திங்கள், 2 ஜூலை, 2018

கன்னி இளமானே 499

 கண்ணிலே  தெரிவாயோ  கன்னி இளமானே --இங்கு
 காதலிலே துடிக்கிறேனே   கவலையில்  நானே
பொன்னிலே  பூத்தவளே  புன்னகை  மலரே --நீ
பூமிக்கு  வந்திட்ட   வெண்ணிலவு  தானே

அம்பு  விழி  அழகால்  ஆடவரை  வென்றாய் --நான்
அடிபணிய  உந்தன்  மனம்  இளகிடுமோ  பெண்ணே
கம்பனுக்கு  புகழ்  கொடுத்த  கன்னித்  தமிழ்  போல --இனி
எந்தனுக்கு  அருள்  செய்ய  எண்ணிடுவாய்  கண்ணே

கரம்  பிடித்து  சுரம்  சேர்க்க  நல்ல காலம்  வந்தது --உன்
கயல்  விழிகள்  பட்டதால்  எனக்குள்  காமம்  சுரந்தது
வரம்  தரவே  வந்திடுக  எந்தன்  வஞ்சி இள  மானே --நான்
வாசலிலே  நிற்பேனே   என்  வள்ளல்  உன்னைத்   தேடி

மனம்  கொண்ட  நினைவுகள்  மணமாக  வைப்பாய் --உன்
மை  விழியால்  எனை  அணைத்து  மயங்கிட செய்வாய்
கனி தரும்  சுவையெலாம்  கன்னி  இதழிற்  கீடோ --நானும்
கவிஞனாக  மாறினேனே  உன்மேல்  கவிதைகள்  பாட

ஒன்றுக்குள்  ஒன்றாகி  இனிய  உறவினைக்  கண்டோம் --உள்ள
சுகம்  அத்தனையும்  நாம்  ஒரு நாளில்  மகிழ்வோம்
என்றும்  இந்த  வாழ்வினில்   நல்ல  இன்பங்கள்  காண்போம் --அதை
இறைவனின்  அருளாலே  நிலையாய் இங்கே   இனிதாக  வாழ்வோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக