புதன், 18 ஜூலை, 2018

குமரன் 517

                                        பல்லவி
வரம் தர  வருவான்  வடிவேலனெனும்  முருகன்  --அவனை
வணங்கினால்   பெறலாம்  வாழ்வினில்  நலமே  (வரம் )
                                         அனுபல்லவி
பதம் பெறும்  நல்ல பலம்  வரும்  சிவ பார்வதி  மகனால் --அவனது
பார்வை   பட்டிட   வந்த  பாபங்கள்  பறக்குமே   (வரம் )
                                           சரணங்கள்
கையினில்  வேலுடன்   காவலாய்  வருவான் --தன்
காலடி  பணிந்தோரைக்  கைகொடுத்தும்  காப்பான்
உய்திட   நல்வழி  அந்த  உத்தமனே  தருவான் --அடியவர்
உள்ளமே  கோவிலாய்   உவகையில்  அமர்வான்  (வரம் )

தமிழினைக்   காப்பவன்  தண்டமிழ்ச்  செல்வன் --அவன்
தரணிக்கு  கிடைத்த  தத்துவப்  பொருளாம்
அமிழ்தினும்  இனியவன்  அன்பர்க்கு  உரியவன் --நாம்
அனுதினம்   நினைத்திட   அமுதமாய்  இனிப்பவன்  (வரம் )

என்றுமே  அழகன்   எங்களின்   குமரன் --அவனை
இருகரம்  தொழுதிட   இன்னல்கள்  விலகும்
நன்றியைக்  காட்டிட  நாயகனைப்  பணிவோம் --இந்த
நாளிலே  அவன்பெயர்   நம் நாவிலே  ஒலிப்போம்  (வரம் )

சொல்லிற்கு  அடங்காத  சுந்தரன்  நம்  குமரன் --சோம
சுந்தரர்  மகனென  ஜொலிப்பவன்  கந்தன்
புள்ளி மயில்  ஏறிவந்து    புவனமதைக்  காப்பான் --நாம்
புரிந்து  கொண்டால்  வரும்  புண்ணியம்   பல  கோடி  (வரம் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக