திங்கள், 2 ஜூலை, 2018

நிரந்தரம் 500

                                        பல்லவி
நிரந்தரம்  என்பதால்  நிந்தனைத்  தொழுதேன் --இங்கு
நீ  தரும்  பதம்  பெற   நிம்மதி  அடைவேன்  (நிரந்தரம் )
                                       அனுபல்லவி
வரம்  தரும்  வள்ளலே  வந்தருள்  புரிவாய் --நீ
வந்ததின்  பின்னரே  அந்த  வறுமைகள்  விலகும்  (நிரந்தரம் )
                                         சரணங்கள்
கரமது  கொண்டு  வந்த  கவலையை  மாற்றுவாய் --உனது
கருணையினாலே  உலகில்    கனமழை  பொழிகுவாய்
சுரங்களில்  ஏழினை  சுகமென இங்கே  வைத்தாய் --அதில்
ஸ்ருதியை  லயமாக்கி  இசையில்  சொர்க்கத்தைக்  காட்டினாய்  (நிரந்தரம் )

காலினைத்  தூக்கி  அன்று  களி நடம்  ஆடினாய் --தெய்வ
கன்னியை  வென்று  எமக்கு  களிப்பினை  காட்டினாய்
நூலினில்   வாழ்ந்திடும்  நுண்கலைப்  பொருளே -உன்னை
நோக்கிடில்  பல்கலை  நூறாய்  வந்து  சேருமே   (நிரந்தரம் )

பனி மலை  அமர்ந்தவன்  வரும்  பகைதனை  வென்றவன் --அன்பில்
இனியவன் ஈசன்நீ  ஏழைக்கும்  இகபர ம்   அருளுவாய்
முனிவரும்  தேவரும்  உனதருள்   தினம்  தேடுவார் --உள்ள
மும்மலம்  நீக்கியே  அவர்க்கும் மோட்சமும்  தருவாய்  (நிரந்தரம் )

இனியென்ன   துணையென்ன  இங்கே  எல்லாமே  நீ தான் --எமக்கு
இன்னருள்   புரிவதில்  அன்பு  மன்னவன்   தேன்  தான்
கனிவுடன்  அருளினை த்  தந்திடு  கயிலை யம்பதியே --உன்
காலடி  தொழுததால்  உலகில் கவலைகள்  இனி  இல்லையே  (நிரந்தரம் ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக