிலில்  உன்னையே  தொழுவோம் --எங்கள்
மகராசன்   குணநேசன்   மகாதேவன்  நீயே     (எமையாளும் )

குணமெனும்  குன்றேறி  குவலயம்  காப்பாய் --பல
குடும்பங்கள்  நலம்  காண நன்மைகள்  செய்வாய்
வரகுண  பாண்டிக்கு  சிவலோகம்  காட்டி --இங்கு
வற்றாத  வைகை  நதி  வந்திடச்  செய்தாய்   (எமையாளும் )

நினையே   நினைந்தவர்க்கு  நிச்சயம்   முக்தி --எங்கள்
நிர்மலனே  நேசனே  நின்மேல்  தான்  பக்தி
கனவிலே  வந்தாலும்  கைகூப்பித்  தொழுவோம் --உந்தன்
காலடி  பற்றியே   காலத்தை   வெல்வோம்  (எமையாளும் )

செவ்வாய், 29 மே, 2018

புண்ணியம் 461

காயாய்  கனியாய்  நீயானாய் -என்
கண்ணா எல்லாம்  தேனானாய்
பெய்யும்  மழையில்  துளியாவாய் --தினம்
பேசும்    நாவில்  ஒலியானாய்

நினைவாய்  நெஞ்சில்  குடியானாய் --இங்கு
நேசம்  பாசம்  அன்பானாய்
கனவில்  வருகின்ற  பொருளானாய்  --நம்
கண்ணில்  ஒளியாய்  தெரிகின்றாய்

இல்லம்  முழுதும்  ஒளியானாய் --வானில்
இரவில்  தோன்றும்  மதியானாய்
கள்ளம்  அறியாச்  சிசுவானாய் --எம்
கவலை  தீர்க்கும்  நல் மருந்தானாய்

ராதை  மனதில்  துணையானாய் --என்றும்
நல்லவர்க்கு  உதவும்  குணமானாய்
வேதப்  பொருளாய்  உருவானாய் --இந்த
உலகம்  வியக்கும்  அருளானாய்

தர்மம்  காக்கும்  வடிவானாய் --வரும்
தாகம்  தீர்க்கும்  நீரானாய்
கர்மம்  போக்கும்  கண்ணியமே --உன்
காலடி  தொழுவது  புண்ணியமே 

கருணாநிதி 460

                            பல்லவி
கருணாகரா   இறைவா   கயிலை  மலை  வாசா --நீ
கனிந்தருள்  புரிகுவாய்   காப்பதுன்  குணமே (கருணா )
                            அனுபல்லவி
சிறுவன்  நான்  செய்த  சிறு  பிழையெல்லாம் --இனி
பெரு மனத்துடனே  பொறுத்தருள்  செய்குவாய் (கருணா )
                             சரணங்கள்
அடியவர்  தொழுதிடும்   அன்பெனும்  நேசா --உன்
அன்பினைப்  போற்றுதல்  ஆனந்த  விசுவாசமே
முடிதனில்  கங்கை  மோட்சமருள்  செங்கை --என்றும்
முழுநிலவாய்த்  திகழும்  எங்கள்  மூர்த்தமும்  நீயே  (கருணா )

கையினில்  சூலம்  உனது  கண்களில்  பாசம் --உன்
மெய்யடி   தொழுதால்  மேம்படும்  தேசம்
பெய்திடும்  மழையின்  பிறப்பிடம்  உன்  சடையே --இந்த
மேதினி  செழித்திட   மண்ணில்  வான் மழை  பொழிவாய்  (கருணா )

கருணாநிதியே  எங்கள்   கண்கண்ட  தெய்வமே --உனது
கழலடி   தொழுதே  வந்த  கவலையை  மறப்போம்
அருணோதயம்  போல்   ஆகிடும்   எம்  வாழ்வு --ஐயன்
நினைத்தால்  இங்கு  அகலுமே  தாழ்வு          (கருணா )

மலையினில்  வாசம்  மக்களின்  நேசம் --கடும்
புலியின்  தோலினை  புனிதமாய்  அணிந்தாய்
நிலைத்திடும்  செல்வம்  எமக்கு   நீயே  அன்றோ --மனதில்
நிம்மதி  என்பதும்   நினைத்  தொழல்   என்றும்  (கருணா )






திங்கள், 28 மே, 2018

இனியவள் 459

 மங்கிய   மாலை  ஒரு  மாமரச்  சோலை  --அங்கு
தங்கிய   போது   ஒரு  தையல்   வந்தாள்
பொங்கிடும்  அழகு  அவள்  பூமியில்  நிலவு --அவள்
பூவுடல்  செழிப்பினில்  பொன்னென   மின்னும்

ஈரெட்டு  வயதால்  என்னையே  வளைத்தாள்  --என்
இதயத்தில்  நுழைந்து  என்னமோ  செய்தாள்
கார் வெட்கும்  குழலும்  கயல் விழிக்  கண்களும் --என்னை
போரிட்டு  அழைக்கையில்   மீறிப்  போவது  எங்கே

காலினில்  வீழ்ந்தேன்  அவளது  கைத்தலம்  தொட்டேன் --அந்த
கன்னியை  மணந்திடக்  காதலும்  கொண்டேன்
நூலெனும்  இடையும்  சங்கெனக்  கழுத்தும் --அவளை
நோக்கிடும்  எவரும்  தங்கள்  நுண்மதி  இழப்பர்

பற்களோ  வெள்ளை  அந்த  பாவையோ  பூக்கொல்லை  --அவள்
அற்புத  அழகால்   எல்லா  ஆண்களையும்  அழிப்பாள்
கற்றவர்  போற்றிடும்  கமலமும்  அவளே --பிறர்
கண்டதும்  நெஞ்சினில்  காமமும்   மலரும்

இனிவரும்  காலங்களில்  எல்லாம்  அவளே --உலகில்
இரவிலும்  பகலிலும்  என்  இமை போல்  காப்பேன்
ஏவிடும்  பணிகளை   இன்பமாய்  முடிப்பேன் --என்
இனியவள்   மனதிலே   நல்ல இடமும்  பிடிப்பேன் 

வேலவன் 458

 நினைவாலே  உனக்கு  ஒரு  கோவில்  அமைத்தேன் --என்
நெஞ்சினை   அதற்கு  காவல்   வைத்தேன்
கணமேனும்  உன்னை  நான்  மறக்கவில்லை --இனி
கந்தனே   நீயும்  என்பால்   கருணை  புரிவாய்   (நினைவாலே )

அழகான  மனைவிகளோடு  ஆனந்தக்  குடும்பம் --என்
அண்ணலே  உன்னையன்றி  யாரிடம்  சொல்வேன்
பழமாக  நின்றது  தென்  பழநியில்   அன்றோ --அந்த
பரமனார்   பெற்ற  பசுந்  தங்கம்  நீ   யல்லவோ  (நினைவாலே )

கந்தா உன்  பார்வை  பட்டால்  கடும்  வினை  பறந்தோடும் --தினம்
சிந்தையில்  நினைத்தாலோ   சிறப்பான   வாழ்வமையும்
வந்திடும்  துன்பங்கள்  நீ  வந்திடில்  நில்லாது --எம்
வாழ்வினில்  உன் அருளே   வல்லமை  எனும்  பேறு  (நினைவாலே )

வீரமாய்ப்  போரிட்டு  வெஞ்சமரில்  ஜெயித்தாய்  --எம்மை
விழிப்புடன்  காவல்  செய்து   வெற்றிகளை  யருள்வாய்
கோரிடும்  அடியவர்  குறைகளையும்   தீர்ப்பாய் --எங்கள்
கொற்றவன்  நீயேயென  குகனுனைப்  பணிவோம்  (நினைவாலே )

சங்கத்  தமிழ்  வளர்த்த  ஷண்முகனும்  நீயே --வந்த
சங்கடங்கள்  போக்கியே  நல்ல  சாந்தியினை  தருவாய்
பொங்கிடும்  அழகினில்  சரவணபொய்கையிலே  மலர்ந்தாய் --எங்கள்
புண்ணியனே   வேலவனே  போற்றுகிறோம்  தினமே  (நினைவாலே )

ஞாயிறு, 27 மே, 2018

நியாயம் 457

 கலையின் வடிவமே   என் கண்ணன்  என்பேன் --அவன்
காதல்  கலையினில்  மன்னன்  என்பேன்
நிலையில்லாத  மனதினை  எனக்குத்  தந்தான் --தன்னை
நினைக்கவிட்டு  எங்கோ  பிரிந்து  சென்றான்

காலை  மாலை  என்று  கணக்கேயில்லை --இளம்
கன்னி  மனதில்  அவனது  ராஸலீலை
பாலினைக்  குடிக்கும்  பூனையைப்  போலே --அவன்
பறந்து  எங்கோ  எனோ  சென்று விட்டான்

கண்கள்  மயங்கி  எனக்கு  காதல்  சுரம் -எந்தன்
கண்ணா  உனைக்  கண்டாலே  ஆசை  வரும்
பெண்களின்  மனதும்  இன்னும்  புரியலையோ --நான்
புலம்புவது  உனது  காதில்  கேட்கலையோ

உணவும்  நீரும்  மறந்து  போனேன் --உனது
நினைவில்  தினம்  வெதும்பிப்  போனேன்
கனவாய்   என்வாழ்வும்   மாறிப்  போச்சே --என்மேல்
கருணை  காட்டிட  நல்ல  மனம்  இல்லையோ

கண்களை  மூடினால்  கனவுகள்  வருமே --உனது
காதல்  பாடம்  மட்டும்  நினைவு  தருமே
என்னில்  பாதியும்  நீயே  அன்றோ -இதனை
மறந்து  என்னையே  தவிக்க  வைத்தாய்

ஐந்து  காலங்கள்  உனக்குப்  பூஜை --என்
அன்பே  எனக்கு  உன்மேல்  ஆசை
நைந்து  நைந்து  நானும்  நூலாகினேன் --இது
நியாயம்  தானா  கண்ணா  நீயே  சொல்லு 

வெள்ளி, 25 மே, 2018

வள்ளிநாயகன் 456

 கதிர் வேல்   முருகன்  கருணை  புரிவான் --அவனை
கருத்தாய்  துதித்தால்  கவலைகள்  மறையும்
மயிலில்  வருவான்  நம் மனதில்  நுழைவான் --அங்கே
மகிழ்வாய்  தங்கியே  புது மலராய்  சிரிப்பான்

தமிழாய்  ஒலித்திடும்  நம் தலைவன்  அவனே --நற்
தணிகை  மலைவாழ்   தங்கமும்  குகனே
அமிழ்தாய்  இனிப்பான  அடியார்  தமக்கே  --அவனது
அடிகளைப்  பற்றினால்  அடையலாம்  முக்தியே

செவ்வாய்  திறந்திட  செல்வம்  பொழியும் --அவன்
திருவேல்  நம்மையே  தினமும்  காக்கும்
அவ்வைக்  கிழவிக்கு  அளித்தது  நாவற்பழம் --என்றும்
அன்பால்  நினைத்தால்  அருள்வது ஞானப்பழம்

இனிமேல்  பிறவிகள்  எடுத்திட  வேண்டாம் --நம்
இறைவன்  முருகன்  நமைத் தடுத்தே  காப்பான்
துணிவாய்  அவனைத்  தொடர்ந்தால்  இன்பம் --இனி
தூரமாய்  ஓடிடும்  தொல்லையும்  துன்பமும்

நாவால்  சொன்னால்  நாளையும்   நமக்கே --அவனை
நம்பியே  இருந்தால்   நற்பலன்  கிடைக்கும்
பாவினில்  உறைவான்  நம் பக்கம்  இருப்பான் --தூய
பாதங்கள்  பணிந்தால்  நற்பதங்கள்  கொடுப்பான்

வேலும்  மயிலும்   விரைந்தே  வருக --எங்கள்
வினைகள்  மறைக  வெற்றிகள்  தொடர்க
நாளும்  பொழுதும்   நம்பியின்  நினைவே --உலகில் 
நங்கை  வள்ளியின் நாயகன்  ஷண்முகனே  

சொர்க்கம் 455

 நேரில்  வந்தாய்  என் நெஞ்சில்  அணைத்தேன் --என்னை
வாரியே  இணைத்தாய்  எனக்கு   வாழ்வும்  கொடுத்தாய்
ஊரில்  என்னையே  உயர்வாய்  நினைத்தார் --நானும்
உன்னால்  அன்றே   உறவுகள்  இழந்தேன்

காயும்  நிலவும்  எனக்கு  கசப்பாய்   தெரியும் --என்
கண்ணா  உன் தோள்  கரும்பாய்  இனிக்கும்
பாயும்  புலியாய்  பதுங்கிப்  பாய்ந்தாய் --உனை
பார்த்திட  ஏங்கும்  புது  பதவி யை க்  கொடுத்தாய்

காலம்  மாறும்  என்கண்ணீர்  பெருகும் --உனது
கையால்  துடைத்திட  நல்ல  காலமும்  வருமோ
நாளும்  நல்லதாய்  நாளையே  வருமோ --எனது
நண்பரே  நலமா   நன்றாய்  வாழ்வாய்

அரசும் வேம்பும்  அருகே  இருக்கும் --என்
அன்பா  நீயில்லையேல்  அபலை  துடிக்கும்
முரசாய்  ஒலிப்பாய்  என்மோகம்  தணிப்பாய் --எனது
முகமே  மலர  கண் முன்னே  நீ வருவாய்

உறவாய்  இருந்து  ஒருவர்  ஆனோம் --உன்னை
உயிராய் மதித்து  உள்ளம்  கொடுத்தேன்
மறைவாய்  போனாய்  இள மங்கை  தவித்தேன் --எனக்கு
மாறன்  அம்புகள்  மயக்கம்  தருதே

எனோ  இங்கே  எதற்கோ  மௌனம் --என்
இறைவா  ஏங்கினேன்  எல்லாம்  நினைத்தே
வீணாய்ப்  போனேன் என்னை விரகம் கொல்லுமே --நீயும்
விரைவாய்  வந்தால்  சொர்க்கம்  திறக்கும்  

வியாழன், 24 மே, 2018

திருமகள் 454

 அலைகள்  மிதக்கும்  கடலில்  வாசம் --எங்கள்
 அம்மா  என்றும்  எமக்கு  அமுதக்  கலசம்
நிலையை  உயர்த்தும்  நிறைந்த  செல்வம் --உங்களை
 நினைந்த  பேர்க்கு  என்றுமே  லாபம்

கடலினைக்  கடைந்திட  வெளியில்  வந்தாய் --இங்கு
கற்பகமாய்  தினமும்  அருளைப்  பொழிவாய்
சுடலையன்  உமக்கு  சொந்த  அண்ணன் --இதனை
சொல்லிப்  போற்றி  சுகமே  பெறுவோம்

அள்ளி  யள்ளிக்  கொடுத்து  சிரிப்பாய் --ஏழை
அவலம்  நீங்கவே  மருந்தும்  கொடுப்பாய்
கள்ளம்  அறியாப்  பிள்ளை  மனமே --எம்மையும்
காத்து  நிற்பது  உந்தன்  கருணை க்  குணமே

மாலின்  மனதில்  மங்கை  உள்ளாய் --எங்கள்
மனைகள்  தன்னில்  வசிப்பாய்  அம்மா
காலம்  முழுதும்  உன் காலில்  கிடப்போம் --வரும்
கவலைகள்  தன்னையே  தீர்த்து  வைப்பாய் 

எங்கும்  மகிழ்வு  பொங்க  வேண்டும் --மண்ணில்
இன்னும்  நாங்கள்  உழைக்க  வேண்டும்
பொங்கும்  நிலவே  எங்கள்  புனித வல்லி --உமை
புரிந்து  கொண்டவர்  புனிதம்  பெறுவார் 

பிரியம் 453

 கவலையின்றி  காலம்  சென்றது  தோழியே --அந்த
கள்வன்  வந்த  போதிலே  கலக்கமானேன்  மனதிலே
புயலைப்  போலவே  எனது  நெஞ்சில்  புகுந்தவன்  யாரடி --அதனை
தெரிந்து  கொண்டு  என்னிடம்  இன்றே  சொல்லு  தோழியே

நிலவும்  வாழ்வும்  வெறுத்துப்  போனேன் --அவனை
நினைத்து  நினைத்து  மனம்  உருகலானேன்
பலம்  அனைத்தும்  இழந்து  போனேன் --இளம்
பருவ  தாகம்   தன்னில்   வீழ்ந்தேன்

எண்ண  ஓட்டம்  குறைந்து  போச்சு --இன்னும்
இதயத்  துடிப்பு   அதிகம்  ஆச்சு
மன்னவனை  நினைச்சு  மயக்கமாச்சு --என்று
வருவானென  ஏக்கமும் கூடிப்போச்சு

வெளியில்  சொல்ல  எனக்கு  வழியுமில்லை --வந்த
விரக  தாபம்  இன்னும்  தீரவில்லை
விழியில்  புகுந்து  அவனே  விஷமம்  செய்தான் --என்னை
வேதனைத்  தீயினில்   வெம்பிட  வைத்தான்

கண்களில்  கண்ணீர்  வற்றிப்  போச்சு --இன்னும்
அவனது  காதலெனையும்   வதைக்க  லாச்சு
பெண்ணாய்ப்  பிறந்தேன்  என்ன செய்வேன் --பிரிய
தோழி  எனக்குச்  சொல்லேன்  ஒரு நல்ல  செய்தி 

புதன், 23 மே, 2018

காதலா 452

 கண்ணில்  கண்டதும்   காதல்  கண்ணாளா --உன்
காந்தம்  எந்தனை  இழுக்குதே  இந்நாளா
 மின்னிடும்  அழகினில்  நீயொரு  மன்மதனே --அன்பால்
நெருங்கிப்  பழகிட   எனக்கினி  சம்மதமே

இணைந்தே  ஒன்றாய்  எங்குமே  போவோமா --கனி
இதழ்களோடு  சங்கமம்  தினமும்  செய்வோமா
நினைந்தே  நெஞ்சில்  உந்தனை  வைத்தேனே --நீயும்
நித்தமும்  என்னிடம்  இருந்திட  வரவேண்டும்

காற்றினை  தூதாய்   உன்னிடம்  அனுப்பிடவா --நம்
காதல்  பயிரை   எந்நாளும்   வளர்த்திடவா
தோற்றே  போனேன்   நானும்  உன்னிடமே --உனது
தோள்களில்  சாய்ந்து   நானும்  சுகம்  காண்பேன்

நிலவினில்  ஏறியெங்கும்   வலம்  வருவோம் --காதல்
நினைவிலே  வாழ்வில்  என்றும்  நலம்  பெறுவோம்
கலையின்  மறுவடிவம்  ஒன்றினி  உருவாகும் --என்
கண்ணாளா  நீதானே  எனக்கு  கலங்கரை  விளக்கம்

இரண்டு  என்பது  இனிமேல்  மூன்றாகும் --அந்த
   இன்பமே  இயற்கை  வழங்கிடும்  நற்சான்றாகும்
உறவாலே  அன்பு வெள்ளம்  கரை  மீறும் --என்
உயிரே   நீ பிரிந்திடில்   பொன்னுயிர்  பறந்தோடும்

காதலா  நீயின்றே   என்னிடம்  வரவேண்டும் --உன்னால்
கணக்கின்றி  பல பிள்ளைகள்  நானும்  பெறவேண்டும்
ஆதலால்  அன்பே   நீயுமென்னிடம்  வருவாயே --என்
அல்லலைப்  போக்கிட  அள்ளியெனை  அணைப்பாயே 


செவ்வாய், 22 மே, 2018

சுடர் விடும் ஜோதி 451

                        பல்லவி
புவனம்  முழுதும்  ஆளும்   ஈஸ்வரி --எங்கள்
புதுகை  நகர்  காக்கும்  அன்னையே  எமை   ஆதரி  (புவனம் )
                        அனுபல்லவி
சாந்தானந்தர்  போற்றிய  சர்வேஸ்வரி -இங்கு
சகலமும்  நீயே   சற்குண  வல்லியே  அம்மா  (புவனம் )
                         சரணங்கள்
உலகினைக்  காத்திட  நீயும்  உருவாகினாய் --மண்ணில்
உள்ளோர்கள்   நலம்  காண  அருளாகினாய்
புலர்கின்ற   பொழுதெல்லாம்  உன்னால்  அன்றோ --எங்கள்
புவனேஸ்வரி  தாயே   பொன்  மனச்  செல்வியே  (புவனம் )

வரம் பெற  வேண்டியே  உன் வாசல்  வந்தோம் --நீயே
வழி  காட்ட  வேண்டுமென  வணங்கித்  தொழுதோம்
குறை தீர  திருமகளே   மனம்  கனிவாயம்மா --பல
குடும்பங்கள்    சுகம் காண  இனி  அருள்வாயம்மா  (புவனம் )

திருமாலும்  உன்னுடன்  இருக்கும்  உடன் பிறப்பு --உந்தன்
செவ்வாயும்   அருள்  சுரக்கும்  தனிச்  சிறப்பு
ஒருக்காலும்  உந்தனை  என்றும்  மறவோமம்மா --எங்கள்
உயிர் வாழ்தல்  உத்தமியே  நிந்தன்  அருளாளம்மா  (புவனம் )

இல்லையெனும்  நிலை நீக்க  நீயே  வருவாய்  --இந்த
ஏழையர்  வளம்  பெற  எண்ணம்  கொள்வாய்
தொல்லைகள்  சூழாமல்  தோகையே  காத்திடம்மா --என்றும்
தூயவளே   தேவியே  சுடர் விடும்  ஜோதியே  (புவனம் )

புவனேஸ்வரி 450

                                பல்லவி
உலகாள  வந்த  எங்கள்  உத்தமியே  அம்மா --உன்
 பாதம்  சரண்  புகவே  வந்தோம்  தெம்பாய்     (உலகாள )
                                அனுபல்லவி
நிலையாக  வாழ்வதற்கு   நீ யருள  வேண்டும் --தினம்
நினைக்கின்ற  உயிர்களுக்கு  நீ தானே  சொர்க்கம்  (உலகாள )

                                சரணங்கள்
அழகான  திருக்கோலம்   யாம்  காண  வேண்டும்  --உனது
அருளாலே  வாழ்வினில்  நலம்  பேண  வேண்டும்
விழி திறந்து   நீ  பார்க்க  வினையெலாம்  ஓடும் --நிறைய
வெற்றிகளும்  செல்வமும்   நிறைவாகச்  சேரும்    (உலகாள )

அழகாக  இரு  பிள்ளைகள்  அம்மா  நீ   பெற்றாய்  --எங்கள்
ஆனைமுகன்  முருகன்   அன்பான  செல்வமே
கரையாத  மனமும்கூட   கண்டாலே  கரையும் --இங்கு
கற்பகமே  நிர்மலமே  காத்திட  வருவாய்  (உலகாள )

சிவனாரின்  இட பாகம்   செல்வமே  நீயே --உன்னை
சிந்தையில்  நினைப்பவர்க்கு  சிறப்புகள்  சேரும்
புவி யாள  வந்திட்ட  எங்கள்  புவனேஸ்வரித்   தாயே --என்றும்
புகழ்  பாடி  வாழ்வதுவே   பொன்னரும்  துணையம்மா  (உலகாள )

வளமோடு  நலம் யாவும்  வரமாக  வேண்டும்  --உனது
வற்றாத  கருணை மழை   வாழ்வதற்கு  வேண்டும்
நிலம்  வாழும்  மனிதர்க்கு  நிம்மதியைத்  தருவாய் --எங்கள்
நேசமே  பாசமே  நித்தில  வல்லியே  அம்மா  (உலகாள )

திங்கள், 21 மே, 2018

சிங்காரா 449

 சிங்காரா  சிங்கம்  போல  வந்தாயே  சிங்காரா --என்
சிந்தை  அணுவில்  ஒன்றாய்  நிறைந்த  சிங்காரா
பொங்கும்  இளமை  பொழியும்   சிங்காரா --என்னை
புரிந்தே  அணைத்து  சுகம்  தந்திட  வாயேன்  சிங்காரா

இரவில்  பலநாள்  ஒன்றாய்  இருப்போம் --நம்
இதழுடன்  இதழ்  சேர்த்தே  நல்லின்பம்  காண்போம்
உருவாகும்  பேரின்பம் புது உலகம்  செல்வோம் --அங்கு
உன்னுடன்  நானுமே  ஒன்றாகி  மகிழ்வோம்

விடியாத பொழுது  நமக்காக  வேண்டும் -உன்
விரல்  மீட்டும்  புது வீணை  சுக ராகம்  மீட்டும்
காமனின் அம்புகள்  கன்னிஎன்னை  வாட்டும் -என்
கண்ணாளா  உன் மார்பில்  நான்  துயில  வேண்டும்

கண்ணுக்குள்  கண்ணாகி  காதலை  வளர்த்தாய் --என்
கட்டழகை  சுவைத்து  காதல்  ரசம்  குடித்தாய்
விண்ணுக்கும்  மண்ணுக்கும்  விளங்காத  புதுமை --நீ
விரும்பிடும்  போது  நான்   உன்  கையில்  பொம்மை

உறவுக்குள்  ஒன்றாகி   உயிரினில்  கலந்தாய் --புதிய
உறவால்  கரு  ஒன்று  இனி  உருவாக  வேண்டும்
பிறவிகள்  ஏழிலும்  நாம்  பிறந்திட  வேண்டும் --என்
பேரழகா  உனக்கு  மட்டும் நானே  பெண்ணாக  வேண்டும் 

புதையல் 448

 நினைவால்  மலர்ந்தோம்  நெஞ்சம்  இணைந்தோம் --நம்
உறவால்   பிரிந்தும்  உயிரில்  கலந்தோம்
துணையாய்  வந்திடவே  துடித்தேன்  கண்ணே --நீயோ
தூரம்  போனாய்  துவள்கிறேன்  பெண்னே

கண்ணே  உனை  யெண்ணி  கலங்குதல்  முறையோ --இன்றே
காற்றினில்  ஏறியே   எந்தன்  கண்மணி  வருவாய்
எண்ணி  எண்ணி  எங்கே  நான்  போவேன்  --என்
இதயத்தில்  நீதான்  என்றும்  ஆட்சி  செய்வாய்

மலர்கின்ற  பூக்கள்  உன்னையே  பார்க்கும் --அந்த
வசந்தமும்   கூட  நம்  வாசலில்  நிற்கும்
புலர்கின்ற  பொழுதும்  உனக்கு  பூபாளம்  பாடும் --காதல்
போதையை  தந்திட  எந்தன்  பொன்மகளே  வருவாய்

நாளென்ன  பொழுதென்ன  நமக்கென்ன  என்பேன் --இந்த
நங்கை  வரும்  நாளே  நல்ல  நாளென்பேன்
வாழ்கின்ற   நாளும்  நீ  வழங்கிடும்  செல்வம் --என்றும்
வற்றாத  நதியே   பொன்னில்  வடித்து  வைத்த  சிலையே

கண்ணீர்  வழிந்து  கடலாகும்  நிலையில் --என்னை
காத்திட   வந்திட  வேண்டும்  கண்ணின்  மணியே
புண்பட்ட  மனதினை  உன் புன்னகையால்  மாற்று --நீ
புதையல்   ஆனாய்  இந்த  பூவுலகில்  எனக்கு


ஆனந்தம் 447

 மறையே  புகழும்  மாதவச்  செல்வி --தமிழ்
மண்டலம்  போற்றிடும்  மங்கள மகளே
குறைகள்  களைந்திடும்  கொற்றவியே  வருவாய் --உந்தன்
கோவிலில்  நின்றே   கூட்டமாய்த்  தொழுவோம்

நீராய்  நிலமாய்  நெருப்பாய்  இருப்பாய் --ஏழை
நெஞ்சில்  என்றும்  குடியாய்   வசிப்பாய்
பாரோர்  வணங்கிடும்  பங்கஜ மலரே  --உன்னை
பக்தியுடன்  அழைததோம்   நற்பதங்கள்  தருவாய்

கைகளில்  சூலம்  உன் கண்களில்  வீரம் --எங்கள்
கவலைகள்  போக்கிட  காளியே  வருவாய்
பொய்களை  சுமந்தோர்  பொசுங்கியே  போவார் --அந்த
புல்லர்களை  அழித்திட   புறப்படு  புயலாய்

நிலைக்கிற  மகிழ்வும்  நீங்காத  செல்வமும் --நினை
தொழுதிடில்  எமக்கு  நிச்சயம்  கிடைக்கும்
கலைகளின்  அரசியே  எங்கள்  கந்தனின்  தாயே --செய்த
பிழைகளைப்  பொறுத்து  நீ  பேரருள்  புரிவாய்

வாழ்வு  உன்னால்  வளம்  பெற  வேண்டும் --மண்ணில்
வற்றாத  நதிகளை  நீயும்  தந்திட  வேண்டும்
ஆழ்கடல்  முத்தே   அன்பெனும்  தாயே  --உன்னை
அனுதினம்  வணங்கியே  நல்  ஆனந்தம்  பெறுவோம் 

சனி, 19 மே, 2018

திருமணம் 446

 நீராடும்  பொழுதில்  நிலைமாறிப்  போனேன் --உன்
நினைவாலே  நானும்  தடம்  மாறிப்  போனேன்
வேரோடு  சாய்த்தாய்  உன் விழியாலே  வென்றாய் --இதை
விளக்கமாய்  நானென்ன   வெளியிலே  சொல்ல

பேரோடு  புகழும்  பல  பின்னணிகள்  இருந்தும் --என்னை
ஊரார்கள்  இகழும்  உன்மத்தன்  ஆனேன்
கூறாக்கி  எனையேன் கொல்கிறாய்  பெண்ணே --இங்கு
குலவிட  வந்ததில்  கோபம்  தானோ  கண்ணே

சிரித்தாலே   போதும்  பல ஜீவன்கள்  பறிபோகும் --என்
சிங்காரச்  சிலையே  சீற்றமினி  வேண்டாம்
எரிக்கின்ற நிலவும்  என்று  இளமையாகும் --என்று 
ஏந்திழையின்  மனமோ  இயல்பாக  மாறும்

விழி வீசிக்    கொல்லுதல்  வேலையோ  பொன்னே --உன்
விரல்  பட்டால்  போதும்   வேதனைகள்  தீரும்
பழி சொல்லல்  தகுமோ  தங்கப்  பதுமையே  சொல்லு --தினம்
பாத மலர்  பணிவேன்  என்பரிசாகக்  கொள்ளு

தனியாக  போனால்  தாங்காது  மனசு --உனக்கு
துணையாக  வந்து  தோழனாய்க்  காப்பேன்
இனியேனும்  நெஞ்சினில்  இரக்கமும்  வருமோ --என்
எழில் ராணி  உனை  யெண்ணி  ஏங்குதல்  முறையோ

மலர் சூட்டி    மங்கையுனை  மணந்திடவும்  வேண்டும் --உனது
மடியினில்  சாய்ந்து  நல்ல சுகம்  நான்  காணவேண்டும்
புலர்கின்ற  பொழுதும்  இனிப்  புதுமையாய்த்  தோன்றும் --நீயும்
புரிந்து   கொண்டாலே  எனக்கும்  புதுவாழ்வு  மலரும் 

வெள்ளி, 18 மே, 2018

இளமை 445

அழகாய்ப்  பிறந்தாய்  அடிமை  ஆனேன் --உன்னை
அருகில்  ரசித்திட  நீயும்  அனுமதி  தருவாய்
உலவிடும்   காற்றென  உன்னிடம்  வருவேன் --நீ
உள்ளத்தால்  விரும்பினால்  உயிராய்  இருப்பேன்

மனதில்  கோவில்  மானே  அமைப்பேன் --தினம்
மலர்கள்  சொரிந்தே  மனமே  நிறைவேன்
தமிழில்  பாடியே  எனது  தாகம்  தணிப்பேன் --என்
தங்கம்  உன்னையே  தாரமாய்க்  கொள்வேன்

இரவாய்  பகலாய்  உன்னுடன்  இருப்பேன் --என்றும்
இன்பங்கள்  கோடி   அள்ளியே  கொடுப்பேன்
துணையாய்  தோழனாய்  தோகையே  வருவேன் --உனை
தொடர்ந்து  வந்திட  சம்மதம்  தருவாய்

போற்றியே  புகழ்வேன்  பொன்னும்  தருவேன் --உனது
புன்னகை  மட்டுமே  புதையலாய்த்  தெரியும்
காற்றினில்  ஏறியே  எந்தன்  கண்மணி  வருகவே --இரவில்
கட்டியே  அணைத்திட  மிக  களிப்பே  அடைவேன்

கண்களை  மூடினால்  பல கனவுகள்  வருமே --உனை
கலந்தே  இருந்திட  பல கவிதைகள்  பிறக்கும்
இணையாய்  வாழ்ந்திட  என்னுயிரே  வருவாய் --என்னிடம்
இரக்கம்   காட்டி  உந்தன்  இளமையைத்  தருவாய் 

நிரந்தரம் 444

                         பல்லவி
எழிலார்  முருகா  என்றும்  இளமை  முருகா --நீ
இமைகள்  திறந்தே  எமையே  காப்பாய்
                         அனுபல்லவி
பழமே  முருகா   எங்கள்  திருப்பழனியின்   தலைவா --நற்
பதமே   யருள  இன்றே  பறந்து  வா  முருகா  (எழிலார் )
                         சரணங்கள்
திருவே  ஒளியே   எங்கள்  திருப்புகழ்  மணியே --உனை
தினமும்  பணிந்தால்  வாழ்வு  தேனாய்  இனிக்குமே
வறுமை  யகலும்  வளங்கள்  கொழிக்கும் --என்றும்
வாழ்த்திப்  பாடினால்  எங்கள்  வாயும்  இனிக்கும்  (எழிலார் )

அலைமேல்  துயிலும்   அரியுன்   மாமன் --அவன்
அருகில்   சிரிக்கும்  அழகியுன்  அத்தை
கலையாய்த்  திகழும்  கணேசனோ  அண்ணன் --நீ
கருணை  பொழிந்திடில்  கவலைகள்  நீங்கிடும்  (எழிலார் )

உலகினில்  நிரந்தரம்  உன்பெயர்  அல்லவா --உந்தன்
புகழ்  தன்னையே   நாங்கள்  இன்னும்  சொல்லவா 
புலவோர்  பாடிடும்   நற்  புனிதனே  முருகா --என்றும்
புகழ்வோம்  சிறப்போம்  பொன்மயிலேறி   நீ  வா (எழிலார் )

தமிழினில்  கலந்த  எங்கள்  தங்கமும்  நீயே --உனது
தாளடி  பணிபவர்  வாழ்வில்  தரங்கள்  உயரும்
அழகாய்  சிரித்திடும்   அப்பனே  முருகா --தூய
அன்பினை  நினைத்தால்  எங்கள்  அகமோ  சிலிர்க்கும்  (எழிலார் )

வியாழன், 17 மே, 2018

கண்மணி 443

கதைகள்  சொல்லி  கண்ணால்  வளைத்தாய் --மனதில்
காதல்  பயிரை  வளர்ந்திட  வைத்தாய்
இதயம்  முழுதும்  நிறைந்து  விட்டாய் --உன்னையே
இரவும்  பகலும்  நினைந்திடச்  செய்தாய்

புதையலைத்  தேடி  அலைந்த  எனக்கு --நீ
பொன்னால்  செய்திட்ட  மாளிகை  யானாய்
கதவினைத்  திறந்திட  மனம்  இல்லையோ --என்
கண்ணே  நானுனை  அழைப்பது  கேட்கலையோ

பெண்கள்  கருணை  உள்ளவர்  என்றே --இங்கு
பெருமையாக  பாடல்களினில்  புலவர்கள்  சொன்னார்
கண்ணில்  இரக்கம்  இன்னும்   வந்திட  வில்லையே --எனது
காதற்  கிளியே   உன்னால்   இந்தத்   தொல்லையே

காற்று புகா   இடத்திலும்  காதலும்  கூட  நுழையுமே -இங்கே
வேற்று   மனிதனாய்   நானும்  இல்லையே
நேற்று  சொன்னது  உந்தன்  நினைவில்  இல்லையே --உன்னை
நேசமாய்  அணைத்திட   தெம்பும்   எனக்கேனோ   இல்லையே

என்ன  செய்து  உன்னை நான்   மணப்பேன் --நீ
ஏவிடும்  பணிகளை  நன்றாய்  முடிப்பேன்
கன்னல்  தமிழில்  பாட்டுக்கள்  படிப்பேன் --எந்தன்
கண்மணி   உன்னையும்  தூங்கிட  வைப்பேன்







தேவி 442

 கடலில்  ஆடிடும்  கப்பலைப்  போல --என்
காதலி  நீயெனை  ஆடிட   வைத்தாய்
உடல்  மட்டும்  என்னிடம்  இருக்க  --நீயென்
உயிரை  எதற்கு  எடுத்துச்  சென்றாய்

நீயும்  நானும்  நிலைப்  போமென்றே -தினம்
 மனதினில்  நினைத்து  வாழ்ந்தேன்
காயும்  நிலவும்  வீணாய்ப்  போச்சே --எனது
கண்களில்  கண்ணீரும்  வழிந்திடலாச்சே

எதனை  நினைத்தடி  என்மேல்  கோபம் --பொங்கும்
இதய  நிலவே  நானும் தான்  பாவம்
உதவி  செய்திட   உன்மனம்  தொல்லையோ --நான்
உயர்ந்திட  ஒருவழி  எனக்கு  இல்லையோ

கூட்டை  மறந்த  பறவை  யானேன் --உன்
கொள்ளை  அழகினில்  மயக்க  மானேன்
வேட்டை  என்னையே  ஆடலாமோ --இந்த
வேதனை  நானும் கொண்டி டலாமோ

வாடிக்  கிடக்கும்  பயிர்கள்  கூட --அந்த
வானத்து  மழையால்  வாழ்வு  பெறுமே
தேடி  அலைந்து  திரியும்  எனக்கு --இந்த
தேவியின்  அருளும் கிடைத்திட  வில்லையே

இரவும்  பகலும்   பிரிந்திட  மாட்டேன் --உன்னை
இன்பமாக  வாழ்ந்திட  வைப்பேன்
உறவின்  தொடக்கம்  இந்த  மாலை --நம்மை
உலகம்   அறிந்திடும்   நல்ல  நாளை 

புதன், 16 மே, 2018

சதாசிவம் 441

திங்களை   சூடிய  செம்மலும்  நீயே --இனிய
தேவாரப்  பொருளே  திகட்டாத  தேனே
தங்கம் நீயே  தாமரை  மலரே  --உமது
தாளினைப்  பணிவோம்  துணையென  வருவாய்

ஆதியும்  நீயே  அந்தமும்  நீயே --தமிழில்
அடியார்  பாடிடும்  சந்தமும்  நீயே
சோதியே  சுடரே  சுந்தர  வடிவே --வரும்
சோகங்கள் போக்கி  சுகமதை  தருவாய்

நீரும் நீயே  நெருப்பும்  நீயே --உன்னை
நினைந்தோர்  வாழ்ந்திடப்  பொறுப்பும்  நீயே
கோரும்  அடியவர்  குறைகளைக்  களைவாய் -நின்
கோல அழகினில்  குளிரும்  எங்கள்  மனங்களே

சடையனே  சதா சிவமே  சகலமும்  தருவாய் --உனை
சரணம்   அடைந்தவர்  சாஸ்வதம்  பெறுவார்
விடைமேலேறி  வினைகளை  அழிப்பாய் --நான்கு
வேதங்கள்  போற்றிடும்  விமலனும்  நீயே

மகனை  குருவாய்  மதித்த  மகாதேவனே -=எமது
மன இருள்  போக்கி  மகிழ்ச்சியை  தருவாய்
இக  பரம்  நல்கிடும்  இன்னுயிர்த்  தலைவா --இங்கே
என்றும்  நலம்  பெற  நிந்தனைப்  பணிவோம்

சிவனை  மறந்தவர்  உலகில்  ஜெயிப்பதும்  இல்லை --உன்னை
சிந்தையில்  நினைத்தவர்  தோற்றதும்  இல்லை
தவததோர்  போற்றிடும்  எங்கள்  தாயு  மானவனே --நாங்கள்
தமிழால்  வணங்குவோம்  தண்ணருள்  பொழிவாய்  

நாம் 440

 அறிவே  திருவே  அழகின் ஒளியே -இன்று
அறிந்தேன்  உனையே  யாருண்டு  இணையே
கருணைக் கடலே  கதி நீ  யருள்வாய் -இங்கு
சிறியேன்  எனது  சிரமம்   தீர்ப்பாய்

மங்கள ப்  பொருளே  மதியின்  முடிவே --மண்ணில்
எங்களைக்  காத்திட  இனிதே  வருவாய்
சங்கம்  முழங்கிடும்   சகா  தேவரே --நாங்கள்
சரணம்  அடைந்தோம்  சகலமும்  தருவாய்

திங்களை  சிரசினில்  சிறப்பாய்  சூடினாய்  --உலகில்
தினமும்  உந்தன்  சீலத்தைப்  போற்றுவோம்
பொங்கிடும்  புனலே  பொன்னார்  மேனியனே --உனை
பொழுதும்  மறவோம் புண்ணியம்  பெறுவோம்

உலகம்  செழித்திட   நீவிர்  உதவிட  வேண்டும்  --என்றும்
உண்மை  அன்பு  எங்கிலும்  நிலை  பெற  வேண்டும்
நிலவும்  கொடுமைகள்  நீங்கிட  வேண்டும் --அடியார்
நினைக்கும்  பொழுதினில்  நீங்கள்  வர  வேண்டும்

தமிழால்  துதிப்போம்  எங்கள்  தலைவிதி  நீங்களே --வானில்
தண்ணொளி  நிலவே  தர்மத்தின்  தலைவனே
ஆலகால  விசமதை  அருந்திய  புனிதா --எங்கள்
அம்மை  யப்பனே  அகம்  குளிர்வாயே

இம்மையும்  மறுமையும்  இனிதாக  வேண்டும் --இங்கு
ஏழையர்  வாழ்வினில்  எல்லாமும்  வேண்டும்
உம்மையே  நினைத்தால்  உயர்வுகள்  கூடும் -நாம்
உந்தனை மறவோம்  உம்மடி   தொழுவோம் 

செவ்வாய், 15 மே, 2018

மன்னன்439

 கண்ணில்  தோன்றும்   உயிர்கள்  யாவும் --அந்த
கண்ணன்  செய்திடும்  வேலையே
மண்ணில்  மழையாய்  வருவான்  அவனே --இதனை
எண்ணிப்  பார்த்து   ஏற்றம்  கொண்டிடு  தோழனே

வானம் கடல்    பூமி  யாவும்  வள்ளல்  தந்த  சீதனம் --இதை
வழங்கியே  நம்மை  வாழ வைக்கும்  அவனது  நற்குணம்
தோன்றிடும்  துன்பங்கள்  போக்கிட  தோழனாக  வருபவன் --வரும்
தொல்லை  நீக்கி  வாழ்வில்  இன்பத்தை  யள்ளிக்  கொடுப்பவன்

அலறித்  தவிக்கும்  ஏழையர்க்கு  அடைக்கலமாய்  ஆனவன் --நமக்கு
அன்பு பாசம்  நன்றி யென  அனைத்தும்  சொல்லிக்  கொடுப்பவன்
புலரும்  பொழுதாய்  பூத்த மலராய்  புத்துணர்ச்சி  தருபவன் --இங்கு
பொறுமையோடு  வாழ்பவர்க்கு  பொங்கி  செல்வங்கள்  வழியுமே

கண்ணில்  கருணை  கருத்தில்  தெளிவு  கடவுள்  நமக்கு  தந்தது --இதனை
கருத்தில்  கொண்டால்  காலம்  நமக்கு  நல்லது
மண்ணில்  உள்ள  அனைவரும்  மாயவனாரின்  பிள்ளைகள் --இனி
மனதில்  கொண்டால்  இன்னும்  மகிழ்ச்சி  பெருகிடும்  மக்களே

ஏங்கியே  சோம்பி   இருந்து  விட்டால்   போதுமா --நீ
எடுத்த  பணியை  சிறப்பாய்  முடித்திட  வேண்டாமா ?
தூங்கிக்  கிடந்த  நிலையினை  மாற்ற  துணிந்து  எழுக --உனக்கு
தூண்டா  விளக்காய்  வழியைக்  காட்ட வருவானே  துணைவனாய்

மூன்று வேளை 438

 இறைவன்  ஒருவன்  உள்ளாரென்று  --இங்கு
எண்ணி யே  வாழ்ந்திடு  உந்தன்  மனதிலே
உதவிகள்  செய்திட  வருபவன்  அவனே --இதை
உணர்ந்து  தெளிந்து  நடந்திடு  வாழ்விலே

நிலத்தில்  வாழும்  உயிர்கள்  எல்லாம் --மன
நிம்மதி  பெறுவது  அவனது  தயவிலே
கலங்கித்  தவிக்கும்  பொழுதில்  நம்மை --தன்
கரங்களை   நீட்டிக்  காப்பதும்  அவனே

நாளை  நமதெனும்  நம்பிக்கையைத்  தருபவன் --நாம்
நல்ல  வழியினில்  நடந்திட  நன்னெறிகள்  அருள்பவன்
காலை  மாலை  நன்கு  கண்கள்  மூடிக்  கும்பிடு --வரும்
கவலைகள்  தீரும்  களிப்பு  சேரும்  காணலாம் நேரிலே

ஆலையில்  இட்ட  கரும்பு போல  ஆகினோம்  வாழ்விலே --நம்
அல்லல்  தீர்த்திட  அவனும்  வருவான்  நல்லன்பிலே
பாலினைப்  போல  பளிங்காய்த்  தெரிவான்  --உன்னை
பாதுகாக்க  தினமும்  பல  நன்மைகள்  அளிப்பான்

இவனைப்  போற்றியே  இனிதாய்  வாழுவாய் --இனி
இன்னல்  தீரும்  ஏற்றங்கள்  சேரும்
முறையோடு  வாழ்ந்தால்  மூளும்  வினைகளோடும் --நல்ல
முழு நிலவாம்  அவனை  எண்ணியே  மூன்று  வேளை  தொழுவாய் 

திங்கள், 14 மே, 2018

கருணை மழை 437

                        பல்லவி
கருணை மழையே  எனக்கு  கதிநீ  யல்லவோ -உந்தன்
காலடி  வீழ்ந்தேன்   கருணை  புரிவாய்  (கருணை )
                       அனுபல்லவி
திருவே  தேனே   திகட்டா   இனிப்பே --உனை
தினமும்  தொழுதால்   பெறலாம்  களிப்பே  (கருணை )
                    சரணங்கள்
முதல்வா  முருகா  எங்கள்  முத்தமிழ்  செல்வா --நீ
முன் வந்திடிலோ   வல்வினை  தீரும்
இதழ்கள்  அழகு  நீ என்பது  அழகு --உலகில்
இன்னல்கள்  களைந்திட  இனிதே  வருவாய்  (கருணை )

துணைவா  தோழா  தோன்றிடும்  துணையே --உனை
துதித்தால்  போதும்  துன்பம்  விலகும்
இணையே  யில்லாத  எழிற்  பெரும்  ஜோதி --என்றும்
நினையே  தொழுவோம்  எமக்கது   நீதி  (கருணை )

எண்ணம்  எல்லாம்  எழிலாம்  முருகா  --இங்கு
எல்லோர்  மனதிலும்  இருப்பதும்  நீயே
கல்லாதவரை  கற்றிடச்  செய்வாய்  கந்தா --எங்கள்
கடம்பனும்  நீ தான்   காத்திட  வருவாய்  (கருணை )

பாடல்  வரிகளை  பாங்குடன்  அமைத்தாய் --உனது
பாதம்   பணிந்தால்   பகைகள்  விலகும்
நாடும்  அடியவர்க்கு  ஞானம்  அளிப்பாய் --உலகில்
நல்லவை  அருள்வதில்  வல்லவன்  நீ  முருகா  (கருணை ) 

வெற்றி 436

                       பல்லவி          
அலைவாழ்  குமரா  அடியேன்  அழைத்தேன் --என்
அருகில்  வருவாய்  உன்னருளினைப்  பெறவே  (அலை )
                       அனுபல்லவி
கலையாய்  கனியாய்  நற்கருணை  நிழலாய் --மனம்
கனிவாய்  கந்தா  கதியருள்  மன்னவா  (அலை )
                       சரணங்கள்
பழனியை  ஆளும்  பாங்குடை  முருகா -உன்னை
பணிந்தால்  தானே  நற்பதமே  பெறலாம்
இனிதாய்  செந்தமிழில்  இருப்பவன்  நீயே --இதை
நாம்  அறிந்தால்  ஏற்றங்கள்  வரலாம்  (அலை )

அரக்கர்  குலத்தினை  அழித்திட்ட  வல்லவா --உந்தன்
அடியார்  தமக்கே  அருள்  செய்  தலைவா
உருவாய்  குருவாய் உணர்வெனும்  பொருளாய் --எங்கும்
நிறைவாய்  தெரிவாய்  நெடு வேல்  முருகா  (அலை )

நாவினில்  இருப்பது  நாயகன்  மந்திரம் --என்றும்
நல்லதை  யளிப்பது  நம்பியின்  நற்குணம்
பாவினில்  உறைந்திடும்  எங்கள்  பரமன்  மகனே --உனை
பாடியே   துதித்தோம்  நற்பதங்கள்  பெறவே  (அலை )

சக்தியின்  மகனாம்  சரவணனென்னும்  வேலன் --வரும்
சங்கடங்கள்  தீர்ப்பான்  சமயத்தில்   குகனே
முக்தியை  யளிப்பது  முருகன்  அல்லவா --மன
மோகத்தை  நீக்கிடும்  மோஹனம்  சொல்லவா  (அலை )

காலம்    உந்தன்  கைகளில்  சுழலும் --உனது
கண்கள்  அசைவினில்  காவியம்  மலரும்
வேலினைக்  கொண்டே  வினைகள்  அழிப்பாய் --தன்னை
வேண்டுவோர்  தமக்கே  என்றும்  வெற்றியே  கொடுப்பாய்  (அலை )

ஞாயிறு, 13 மே, 2018

அருணாசலம் 435

 அடியார்  தொழுவது  அருணாசலமே --நம்
அரனாய் உள்ளது    அருணாசலமே
விடை  மேல்  வருவது அருணாசலமே --நமக்கு
விளக்கம்  தருவது   அருணாசலமே
தனியாய்  நிற்பது  அருணாசலமே --அந்த
தலைவன்  அவனே  அருணாசலமே
இனிதாய்  இருப்பது  அருணாசலமே -என்றும்
இறைவன்  என்பதும்  அருணாசலமே
நிட்டையில்  அமர்வது  அருணாசலமே -கொடிய
புலிசட்டை  அணிவது  அருணாசலமே
நிர்மலம்  என்பது  அருணாசலமே  --தினம்
நேரில்  வருவது  அருணாசலமே
அமைதி  அளிப்பது  அருணாசலமே --அவரது
அன்பு  என்பது  அருணாசலமே
சுமையைத்  தாங்குவது  அருணாசலமே --வரும்
துன்பம்   நீக்குவது   அருணாசலமே
காலம்  என்பது  அருணாசலமே --அதில்
கருணை  என்பது  அருணாசலமே
கோலம்  என்பது  அருணாசலமே --அதன்
கொற்றம்  என்பது  அருணாசலமே
மறைவாய்  தெரிவது  அருணாசலமே --உலகில்
நான்மறையாய்  புரிவது  அருணாசலமே
குறைகள்  களைவது  அருணாசலமே --இந்த
குவலயம்  காப்பது  அருணாசலமே


சனி, 12 மே, 2018

சங்கரி 434

                             பல்லவி
சத்திய  நெறி  வளர்   சங்கரித்   தாயே --இங்கு
சகலமும்  நீயே   தந்தருள்வாயே   (சத்திய )
                             அனுபல்லவி
பத்தரை  மாற்றுப்   பசும் பொன்னும்  நீயே --அந்த
பரமனின்  பக்கத்தில்   இருந்திடும்  தாயே  (சத்திய )

                             சரணங்கள்
எத்தரை    தீயரை   எதிர்த்தே   அழிப்பாய் --வாடும்
ஏழைகள்  வாழ்வினில்  இன்பத்தை  யளிப்பாய்
சித்தர்கள்  போற்றிடும்  ஜீவக  சிந்தாமணியே --உன்னை
சிந்தையில்  நினைத்தால்  ஜெயிப்பதும்  நிஜமே  (சத்திய )

புத்தர்  பிறந்த  பொன்னான  நாடு --தாயின்
புகழினைப்  பாடுவோம்  பொங்கும்  அன்போடு
இத்தரை  வணங்கிடும்  இணையிலா  செல்வி --நீயும்
ஏழைகள்   வாழ்ந்திட  நல்ல  ஏற்றம்  தர  வா  (சத்திய )

வல்லமை  பெருகியே  வளம் பெற  வேண்டும் --உன்னை
வாழ்த்திப்  பாடியோர்  நலம்  பெற  துணையாய்  வருவாய்
அல்லல்  நீக்கியே  உன்னருளினைப்  பொழிவாய் --எங்கள்
அம்மையே  உமையே  நாங்கள்  உன்னடி  பணிவோம் (சத்திய )

ஏழையர்  செல்வங்கள்  பெற்றிடச்  செய்வாய் --இனி
எல்லோர்  மனதிலும்  நிம்மதி  தருவாய்
கோல  விழி   திறந்து  குவலயம்  காப்பாய் --உனை
கும்பிடும்  அடியவர்  குறைகள்  களைவாய்  (சத்திய )

வெம்புலி யில்  அமர்ந்து  வெற்றியாய்  வருவாய்  --நாங்கள்
வேண்டும்  வரங்கள்   நிறைவாய்  தருவாய்
அம்புலி  போன்ற   அழகிய  திருவே --எங்கள்
அன்னையே  அறிவே  நீயும்  அருள் புரிவாயே  (சத்திய ) 

மருவூர் அரசி 433

                     பல்லவி
மருவூரில்  அரசாளும்  எங்கள்  மகராசியே --மண்ணில்
மனிதர்கள்   வாழ்வது  உங்கள்  அருளாசியே  (மருவூரில் )
                     அனுபல்லவி
உருகாத  மனமெலாம்   உருகிடச்   செய்வாய் --எங்கள்
உயிரானாய்  உணர்வானாய்  உத்தமி  சக்தியே  (மருவூரில் )
                      சரணங்கள்
பங்காரு   நெஞ்சமதில்   நீயும்  பதிவாகினாய் --வணங்கும்
பக்தர்கள்   இல்லத்தில்   என்றும்   நிதியாகினாய்
ஓங்கார  நாதத்தில்   உருவான  தேவியே --நாங்கள்
உன்முகம்  பார்த்திடில்  பறந்திடும்  துயர்களே   (மருவூரில் )

வேப்பிலை  துணையாலே   வினைகளை  மாற்றுவாய்  --நீயோ
வேதத்தின்  நிறைவாகி   என்றும்  மறையாகினாய்
காத்திட  வந்திடும்   எங்கள்  காருண்யச்  செல்வியே  --இங்கே
கற்பகமே  அற்புதமே   கனிந்தருள் புரிவாயே  (மருவூரில் )

உன்வாசல்  ஏழைக்கு   எந்நாளும்  படைவீடு  --நீதான்
உலகாளும்   உமையென்பது  தமிழர்கள்  ஏடு
கண் திறந்து  பார்த்திடில்  கவலைகள்  நீங்கும் --இந்த
கலிகாலம்  காண்கின்ற  எங்கள்  காமதேனுவே  (மருவூரில் )

செவ்வாடை  பக்தர்கள்  தினமும்  கூடுவார் --தேவி
உந்தன்  திருப்புகழ்  பாடி திருவருள்  நாடுவார்
பெய்யாத  மழை  சரிவரப்  பெய்திடச்  செய்குவாய் --எம்
பெருமாட்டி  நீ  விழி காட்டி   நல்லருள்  கூட்டுவாய்  (மருவூரில் )

தீராத  பிணி  களெல்லாம்  சிதறியே  ஓடும் --தேவி
உன்னருளாலே  வாழ்வில்   திருப்பமும்  கூடும்
மாறாத  மனம் கூட  ஒருநாள்  மாறியே  தீரும்  --எங்கள்
மாதரசி  உன்னருளாலே எங்கிலும்  மகிழ்ச்சியே  பொங்கும்  (மருவூரில் )

வெள்ளி, 11 மே, 2018

பரமசிவம் 432

 இன்னுயிர்  காத்திடும்  ஏந்தலும்   நீயே --உன்
இணையடி  நினைத்தாலோ  இன்பங்கள்  நிறையும்
மண்ணகம்  செழித்திட   மனம்  கனிவாயே --நீயிங்கு
மழைதனைப்  பொழிந்திட   மாநிலம்  செழிக்கும்

கனி தரும்  இனிமை  உனது  கருணை  அன்றோ --நற்
கதி பெற  உன்காலடி   நம்பினோம் என்றுமே
புனிதரும்  போற்றிடும்  எங்கள்  புண்ணிய  சீலா --உனது
புகழினைப்  பாடிட  நாங்கள்  புண்ணியம்  செய்தோம்

இனிவரும்  நாட்களில்  என்றுமே  நினைப்போம் --இங்கே
இழந்தவை  எல்லாம்   எங்களுக்கே  சேரும்
தனியாய்  நடனம்  ஆடினாய்  தில்லையில் --முடிவில்
இறைவியை  நீதான்   அன்றே   வென்றனை

காலினைத்  தூக்கியே  ஆடிடும்  தெய்வமே --உனது
கண்களைத்  திறந்து    இன்முகம்  காட்டுமே
நாளிது  இன்றே   நன்மைகள்  கிடைக்கும் --அருமை
நாயகன்  நினைத்தால்   நல்லதே  நடக்கும்

சிவமெனச்  சொன்னால்   பயமினி  இல்லையே --உன்
சீரடி   தொட்டால்  துன்பங்கள்  விலகிடும்
பரம  சிவமே  எங்கள்   பார்வதி  நாதா --உமையே
பணிந்தோம்  தொழுதோம்    நீயும்  பதமருள்வாயே 

கருணைக் கடல் 431

                       பல்லவி
கண் பார்  இனியே   எங்கள்  கயிலை  வாசா --நாங்கள் 
கதி பெற    அருள்  புரி   கருணை நேசா   (கண் பார் )
                       அனுபல்லவி 
எந்நாளும்  உனையே   எண்ணித்   துதிப்போம் --வரும் 
இன்னல்கள்  தீரவே   என்றும்   நினைப்போம்  (கண்பார் )
                      சரணங்கள் 
கன்னல்  தமிழே   கலைகளின்   வடிவே --உன்மனம் 
கனிவதனாலே   நற்கதி   பெறும்   உலகே 
அண்ணல்  நீயே   என்  அப்பனும்  நீயே  --தினம் 
அடியவர்   தொழுதிடல்  அடைக்கலம்  தாயே   (கண்பார்)

புலித்தோல்   அணிந்துமே   புன்னகை  புரிவாய் --இந்த 
பூமியில்   உள்ளோர்    புத்துயிர்   பெறுவார் 
காலத்தை   வென்றிட்ட   காவியத்  தலைவா  --உனது 
காலடி   பணிந்தோம்  நீயும்  கண்   மலர்வாயே  (கணபார் )

கையினில்   சூலம்   உனது  கண்களோ   ஆழம்  --சிரசில் 
கங்கை  தனையே   காத்திடும்   கோலம் 
அய்யனை  நினைத்தால்  வருவது  ஆனந்த  கீதம் --நாங்கள் 
அனுதினம்  கேட்பது   உனது   அருளெனும்   நாதம்  (கண் பார் )

இறவா    வரமதை    இன்றே   தருவாய் --உன் 
இணையடி  தனிலே   எங்களுக்கு  இடமும்  வேண்டும் 
கரையா   நெஞ்சமும்  கதி  பெற க்  கூடுமே --எங்கள் 
கருணைக்  கடலே  உமது  கண்கள்  திறவாய்  (கண் பார் )             

வியாழன், 10 மே, 2018

அன்புடனே 430

 கண்களைக்  காட்டியே  ஏன்  இழுத்தாய் --என்னை 
கற்பனை  ஊற்றினில்  மிதக்க  விட்டாய் 
புண்பட    ஏனின்று  பேசி  விட்டாய் --அடி 
புலம்பித்  தவிப்பது  உனக்குப்  புரியலையா  (ஆண் )

கொட்டி  நீயும்  அளக்க  வேண்டாம் --அட 
கோணங்கி  உனக்கு  திமிரும்  குறையலியா 
கிட்டவே  வந்தால்  உனது  எலும்புடையும் --நீயும் 
கிறுக்குத்  தனமா   என்கிட்டே  பேசிடாதே  (பெண் )

உன்னை  நினைச்சு   நானும்  இளைச்சேனே --என் 
உசுரையும்   கேட்டாக்க  நானும்  கொடுப்பேனே 
பெண்களை  பெருசாய்  மதிப்பவன்  நான் --என்னைப் 
புரிஞ்சவ   நீயுமிப்படி   பேசலாமா  (ஆண் )

காதுலே  பூ  வைக்க   நீயும்  பாக்குறியே --என் 
கவனத்தை  எங்கேயோ  திருப்புறாயே 
பாதையை  கொஞ்சம்  பாத்துப்  போய்யா --நானும் 
பத்ர காளி  போலவே  மாறுவேன்  தெரிஞ்சுக்கய்யா  (பெண் )

வயலும்   வரப்பும்  போலவே   நாமும்  வாழுவோம் --என்றும் 
வற்றாத  செல்வம்  சேர்க்க  ஒன்று  சேர்க்க  கூடுவோம் 
சுய தொழில்  ஒன்று  கற்றுத்   தேறுவோம் --கடவுள் 
துணையை   வேண்டி  அன்புடனே   ஆடுவோம்  (இருவரும் )


புனிதன் 429

                       பல்லவி
தமிழாய்  வாழும்  எங்கள்  தலைவா  வருவாய் --உலகில்
தர்மம்  காத்திடும்  திரு தணிகை  வேலா  (தமிழாய் )
                      அனுபல்லவி
அமிழ்தென  இனிப்பாய்  அடியார்  தமக்கே ---அந்த
அழகு  வள்ளியின்  அன்பா  நீ  வருகவே  (தமிழாய் )
                      சரணங்கள்
கைவேலுடன்  நீ யும்  காட்சி  அளிப்பாய் -இங்கு
கலங்கும்  அடியார்     கவலை  தீர்ப்பாய்
மெய்யாய்  நினைத்தவர்  மேம்படச்  செய்வாய் -மண்ணில்
மேலான  கலைகள்   வளர்ந்திட  வைப்பாய்  (தமிழாய் )

இரவும்  பகலுமாய்  எங்களைக்  காக்கும்  --எழில்
இறைவா   துணைவா  ஏழைகள்  தலைவா
உருவாய்  வருவாய்  உள்ளோர்  மனதில் -இங்கு
ஓங்கார  நாதத்தின்  உட்பொருள்  நீயே  (தமிழாய் )

சங்கம்  கண்ட எங்கள்  தமிழே  போற்றி --சிவ
ஷண்முகம்  என்னும் சற்குருவே  போற்றி
தங்கம்  போன்ற  குணத்தினன்  நீயே --இந்த
தாரணி  போற்றும்   தங்க   வேலனே   (தமிழாய் )

எங்கள்   வாழ்வு   என்றும்  சிறக்க --நீயும்
ஏறு மயிலில்  எழிலுடன்  வருவாய்
பொங்கும்  அலைகளில்  புனிதம்  நீயே --தமிழ்
புலவோர்  நாவினில்  பொலிந்திடும்   அருளே  (தமிழாய் )


போற்றி 428

 தேனே  போற்றி  திருவே  போற்றி
திருவிளையாடல்  புரிந்தாய்  போற்றி
ஊனே  போற்றி  உணர்வே  போற்றி
உலகினை  ஆளும்  உத்தமா  போற்றி

மானும்  மழுவுடன்  மகிழ்ந்தாய்  போற்றி
மையல்  உமைமேல்  கொண்டாய்  போற்றி
தேனும்  பாலும்  கலந்தாய்  போற்றி
தெருவினில்  மண்ணினை  சுமந்தாய்  போற்றி

நீரும்  நிலமுமாய்   ஆனாய்  போற்றி
நினைவில்  வாழும்  நிர்மலன்  போற்றி
பாரோர்  வணங்கிடும்  பரமனே  போற்றி
பணிந்தோர்  போற்றிடும்  பகவான்  போற்றி

எண்ணும்  எழுத்துமாய்  இருக்கிறாய்  போற்றி
இக பர   சுகமும்  அருள்வாய்  போற்றி
கண்ணப்ப  நாயனின்  கண்ணே  போற்றி
கதிர் வேலவனின்  தந்தையே  போற்றி

இடையினில்  மான் தோல்  அணிந்தாய்  போற்றி
ஏழைகள்  வாழ்வில்  ஒளியே  போற்றி
இமவான்  மகளினை  மணந்தாய்  போற்றி
ஈகை  மனதைக்   கொண்டாய்  போற்றி

பொன்னும்  மணியும்  தந்தாய்  போற்றி
பூக்கள்  போல  மலர்ந்தாய்  போற்றி
கண்ணும்  இமையுமாய்  கலந்தாய் போற்றி
கருணைக்  கடலே  போற்றி  போற்றியே 

புதன், 9 மே, 2018

சாதனை 427

 காதல்  ஒரு நாள்  கசந்து  போகும் --இங்கு
கன்னி  மனமே  கசந்து  போகும்
மோதல்  முடிவில்  நெருக்கமாகும் --வரும்
மோகம் மாறியே ஞானமாகும்

இரவும்  மாறிட  பகலுமாகும --வாடும்
ஏழை   உழைத்தால்  செல்வமாகும்
உறவும்  பின்னர்  பகையுமாகும் --வெறும்
உளறல்  மறுநாள்   போற்றுதலாகும்

கரையைத்  தாண்டி  அலைகள் சீறும் --வந்த
கவலைகள்  மாறியே  களிப்புமாகும்
குறைகள்  மறைய  நிறைவுமாகும் --நம்
குமரன்  வந்தால்  நம்  மனதும்   ஆறும் 

இளமை  சென்றால்  முதுமையாகும் -வந்த
இன்னல்  மாறிட  இன்பமாகும்
தனிமை  போக்கிட  துணையும்  சேரும் --செந்
தமிழைப்  பேசிட  மனதும்  இனிக்கும்

எழுத   எழுத  ஏற்றம்  கூடும் --இனிய
குரலில்  குயிலும்  பாடும்
உழுவதினாலே  பயிர்கள்  வளரும் --மக்கள்
உழைப்பதினாலே  நாடே  உயரும்

வந்தார்  என்றால்  போவதுமுண்டு --வாழ்வில்
இன்ப  துன்பங்கள்  வகையாயுண்டு
சொந்தம்  இங்கே  தொல்லையாகும் --வரும்
சோதனை   தாண்டிட   சாதனை யாகும் 

வடிவேல் 426

                         பல்லவி
வடிவேல்  முருகன்  வருவார்  என்று --நல் 
வரமே  வாழ்வில்  தருவார்  இன்று  (வடிவேல் )
                          அனுபல்லவி
அடியே  தோழி  அவர்  வரவில்லையே -இந்த
அபலை  எனக்கு  காதல்  தொல்லையே (வடிவேல் )
                           சரணங்கள்
கனியின்  இனிப்பும்  கசப்பாய்ப்  போச்சோ --இளம்
கன்னி  நிலமையும்   இங்கே  கானல் நீரோ
இனியும்  அவரே   இவண்  வருவாரா --ஏழை
என்ன தான்   நான்  செய்வேன்  கூறடி  தோழி  (வடிவேல் )

சிரிக்கச்  சிரிக்க   சிறையில்  இட்டார் --என்
சிந்தை  அணுக்களை  சிலிர்க்க  வைத்தார்
மணக்கும்  முல்லை  மலராய்  சிரித்தேன் --இன்று
மண்ணில்  மறையும்  சருகாய்  ஆனேன்  (வடிவேல் )

தனியாய்  அணைத்திட்ட  என்தலைவன்  எங்கே --தினமும்
தாளாது  தவிக்கும்  பெண்ணும்  இங்கே
முனிவர்  போற்றும்  முத்தமிழ்ச்   செல்வன்  --என்
மோகம்  தீர்த்திடும்  நாளினி  வருமோ ?(வடிவேல் )

கொடுத்து  எடுத்து  குலவியே  கிடந்தோம் --என்னுள்
கொள்ளை  இன்பம்  வழிந்ததை  உணர்ந்தேன்
தடுக்க    நினைக்கும்   தர்மன்  யாரோ --இன்றே
தயை  கூர்ந்து   இதனை  நீயும்  அறிந்திடுவாயே  (வடிவேல் )

காதல்  என்றால்  உலகில்  கண்ணீர்   தானோ --மனதில்
கவலைகள்  சூழ்ந்திட  கலங்குதல்  முறையோ ?
வேதம்  பயின்ற   வித்தகர்   சொல்வீர் --இனியே
விரைந்து  அவரை  என்னிடம்  சேர்ப்பீர்  (வடிவேல் )

செவ்வாய், 8 மே, 2018

அமுதம் 425

               பல்லவி
அழகாய்  தெரிவது  நம்  அழகன்  முகமே --உலகில்
அருளை   அள்ளியே  தருவது  அவனின் குணமே  (அழகாய் )
                 (அனுபல்லவி )
குளிர்ந்த  நிலவாய்  குகனே  தெரிவான் --நம்
குறையைச்  சொன்னால்  உடனே களை வான் (அழகாய் )
                சரணங்கள்
எதிர்ப்போர்  திருந்தவே  என்றும்  நினைப்பான் --அவன்
இல்லார்   தமக்கே  இன்னருள்   சுரப்பான்
கதிராய்  வந்தே   கருணை  புரிவான்  --இங்கு
கதிர்  வேலவனாய்  நமக்கு  நல்ல காட்சி  கொடுப்பான் (அழகாய் )

அருகினில்  வந்தால்  நம் அகமே  உருகும் --நம்
ஐயனை  நினைத்தால்  அனைத்துமே  கிடைக்கும்
உருகும்  மனங்களில்  உள்ளவன்  முருகன் --இதனை
உணர்வாய்  தினமே  உயர்வாய்  மறு கணமே  (அழகாய் )

தமிழினைக்  காக்கவே  தரணியில்  பிறந்தான் --நாம்
தாவெனக்   கேட்டால்  தள்ளாமல்  கொடுப்பான்
அமிழ்தாய்  அழகாய்  அரனின்  மகனாய் --அவன்
அருள் தர   வருவான்  அடியவர்  தமக்கே  (அழகாய் )

உள்ள   நாள்  மறவோம்  முருகன்  தனையே -நல்ல
உயர்வினைப்  பெறுவோம்   உத்தமன்  துணையால்
நிலையாய்  நிற்பான்  நிம்மதி   தருவான் -தினம்
நினைந்தவர்  அழைத்தால்   நிச்சயம்  வருவான்  (அழகாய் )


மணிவேல் 424

                   பல்லவி
சிவபாலா   சீலா  எங்கள்  திருவே  வருக --தினமும்
தொழுவோம்    உனை  நாம்  மறவோம்  (சிவ)
                   அனுபல்லவி
புவி  வாழ்  மாந்தர்கள்  என்றும்  புனிதம்  பெறவே --உன்னை
புரிந்தவர்  வாழ்வில்   அருளினை  வழங்கிடும்  (சிவ )
                    சரணங்கள்
தனியாய்  நின்றே   நம் தமிழினைக்  காத்தாய் --திருத்தணிகை
மலையினை  நீ  வாழும்  தலமாய்க்   கொண்டாய்
கனிவாய்   வந்தே  கருணை  புரிந்தாய் --எங்கள்
கதிர் காமத்திலே  அடியவர்  கண்களில்  நிறைந்தாய்  (சிவ )

வறியோர்   வாழ்ந்திட  நல்வரமும்  கொடுப்பாய்  -=என்றும்
வற்றாத  பொய்கை   குளத்தினில்   மலர்ந்தாய்
அறிந்தார்  தமக்கே   அமுதமாய்  இனிப்பாய்  --அவர்
அகமே  மகிழவே  நற்துணையாய்  வருவாய்  (சிவ )

இரு  மாதர்  புடை சூழ  எழிலாய்  வருவாய்  --நாங்கள்
இக பரம்  பெறவே  இனிதே  அருள்வாய்
உருவே  உயிரே  எங்கள்  ஒப்பிலா  மணியே  --இங்கு
உமையே  மறவோம்  உழைத்தே  உயர்வோம்  (சிவ )

தாயினை  மறந்தவர்  தண்டனை  பெறுவார் --நீர்
தன்னருள்  பொழிந்திட தகுதிகள்  உயரும்
மாயையை  அகற்றிடும்  மணிவேல்  முருகா --எம்
மனதினில்   நினைத்தோம்  மயில் மேல்  வருகவே  சிவ )

திங்கள், 7 மே, 2018

முத்திரை 423

                      பல்லவி
மஞ்சள்  வெய்யலிலே  மாலைப்  பொழுதினிலே --அன்று
கொஞ்சிட  வந்த  கோவலன்  யாரடி (மஞ்சள் )
                       அனுபல்லவி
தஞ்சமென்றவன்  என்னைத்  தழுவியே  அணைத்தான் --இந்த
தையல்  மீது  உள்ள  தாகத்தையும்  தணித்தான்  (மஞ்சள்)

                        சரணங்கள்
அஞ்சன  வண்ணன்  ஆருயிர்க்  கண்ணனோ --என்றும்
அடியவர்  மனம்  குளிரும்   ஆறுமுக  வேலவனோ
வெஞ்சமர்  களத்தினில்  விளையாடும்  வீரனோ --எங்கும்
வெற்றி  பல குவிக்கும்  வேங்கையின்  மை ந்தனோ (மஞ்சள் )

கையில்  என்னை  எடுத்தான்  கனி யமுதம்  கொடுத்தான் -இரு
கண்களால்   வளைத்து  என்னிடம்  காமரசம்  படித்தான்
பொய்யினில்   பிறந்த  புலவனோ  நானறியேன் --இந்த
பூங்கொடி  மீதினிலே  காதல்  போரினைத்  தொடுத்த   (மஞ்சள் )

வில்லாலடி  பட்டது  போல  வேதனை  மீறுதடி -காதல்
வேட்கை  எனை  வருத்த  வேறெங்கோ  சென்றானடி
பொல்லாத  ஆசைகள்  புதிதாய்க்  கிளம்புதடி -என்னை
புரிந்தவன்  அவனை  எண்ணி  புகலிடம்  தேடுதடி  (மஞ்சள் )

இரவென்றும்  பகலென்றும்  இருப்பது  மறந்ததடி --இன்று
என்னவன்  வரவில்லையென  ஏக்கம்  பிறக்குதடி
உறவினை  நாடியே  உள்ளம்  அலையுதடி --அந்த
உத்தமன் அழகன்  ராஜ முத்திரை   பதித்தானடி (மஞ்சள்)

காதல் கனவு 422

 நீ  சொன்ன  வார்த்தை   என்னடி  பெண்ணே --உன்னை
நிழலாய்  தினமும் தொடர்வேன்  கண்ணே
தேன்  உண்ணும்   வண்டாக  ஆனேன் -என்னுள்
திகட்டாத  பேரின்பம்   பாய்ந்திடக்  கண்டேன்

ஊர்விட்டு  ஊரெங்கும்  நீயும்  போனாய் --எனது
உயிரான  நீ போனால்  நானெங்கே  போவேன்
நல்ல பேர்  கெட்டுப்   போனாலும்  போகும் --உலக
பேரழகி  நீயின்றி   நான்  வாழ்தல்  ஏது

உன் கண்களோ  பாய்கின்ற  அம்பு --உனது
காதலில்  வீழ்ந்தேனே  நீயென்னை  நம்பு
இன்பமாய்  இருக்கத்   துணை  வேண்டும் --எனது
இதயத்தில்  குடி வைத்து  எப்போதும்  நினைப்பேன்

கலைகின்ற   கனவல்ல  நம்  காதல் --அது
காலத்தில்   அழியாத  அமர  காவியம்  அன்றோ
விலை சொல்ல  முடியாத  பொருளாவாய்  நீயே --இன்றே
விரைந்துமே  எனைக் காண  வந்திடுக  சகியே



காவியம் 421

 கண்ணோடு  கலந்ததும்  காதல்  வருதே -அவளை
கல்யாணம்  செய்யவே  கற்பனை  மிகுதே
பெண்மணி  அவளென்ன  பேசிடாப்  பதுமையோ -தினம்
பின்னால்  சென்றது  மிகவும்  பெரும் பிழை   தானோ

மான் விழியைக்  கண்டதும்  மயங்கியே  போனேன்  --என்
மையலைச்  சொன்னதும்   தையலும்  நின்றாள்
தேன் மொழி  வருமெனத்  தினமும்  தொடர்ந்தேன் --எனோ
திட்டும்  வசவும்  திரும்பவே  கிடைத்தது

காதலைச்  சொன்னால்  கடுப்பாய்  முறைப்பாள்  --நான்
கடிதம்  கொடுத்தால்  பல்லினைக்  கடிப்பாள்
சாதல்  செய்யவோ  சில  சங்கடம்  உண்டு  --அவளை
சாய்த்திட  நினைத்தால்  என்னை  சம்ஹாரம்  செய்வாள்

ஏட்டிக்குப்  போட்டி   எகனைக்கு  முகனை -இங்கே
எல்லாமே  தலை கீழ்   என்ன  தான்  செய்வேன்
ஏன்தான்  என்னைப்  பெற்றாள்  அன்னையே --இதனை
எண்ணியே  தினமும்  நொந்தேன்  தன்னையே

கனவா ? நனவா ? காதலே  தொல்லையா ---அந்த
கடவுள்  மனதிலே  கருணை  இல்லையோ
நினைவில்  அவளையே  நித்தம்  ரசிப்பேன் --அன்பில்
நினைந்து  நினைந்துமே  நெஞ்சம்  தவிப்பேன்

வருமோ  வாழ்வினில்  நல்ல  வசந்த  காலம் --இந்த
வனிதை  கிடைத்தால்  என் வாழ்வு  சுகமே
கள்ளம்   அறியாக்  காதல்  ஜெயிக்கும் --கடவுள்
கண்கள்  திறந்தால்  என்னுள்  காவியம்  பிறக்கும் 

ஞாயிறு, 6 மே, 2018

ஈஸ்வரி 420

 சமயபுரம்  மாரி  எங்கள்  சங்கரியே   வாருமம்மா --நாங்க
  அபய  கரம்  நீட்டுகிறோம்  ஆதரிக்க  வேண்டுகிறோம்
வேப்பிலையைக்  கையில்  ஏந்தி  விரைந்து நீ  வருவாயம்மா --வரும்
வினைகளைத்  தீர்த்திடவே  வேதவல்லி  வாருமம்மா  (சமயபுரம் )

மண்ணில்  மாரி  பொழிவதற்கு  மனமிரங்கி  வாருமம்மா --ஏழை
மக்கள்  நலம் பெறுவதற்கு  மாதா நீ   வரவேணும்
உந்தன்  மனமிளகி  உதவி  செய்ய  வந்திடம்மா -எங்க
உத்தமி  பத்தினியே  உமையெனும்  திரு மகளே  (சமயபுரம் )

வாசலில்  நிற்கிறோம்  வந்துவிட  மனமில்லையோ --என்றும்
வல்லமை  கொண்டவளே  வாழ்வரசி  பொன்மகளே
மோசமெனும்  செயல்களை  முன்வந்து  அழிப்பவளே --நீ
ஏழை   மானம்   காப்பதனால்  எங்கள்  குல நாயகியே  (சமயபுரம் )

வேம்பு  மரத்தடியில்  வித்தைகள்  காட்டுபவளே --இங்கே
ஓங்கார  நாயகியே  உலகளந்தோன்  சோதரியே
பாம்பு  குடை  பிடிக்க  பவனியாய்  வருபவளே --அன்பு
பார்வதியே  மலை மகளே  பரசிவன்  துணைவியே  (சமயபுரம் )

யாரும்  கடன்  வைத்தாலும்   மாரி  கடன்  கூடாது --இதனை
மறந்து  போனவர்க்கு  மலையளவு  வரும்  தீது
ஊரும்  உலகமும்  உன்னருளால்  செழிக்குமம்மா --நீயும்
ஒய்யார  நடை  நடந்து  உயிர்கள்  காத்திட  வாருமம்மா  (சமயபுரம்)

சித்திரை  முதல்  செவ்வாயில் உனது  சிங்காரத்  தேர்  வருமே --உலகில்
பத்தரை  மாற்றுப்  பசுந்தங்கம்   நீயல்லவோ
இத்தரையில்   வாழும்  எங்களைக்  காத்திடம்மா --அந்த
ஈசனார்  மனங்குளிர  ஈஸ்வரியே  வாருமம்மா  (சமயபுரம் )


திரு நாள் 419

                       பல்லவி
திரு நாள்  போல  வடிவேல்  வந்தான் --தினமும
அவனை  மனதில்  நினைத்தேன்  (திருநாள் )
                    அனுபல்லவி
உருகா   மனமும்  அவனால்  உருகிடும் --அவனது
உளமார்  கருணையை   இந்த  உலகே  போற்றிடும்  (திருநாள் )
                      சரணங்கள்
மலை மேல்  இருந்து  நம் மக்களைக்  காப்பான் --தமிழ்
மண்டலம்  காத்திடும்  நல்ல  தொண்டனும்  அவனே
நிலையாய்  உலகினில்  நிற்பவன்  முருகன் --நம்
நெஞ்சில்  நினைத்தால்  அவனே  நேரில்  வருவான்  (திருநாள்)

கனிவாய்  இதழோ  நம்  கண்ணிற்கு  விருந்து --அவனது
காலடி   ஒன்றே   கதி  தரும்   மருந்து
துணையாய்  தோழனாய்  துன்பம்  துடைப்பான் --தன்னை
துதிப்போர்  தமக்கு  என்றும்  தூணாய்த்   தெரிவான்  (திரு நாள் )

பிறவா  வரத்தினை  பெம்மான்   அளிப்பான் --அந்த
பித்தனின்   மகனாய்  நல்ல  முத்திரை  பதித்தான்
மறவா  மனம் தான்  மயிலோன்  கோவில் --இதனை
மனதில்  கொள்வதால்  எங்கும்  மகிழ்ச்சி  நிறையும்  (திரு நாள் )

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 418

 அடிவெள்ளியில்  தொழுவார்  ஆயிரம்  கோடி --எங்கள்
அகிலாண்டேஸ்வரி  அன்னையே  அழகே  வருவாய்
நாடி   வருபவருக்கு  நல்லருள்  பொழிபவளே -நாங்கள்
உன்னாலே  நன்மைகள்  பெற  வேண்டுமம்மா  (அகிலாண்டேஸ்வரி )

மா விளக்கேற் றியல்லோ  மங்கையர்கள்  பாடுவார் --உனது
மகிமை தனைச்  சொல்லி  வந்துள்ள  மக்களும்  ஆடுவார்
கோவிலைச்  சுற்றியே   குலவை  இடுவார்கள் --நீயும்
கோலவிழி  திறந்தால்   குளிர்ந்திடும்  பூமியன்றோ  (அகிலாண்டேஸ்வரி )

உச்சிப்  பகலில்  இங்கே  உமாபதி  பூசை --எங்கள்
உமையே  உன்னாலே  உயர்ந்திடவே  ஆசை
கச்சை  யணிந்திட்ட  கற்பகமே  தாயே --உந்தன்
காலடி  தொழுதேன்  காத்தருள்  செய்திடம்மா  (அகிலாண்டேஸ்வரி)

மஞ்சள்  குங்குமத்தின்  மகத்துவம்   நீயல்லவா --அந்த
மலையரசன்  பெற்றெடுத்த  மாமணி  திரு விளக்கே
நெஞ்சமதில்  நினைத்தே   நின்னைப்  பணிகின்றேன் --நீயும்
நேரினில்  வந்தே   நிம்மதி   யருள்வாயே  (அகிலாண்டேஸ்வரி )

மங்கலம்  பெருகிடவே  நம்மனைகளில்  வருவாள் --அந்த
மகாதேவன்  மனதில்  உறையும்  மாதரசித்   தாயே
எங்கிலும்   வளங்கள்  பொங்கிட  வேண்டுமம்மா --எங்கள்
இறைவியே  ஈஸ்வரியே  இவண்  நீ   வருவாயம்மா  (அகிலாண்டேஸ்வரி )

வேலன் 417

 கந்தா  வேலா  கடம்பா  வருவாய் -செங்
கதிர்  வேலா  கருத்தினில்  நிறைந்தாய்
செந்தமிழ்  காத்திடும்  செவ்வேள்  நீயே -என்
சிரமதை   தாழ்த்தி  உந்தன்  பத மலர்  பிடித்தேன் (கந்தா )

வேலினை  நினைத்திட  வெற்றிகள்  குவியும் -உன்னை
வேண்டுவோர்  மனதில்  அன்பு வெள்ளமே  நிறையும்
நாளை என்பதே  நல்லதின்  தொடக்கம் -இங்கே
நாயகன்  நீ  வர  எல்லாம்  நல்லதாய்  நடக்கும்  (கந்தா )

குன்றில்   ஆடிடும்  குருபரக்  குமரனே -எங்கள்
குறைகள்  தீரவே  நீயும்  மயிலினில்  வருவாய்
என்றும்  நிலைப்பது  இறைவன்  துணையே -இதனை
ஏற்றவர்  பெறுவது  எல்லா  நலமே   (கந்தா )

வாவென  அழைத்தால்  வந்திடும்  முருகா -எங்கள்
வள்ளி  மணாளனே  வல்லமை  அருள்வாய்
வயலூர்  பதிதனில்   வலம்  வரும்  முருகா -வள்ளல்
அருணகிரி  பாடிட  தமிழ் வரிகளைச்  சொன்னாய்  (கந்தா )

செந்தூர்ப்  பதி  திகழ்  செந்தில்  வேலா --பரம
சிவனார்  பெற்ற  சீலனும்  நீயே
முந்தைய  வினைகளை  முற்றிலும்  நீக்கி -எங்கள்
மூடத்தை ப்   போக்கி  மோட்சமும்  அருள்வாய்  (கந்தா)

சனி, 5 மே, 2018

காதல் முத்திரை 416

                       பல்லவி ;
உத்தமன்  யாரடி  சகியே -அவன்
ஊரென்ன  கேளடி  தோழி  (உத்தமன்)
                      அனுபல்லவி
நித்தமும்  எந்தன்  கனவில் -காதல்
முத்திரை  பதித்து  மோகத்தில்  ஆழ்த்தும்  (உத்தமன் )
                     சரணங்கள்
புள்ளி மயில்  ஏறிவரும்  வள்ளி  மணாளனோ -தினம்
பூங்குயில்  பாடிடும்  பூபாளமும்  அவனோ
கன்னிஎன்னை  அணைத்த  கட்டழகன்  யாரடி -இளம்
காதல்  பயிர்  வளர்க்கும்  கள்வனா  கூறடி  (உத்தமன் )

உறக்கம்  மறந்திட  அவனொருவனே  காரணமோ -எனது
உள்ளம்  கலங்கியே  உருகிடல்  சரிதானோ
கலக்கம்  பெரிதாகி  கண்களும்  மயங்குதே -அவன்
கள்வனோ  கவிஞனோ  கண்டுமே  சொல்லடி  (உத்தமன் )

நூலிழை  சேலையும்  நுட்பமாய்  நழுவுதடி -நான்
நோக்கிடும்  பொருளே  நூதனம்  ஆனதடி
ஆயிழை  நான் படும்  அல்லல்  தீர்ந்திடுமா --அந்த
ஆணழகன்  வீரனையும்  அன்பால்  வரச் சொல்லடி (உத்தமன் )

ஒன்றுக்குள்  ஒன்றாகி  உறவால்  இணைவோமடி -என்
உள்ளம்  களித்திடவே  உடனே  வரச் சொல்லடி
இன்றேனும்  நீயே  போய்   இழுத்து  வருவாயடி  --இந்த
ஏழை யின்  மனங்குளிர  இனிதே  புறப்படடி  (உத்தமன் )

சிரிக்கும் சிலை 415

 கன்னி  வயது  இளமை -அவள்
கன்னம்  இரண்டும்  செழுமை
பெண்ணில்  அவளே  பொறுமை -அதனை
புரிந்து  கொள்வது  திறமை

மைவிழி  சுழன்றிடும்  மாது -என்றும்
மனதினில்  இல்லையே  சூது
பொய்வழி  என்றுமே  போகாள் -இன்றும்
பூமியில்  எவரையும்  நோகாள்

சிரித்திட  சிந்துமே   முத்து -இவள்
சீதனமாய்  வந்திட்ட  சொத்து
மலைத்திட  வைத்திடும்  அழகு -இதனை
மனதில்  நினைத்தே  நீ  பழகு

பின்னல்  சடையோ  நீளம் -இந்த
பெண்கள்  மனமோ  ஆழம்
கன்னல்  தமிழில்  அழைப்பாள் -பிறரை
காதல்  கணையால்  துளைப்பாள்

இருக்கும்  காலம்  சிறப்பு -அவளை
இனிதாய்  காப்பது  பொறுப்பு
சிரிக்கும்  சிலையும்  இதுதான் -உந்தன்
சீவனைப்  பறித்திடும்  மதுதான்

காலம்  மாறிடக்  கூடும் -பலர்
கண்கள்  அவளையே  தேடும்
கோலம் கொடுத்திட  வருவாள் -நமக்கு
குளிர்ந்த  நிலவாய்த்  தெரிவாள் 

சிறப்பு 414

ஆண் :: நிலவும்  வானும்  போல -நம்
                 நெஞ்சம்  இணைந்தோம்  கண்ணே
                 பழகும்  தமிழின்  இனிமை -உன்னை
                  பார்க்கப்  பார்க்க  குளுமை

பெண் :  வானில்  வருகின்ற  நிலவோ -நீ
                   எனக்கு  வாய்த்த  நல்லழகோ
                  காலம்  தந்திட்ட  கொடையோ -நம்
                  காதல்  சிலருக்கு  தடையோ
ஆண் : 
                 தடைகள்  வந்தால்  உடைப்பேன் -உன்னை
                 தழுவியே  தினமும்  அணைப்பேன்
                 விடையைச்  சொன்னேன்  பெண்ணே -இங்கு
                 விளக்கம்  பெறுவாய்  கண்ணே

பெண் : என்றும்  காதல்  வாழும் -அதன்
                 இயக்கம்  மிகவும்   நீளம்
                 கன்றும்  பசுவும்  வேறா -இதனை
                கருத்தினில்  கொள்ளணும்  நேராய்

ஆண் :  ஊரார்   எதிர்த்த  போதும் -நம்
                உறவில்  மாற்றம்  இல்லை
                பாரோர்  போற்றிட  வாழ்வோம் -நமக்கு
                பத்துக்  குழந்தைகள்  வேண்டும்

பெண் :ஒன்றோ  இரண்டோ  சிறப்பு -தினம்
                உழைப்பது  நமது  பொறுப்பு
                நன்றி  சொல்லியே  வாழ்வோம் -வரும்
                நாட்களில்  வெற்றியே  காண்போம் 

வெள்ளி, 4 மே, 2018

கனி 413

 கனியாய்  இருந்தேன்  கடித்து  தின்றாய் -என்
காதல்  வாசலை  கள்வனே  திறந்தாய்
துணையாய்  நினைத்துமே  தோளினில்  சாய்ந்தேன் -இந்த
தோகை  மயிலும்  உன்னிடம்  சுகமும்  கண்டேன்  (கனியாய் )

பல நாள்  கழிந்தும்  என்  பதி முகம்   காணேன் -ஒரு
பத்து  மாசத்தில்  உரிய  பதிலும்  கிடைக்கும்
உள்ளம்  நினைத்தே  உருகியே  தவிக்கும் -என்
உயிரின் உயிரே  உன்மனம்  கல்லோ  (கனியாய் )

தனியாய்  இருந்தேன்  சுமையைக்  கொடுத்தாய் -ஒரு
தாயாய்  என்னையும்  மாற்றியே  வைத்தாய்
கருணை  இல்லையோ  என் கணவனே  சொல்லு -நான்
கவலையில்  அழுகிறேன்  காதலால்   அள்ளு  (கனியாய் )

உற்றார்  உறவுகள்   வக்கனை  பேசுமே -நான்
உன்னிடம்  இருந்தால்  உலகையே  வெல்லுவேன்
தூற்றுவோர் தலை குனிந்திட  துணைவனே  வருக -இந்த
துடி  இடை  தவிப்பது  என் தோழனே  அறிந்திடு  (கனியாய் )

வந்தால்  மட்டும்  நான்  வளமாய்  இருப்பேன் -நீ
வருவாய்  என்றே  எந்நாள்  நினைப்பேன்
சிந்தும்  கண்ணீர்  இந்த  ஜெகமெ  அறியும் -இனியும்
திரும்பிட  மறுத்தால்  என்னுடல்  மறையும்  (கனியாய் )

மறைவாக  வசிப்பவர்க்கு  மனதும்  எதற்கு -என்றும்
மகிழ்வாய்   பெண்ணிடம்  குடும்பம்   நடத்து
நிறைவாய்  வாழ்ந்திட  நீயிங்கே  வருக -எனது
நெஞ்சம்  மகிழ்ந்திட  நீயும்  நிஜமாய்  வருகவே 

தேன் மழை 412

 ஒரு  நாள்  வழியினில்  உனையே  கண்டேன் -என்
உள்மனம்  விரும்பவே  உன்னையும்  தொடர்ந்தேன்
பல நாள்  அன்பால்  பழகியே  வந்தோம் -நீ
பரிதவிக்க  வைத்தென்னைப்  பிரிந்து  சென்றாய் (ஒருநாள் )

வரும் நாள்  என்று  என  வருந்தி  அலைந்தேன் -எனது
வளங்கள்  அனைத்தையும்  உனக்கே  கொடுத்தேன்
திரு நாள்  கண்டிட  நம்  திருமணம்  வேண்டும் -நீ
திரும்பி  வந்திடில்  மண்ணிலே  தேன்  மழை  பெய்யும் (ஒருநாள் )

வாசலில்  தோரணம்  வருபவர்  ஆயிரம் -என்
வாழ்வு  சிறந்திட  நீயிங்கு  வருவது  முக்கியம்
ஆசை நினைவுகள்  அலையென  மோதுதே -என்
அருமைத்  தோழியே  என்னருகில்  வருகவே  (ஒருநாள் )

பொன்னும்  மணியும்  பூட்டியே  ரசிப்பேன் -உனை
புதையலைப்  போல  நித்தியம்  துதிப்பேன் 
மின்னிடும்  சுடரே  மீன்  விழியாளே -என்
கண்களைப்  போல  காவல்  காப்பேன் (ஒருநாள் )

எல்லாம்  இருந்தும்  என்னவள்  இல்லை -இருக்கும்
இளமை  யொன்றே   எனக்குத்  தொல்லை
பொல்லா  உலகம்  புழுதியைத்  தூற்றும் -இதனை
புரிந்து நீயும்  எனக்கொரு  புகலிடம்   தருவாய்  (ஒருநாள்)

கணிந்ததிருவே 411

 நிலையாய்  இங்கே  நிலைத்தவர்  இல்லை -உனை
நினையாது  வாழ்ந்தவர்  ஜெயிப்பதும்  இல்லை
கலையாய்  கவியாய்  கற்பகத்  தருவாய்  -எம்
கவலைகள்  நீக்கிடும்  காருண்ய  மூர்த்தியே  (நிலையாய் )

எல்லாம்  இங்கே  உந்தன்  செயலே -மாந்தர்கள்
இருப்பதும்  போவதும்   உன்  முடிவாலே
கல்லால  மரத்தடியில்  கனிந்த  திருவே -இன்றே
கண் பார்  எம்மையே  காத்திட  வருகவே   (நிலையாய் )

இல்லார்  இருப்பா  ரெனினும்  உன்மனம்  வெள்ளை -இந்த
உலகமே   உனதன்பு  ஆட்சியின்  எல்லை
நாளும்   உழைப்பவர்  நலமே  பெறுவார் -எங்கள்
நாயகன்   நினைத்தால் தானே  நற்கதி  கிடைக்கும் (நிலையாய் )

விடையினில்  ஏறியே  விரைந்து  நீ  வருக -தூய
வேள்வியின்  நாயகா  வினைகளைக்  களைக
தடைகள்  நீக்கியே  தண்ணருள்  பொழிக -உலகில்
தர்மம்  தழைக்கவே   தலைவனே  வருகவே  (நிலையாய் )

மலை  மகள்  பார்வதியின்   மணவாளன்  நீயே -உன்னை
மனதினில்  நினைத்தவர் மகத்துவம்  பெறுவார்
உலை  வீழ்  அரிசியாய்  உழன்று  தவிர்த்தோம் -நீ
உன்னருள்  பொழிந்திடில்  நன்னலம்  பெறுவோம் (நிலையாய் )


வியாழன், 3 மே, 2018

விருந்து 410

 இறைவா இதுவும்  முறைதானா-இதுவும்
உனக்கு  என்றும்  சரிதானா
கரையும்  மனது  என்றாரே -நீ
கல்லாய்  எனோ  இருக்கின்றாய்

கண்ணில்  காதல்  வளர்த்தேனே -அவளோ
கருகியே  வாதிட வைத்தாளே
உன்னில்  பாதி  என்றேனே -எனோ
உதறித்  தள்ளியே  சென்றாளே

சேர்ந்து  வாழ்ந்திட  நினைத்தேனே -என்னை
சோர்ந்து  போய் விட  வைத்தாளே
நேர்ந்து விட்டப்  பொருளானேன் -அவளை
நினைந்து  நெஞ்சில்  தணலானேன்

இரக்க  குணம்  பெண்ணிடம்  உள்ளதென்பர் -நமது
எலும்பை  நொறுக்கி  ரசம்  குடிப்பார்
அரக்கி  போல்  தினம்  ஆடுகிறாள் -கைகளில்
அகப்பட்டதை  எடுத்து என்மேல்  வீசுகிறாள் 

காதல்  என்பது  பொய்யாகும் -அதனால்
கவலைகள்  வருவது  மெய்யாகும்
சாதல்  ஒன்றுதான்  மருந்தாகும் -அவள்
சம்மதம்  தந்தால்  புது  விருந்தாகும்

இன்றே  உலகீர்  முடிவு  செய்வீர் -இனிமேல்
பெண்கள்  பக்கம்  செல்லாதீர்
என்றும்  ஆண்கள்  தனி ஆளே -இதனை
ஏற்றுமே  நடப்பீர்  இந்நாளே









போதனை 409

 எத்தனை  எத்தனை  மனிதரடா -அதில்
எவரோ  ஒருவர்  புனிதரடா
புத்தன்  போதனை  மறந்தோமே -நாளும்
புதுமைகள்  கண்டிட  முனைந்தோமா

கூடிக் கூடி  கலைந்து  போனோம் -நாம்
கொள்ளை  அளவில்  வேறு பட்டோம்
நாடும்  நடப்பும்   அறியவில்லை -ஒரு
நல்லது  எதுவென்று  புரியவில்லை

பசப்பு  வார்த்தையில்  மயங்குகிறோம் -தினம்
பாடுபட  ஏனின்னும்  தயங்குகிறோம்
கசப்பு  எண்ணத்தை  வளர்க்கின்றோம் -வீணில்
கடமை  என்பதையும்  மறக்கின்றோம்

தன்னைத்  தானும்  நம்பவில்லை -உலகில்
தர்மம் என்றால்  விளங்கவில்லை
பொன்னைத்  தேடியே  அலைந்தோமே -அதற்கான
பொருளினை  ஈட்டிடத்  தெரிந்தோமா

தப்பும்  நியாயமாய்  படுகிறது -செய்யும்
தவறே   மனிதரைக்  கொல்கிறது
உப்பும்  உயிரை   எடுக்கிறது -எங்கும்
உண்மை   ஒன்று தான் ஜெயிக்கிறது 

கண்ணன் 408

 கண்ணா  கண்ணா  கார்முகில்  வண்ணா உன்னை
காண வில்லையேல்  கண்ணீர்  வழியும்
வெண்ணைத்  திருடியே  வேடிக்கை  செய்தாய் -காட்டில்
இடையராய்  மாறியே  ஆநிரை  காத்தாய்  (கண்ணா )

கோபியர்  மனதில்  குடித்தனம்  புகுந்தாய் -அந்த
கோவர்த்தன  கிரியினை  குடையாய்ப்  பிடித்தாய்
பாவிகள்  அழிந்தனர்  பாரதப்  போரில் -எம்
பரந்தாமா  உனைவெல்ல  யாருண்டு  இப்பாரில்  (கண்ணா )

வேய்ங்குழல்  ஊதியே  வேணுகானம்  இசைத்தாய் -நீ
வெஞ்சமர்  போரினில்  கம்சனை  அழித்தாய்
ஆயர்குலம்  காத்திட்ட  அண்ணலும்  கண்ணனே -கோகுலத்தில்
ஆடிப்பாடியே  தினமும்  அகமகிழ்ந்தாயே  (கண்ணா )

அர்ஜுன வீரனுக்கு   அன்பான  துணைவன் -அன்பு
குந்தி தேவிக்கோ  அருமை  மருமகன்
கற்றவர்  தொழுதிடும்  கண்கண்ட  தெய்வமே -உலகில்
சற்குணன்  ஸ்ரீதரன்  சகலமும்  நீயே  (கண்ணா )

நிற்பது  என்பது  இங்கு  நெடுமலை  திருப்பதி -நீ
நீடுதுயில்  கொள்வது  ஸ்ரீரங்கமெனும்  பதி
கற்பது  என்பது  கண்ணனின்  வாய்மொழி -உன்னை
காண்பது  ஒன்றே   கதி பெற   நல்வழி (கண்ணா )

வருவாய் 407

                           பல்லவி
முருகா  முருகா  வருவாய்  முருகா -எங்கள்
முன்னே  வருவாய்  உன்னிரு  துணைவிகளுடனே (முருகா )
                          அனுபல்லவி
பய மே  இல்லை  பணிந்தார்  தமக்கே -நல்ல
பலனே  பெறுவார்  நினைத்தால்  உனையே  (முருகா)
                          சரணங்கள்
அலைவாழ்  செந்தூரில்  அமர்ந்த  வேலா -அன்று
அருணகிரி  பாடிட  முதலடியும்  கொடுத்தாய்
கலைசூழ்  நிலவே   எங்கள்  கதியும்  நீயே -இன்று
கன்னல்  தமிழினில்  கவி மலர்  சொரிந்தோம்  (முருகா)

கைவேல்  கொண்டு  கயவரை  அழித்தாய் -உகந்த
காலத்தில்  வந்தே  கவலைகள்  ஒழித்தாய்
வையகம்  போற்றிடும்  வடிவேல்  குமரா -நீ
வந்ததும்  தானே  வல்லமை  பெறுவோம் (முருகா )

முருகா  என்றால்  முன்வினை  தீரும் -உள்ள
மோகம்  நீங்கியே  முக்தியும்  சேரும்
அறிந்தவர்  தமக்கு   அபயம்  நீயே -நாங்கள்
அன்பால்  அழைக்கிறோம்  அருள்  புரிவாயே  (முருகா )

திருவே  குருவே  எங்கள்  தேவசேனாபதி உன்னை
தினமும்  துதித்தால்  சேரலாம்  நற்கதி
வருவாய்  என்றே  வருந்தி  அழைத்தோம் -மண்ணில்
வளங்கள்  பெருகிட  வாழ்வு  செழித்திட  (முருகா)

புதன், 2 மே, 2018

சுதந்திரம் 406

 தான்  வாழ  வேண்டி  தர்மம்  அழிப்பவர் -பின்னர்
தலை குனிந்து  உலகோர்  முன்  நிற்பரே
ஏன் வாழ வேண்டும்  இவர்கள்  உலகிலே -அதனால்
இதனை  நன்றாய்  அறிய வேண்டும்  பெண்களே

ஆசை  பலவும்  சொல்லியே  ஆழம்  பார்ப்பது -சிலர்
அடுத்தவர்  மடியினிலே  கையை  வைப்பது
வேசித்தனம்  என்பதனை  விரும்பிச்  செய்வது -இன்னும்
வேண்டும்  பணமென்று  தினம்  வெந்து  போவது

கார்  பணம்  வீடுஎன்று  காசைத்  தேடுவார் -எனோ
கயமை வழி  நிதமும்  சென்று  கல்லா   கட்டுவார்
ஊர்கள்  தோறும்  வீடுகள்  வாங்கி  உத்தமனாவார் -வீணே
உருப்படாத  வேலை  செய்து  உழன்று  திரிவார்

நாட்டைக்  காக்க  வருபவர்  யாருமேயில்லை -இங்கு
நன்றி என்ற   வார்த்தை கூட  நம்மிடம்  இல்லை
வேட்டை யாடி  வாழ்வதற்கோ  நமது  சுதந்திரம் -இந்த
வீணர்களால்  இங்கே   பலர்  மனித  யந்திரம்

ஒற்றுமையாய்  வாழ்வோமென  உறுதி  எடுப்போம் -நமது
ஓங்கு  புகழ்  பாரத(ம் )பெயர்  உலகில்  சிறக்கும்
வெற்றியென்ற  குறிக்கோளை  மனதில்  நிறுத்து =இதனை
விவரமாகப்  புரிந்து  கொண்டவர்  கைகளை  உயர்த்து

    

எதிர் மறை 405

 நிலவில்  வருவது  மயக்கம் -காதல்
நினைவில்  வருவது  கலக்கம்

காற்று  எங்கிலும்  வீசும் -நல்ல
காதலை  கண்கள்  பேசும்

இன்றும்  நேற்றாய்  மாறும் -அந்த
இளமையும்  முதுமை யாகும்

கன்று  தாய்ப்  பசு  தேடும் -இளம்
காளையோ  பசுவினை  நாடும்

தளிரும்  சருகாய்  மாறும் -ஒருநாள்
சத்தியம்  பொய்யாய்  தெரியும்

அன்பே  விஷமு  மாகலாம் -வந்த
ஆசையே  மோசமு  மாக்கலாம்

இன்பமே  துன்பமாய்  போகலாம் -சூழும்
இருளே   ஒளியாய்  விளங்கலாம்

நட்பே  பகையு  மாகலாம் -வரும்
நல்லவை  தீயது  மாகலாம்

இரவும்  பகலாய்  போகலாம் -இனி
இனிமை கசப்பாய்  தோன்றலாம்

உறவே   வெறுப்பாய்  காணலாம் -மண்ணில்
உண்மையும் பொய்என  நினைக்கலாம் 

எந்த நாள் 404

 தள்ளாடும்  நிலையினைக்  கொடுத்தாள் -தாயின்
தயவால்   நானும்  பிழைத்தேன்
சொல்லாலே  தினமும்  அடித்தாள் -பல
துன்பங்கள்  அவளால்  அடைந்தேன்

நில்லாமல்  ஓடிடும்  காலம் -அவளின்
நினைவாலே  உண்டாகும்  சோகம்
கல்லாத  மடையன்  நானா நானும்
கரைமீறி  வீழ்ந்திட்ட   மீனா

கணைகளை  என்மீது  சொரிந்தாள் -வீணே
கற்பனையில்  அவளேதான்  மிதந்தாள்
துணையென்று  நானும்  நினைத்தேன் -தேடும்
துன்பங்கள்  என்பதனை  மறந்தேன்

வில்லாக  வளைந்திடும்  புருவம் -அவள்
விளைந்துவிட்ட  எழிலான  பருவம்
துள்ளாத  மனம் கூடத்   துள்ளும் -அந்த
துடியிடை  எவரையுமே  கொல்லும்

ஈரெட்டு  வயதுள்ள  செல்வம் -அதன்
இளமையால்  வெல்கின்ற  கர்வம்
தேர்போல  தெருவினில்  வந்தாள் -அவளே
என்னைத்  தேடி  வரும் நாள்   எந்த நாளோ 

ஒன்றுள் ஒன்று 403

 ஆண் :: பொன்னில்  வடித்திட்ட  சிலையோ -நீ
                 பூவில்  விளைகின்ற  மணமோ
 பெண் :கண்ணா   நீயென்ன  கவியோ -இது
                 காதல்  தருகின்ற  நிலை யா
  ஆண் ::எண்ண  எண்ணத்  துடிப்பேன் -உன்னை
                 இறுக்கித்  தழுவிட  நினைப்பேன்
  பெண்::உன்னை  என்னுள்  வைப்பேன் -என்
                  உயிரையும்  உனக்காய்  கொடுப்பேன்
   ஆண் ::கண்ணிலே  தோன்றும்  எதுவும் -என்
                  கண்ணே  உனது  முகமே
    பெண் :என்னில்  உள்ளதை  எடுத்து -நான்
                  என்றும்  உனக்கே  கொடுப்பேன்
     ஆண் பொங்கி  வருகின்ற  நிலவு (ம் )-நீ
                  சிந்திடும்  புன்னகைக்  கிணையாமோ
     பெண:காற்றில்  ஏறியே  பறப்போம் -நம்
                  காதல்  பயிரினை  வளர்ப்போம்
    ஆண் :நேற்று   இன்று  நாளை என்று -எண்ணும்
                 நினைவை  கொஞ்சம்  மறப்போம்
  இருவரும் : ஒன்றுள்  ஒன்றென  ஆனோம் -நம்
                          உறவில்  இன்பங்கள்  தொடரும்