வெள்ளி, 27 ஜூலை, 2018

பொன்மணி 529

வாழ்வினில்   காதல்  வருமா --நல்
வசந்தமும்   அதிலே  வருமா
சூழ்ந்தது   என்னமோ  சோகம் --என்
சுந்தரி   உன்மேலே   மோகம்

இரவில்  எழுந்து   சிரிப்பேன்  --உன்னை
இருகரம்  கொண்டு   அணைப்பேன்
துறவெனும்  நிலையினைத்  துறந்தேன்  --உனது
துடியிடை   கண்டு நான்  துடித்தேன்

வளைக்கரத்தால்  எந்தனை   வளைத்தாய் --உன்
வாலிப   அழகினால்   மலைத்தேன்
கலைஎழில்  பருவம்  காட்டினாய்  --என்
கண்களில்   தீயினை  ஏன்  மூட்டினாய்

சிரித்து   சிரித்துமே   என்னைக்  கெடுத்தாய்  --என்
சிந்தனை   முழுவதும்   நிறைந்தாய்
பிரித்துப்  பார்த்திடத்  தெரியலே  --வந்த
பித்தமும்   எனக்கின்னும்  தீரல்லே

வாழ்ந்திட  வந்திடு   என் கண்மணி --நல்ல
வாழ்வுக்கு  உயிரான  அன்புப்  பொன்மணி 
சூழ்ந்திடும்  பொழுதும்  இன்பமே  --எந்தன்
சொர்க்கமே  உன்னிடம்  நானும்  தஞ்சமே

ஓருடல்  ஈருயிர்  என்றெனக்  காணுவோம் --நம்
உன்னதக்   காதலைப்  போற்றுவோம்
பேருடன்  பெருமைகள்   சூழலாம் --சிவ
பெருமான்   அருளினால்  வாழலாம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக