செவ்வாய், 24 ஜூலை, 2018

பரம தயாளன் 524

                                         பல்லவி
அழகிய  தோளினன்   அன்பினில்  சீலன் --நாம்
அனுதினம்  வணங்கிட  அருள்  தரும்  பாலன்  (அழகிய )
                                        அனுபல்லவி
பழமுதிர்  சோலையில்  சிவப் பழமென  முருகன் --அவனை
பணிந்திட  வரம்  தரும்   பரம  தயாளன்   (அழகிய )
                                         சரணங்கள்
நினைத்தவர்  நெஞ்சினில்   நிலையாய்  இருப்பான் --நாம்
நேர்வழி   நடந்திட   துணையாய்  வருவான்
வினைகளை  அழித்து  நல்  வெற்றிகள்  தருவான்  --தன்னை
வேண்டிடும்  மாந்தர்க்கு   தூண்டுதல்   புரிவான் (அழகிய )

இதம் தரும்  சொல்லினால்  ஏழையைக்  காப்பான் --அவரது
இன்னல்கள்  நீக்கி  வாழ்வில்  நன்னலம்  சேர்ப்பான்
உதவிகள்  கேட்டிடில்   உடன்   ஓடியே  வருவான் --அந்த
உத்தமன்   சத்தியன்   நாம்  நித்தமும்  தொழுவோம்  (அழகிய )

மயிலினில்  வந்தே  நம்  மனங்களை  ஆள்வான் --எங்கும்
மங்கலம்   பொங்கிட  அதனை  தங்கிடச்  செய்வான்
பயமேதும்  இல்லையே   பணிந்தவர்  தமக்கே --அவனை
பாடிடப்  பாடிட  நல்லப்  பலனுண்டு  நமக்கே  (அழகிய )

சிவபாலன்  குருநாதன்   செந்தூரில்   வேலன்  --அவனை
சிந்தையில்  வைத்திட   செல்வங்கள்  நிறையும்
புவனங்கள்  ஆள  வந்த  எங்கள்   புண்ணிய  மூர்த்தி --தினம்
புகழ்ந்து  பாடிட   நமக்கு  வந்திடும்  கீர்த்தி             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக