திங்கள், 16 ஜூலை, 2018

நலம் பெற514

                                  பல்லவி
இந்நாள்  இனிதாக  இறைவனே  அருள்வாய் --தினம்
உன்னைப்  பணிவதால்  சிறப்புகள்  பெறுவேன்  (இந்நாள்)
                                  அனுபல்லவி
கண்ணிலாடிடும்  மணியே  கருணை  வடிவே --நீயும்
பொன்னார்  மேனியில்  புலித்  தோல்  அணிந்தாய்   (இந்நாள் )
                                 சரணங்கள்
கண்கள்  மலர்ந்து  கவலைகள்  தீர்ப்பீர் --இந்த
காசினி  எங்கும்   கனமழை  பொழிவீர்
மண்ணில்  வளங்கள்  மணம்  பெற  வைப்பீர் --வாழும்
மாந்தரின் மனதிலே  மலர்ச்சியைத்  தருவீர்  (இந்நாள் )

அம்மையும்  அப்பனும் நீ  ஆடிடும்  தெய்வமே _என்
அகமதில்  வைத்து  உம்மை  அனுதினம்  தொழுவேன்
ஐம்பெரும்  பூதங்கள்   அடக்கிய  புனிதரே --உமது
அருளினில்  தானே  இங்கு   அனைத்துயிர்  வாழும்   (இந்நாள் )

சக்தியினைத்  தருவது  சதா சிவம்  அல்லவா --உம்
சன்னதி  வந்திடில்   இனிஇங்கு  சங்கடம்  ஏதய்யா
முக்தியை  அருளிடும்  மோஹன  ரூபனே---வீண்
மோகத்தை  நீக்கி  நல்ல  ஞானத்தை  வழங்கிடு  (இந்நாள் )

சிவனை  நினைப்பவர்  தோற்றதும்  இல்லை -அந்த
சிவத்தை  மறந்தவர்  ஜெயிப்பதும்  இல்லையே
புவனங்கள்  முழுவதும்  புண்ணியன்  ஆட்சி --அதனை
புரிந்து  கொண்டாலே  பலர்க்கு  புலப்படும்  மீட்சி  (இந்நாள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக