திங்கள், 23 ஜூலை, 2018

vஅறுபடை 523

                                   பல்லவி
அறுபடை  வேலனே  எங்கள்  அழகிய  பாலனே  --உன்னை
அனுதினம்   தொழுதிட  நல்  ஆனந்தம்  பெருகுமே  (அறுபடை )
                                  அனுபல்லவி
சிறுவனாய்ப்  பழனியில்   அன்று  சினமுடன்  நின்றாய் --நீயும்
சீறியே  போரினில்  பகைவரை  வென்றாய்     (அறுபடை )
                                  சரணங்கள்
குலமகள்  வள்ளியைக்   கொஞ்சிடும்  தலைவா --நீ
குறைகளைக்  கேட்டதும்  அவைகள்  மறைந்திடச்   செய்குவாய்
கரத்தினில்  வேலுடன்   இங்கே  காற்றென  வருவாய் --உன்னை
கண்டதும்  கண்களில்  கண்ணீர்  மழையெனப்  பொழியுமே  (அறுபடை )

குஞ்சரியை  மணந்த  குன்றக்குடி  வேலா --என்றும்
கும்பிடும்  அடியவர்  நல்ல  நம்பிக்கை  பெறுவார்
தஞ்சம்  அளித்திடும்  தண்ணருள்  செல்வமே --தினம்
தயவினைப்  பொழிந்தே  தாயெனக்  காப்பாய்  (அறுபடை )

ஆறுமுகம்   இன்றி  வேறு  யாரும்  அறிமுகம்  இல்லையே --இந்த
அய்யனை   அன்றி  உய்ந்திட  வேறு வழி  தொல்லையே
ஏறு மயில்  ஏறி வந்தே  ஏழையைக்  காப்பாய் --எம்
இதயத்தில்  கோவில்  உனக்கு  இனிதே  அமைப்போம்  (அறுபடை )

தமிழினைக்  காக்கவே  சங்கத்  தலைமையினை  ஏற்றாய் -பெற்ற
தந்தைக்கே   குருவாய்   அன்று  தனயன் நீயும்  அமைந்தாய் 
அமிழ்தினும்  இனியவா   எங்கள்  ஆறுமுக   வேலவா --இந்த
அவனியைக்  காத்திட  இன்றே   அன்புடன்  வருகவே  (அறுபடை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக