ஞாயிறு, 22 ஜூலை, 2018

சகலநலம் 521

                                    பல்லவி
கனிந்தருள்  புரிகுவாய்  கந்தனெனும்  வேலா --உனது
காலடி  பணிந்தேன்  நானும்  பல  நாளா   (கனி )
                                   அனுபல்லவி
மனதினில்  கோவிலை  உனக்காய்  அமைத்தேன்  --அதில்
மகிழ்வுடன்  அமர்ந்திட  உன்னை  நான்  அழைத்தேன்  (கனி )
                                  சரணங்கள்
இனியென்ன  குறைகள்  எனக்கிந்த  உலகிலே --எம்
இறைவனே  நீயின்றி  யாருண்டு  உறவிலே
துணையென  வருகின்ற  தூயவன்  நீ  அன்றோ --தினம்
திருப்புகழ்  ஓதுதல்  நான்  செய்யும்  தவம்   ஒன்றே  (கனி )

கருணையைப்  பொழிபவன்  கலைகளில்  சிறந்தவன் --ஏழை
கண்களில்  நிறைந்தவன்  காட்சியில்  எளியவன்
அருமையில்  அரியவன்  அருள்தனை  அருள்பவன்  --நல்ல
ஆனந்தம்  கொடுப்பவன்   நமது  அன்பிற்கு  உரியவன்  (கனி )

மனதினில்  நினைத்தால்  மயிலினில்  வருபவன் --நம்
மனைகளில்  செல்வம்  மகிழ்வினைத்  தருபவன்
இனியவன்  முருகன்  எங்கள்  ஈசனின்  திருமகன் --என்றும்
இவன்  பெயர்  கூறிட  தேனினும்  இனிப்பவன்  (கனி )

மங்களப்  பொருளாய்  மனைகளில்  வசிப்பவன் --நம்
மங்கையர்  வணங்கும்  குங்கும  நிறத்தவன்
சங்கடம்  தீர்ப்பவன்  நம்  சரவணப்  பெருமகன் --அவன்
சன்னதி  சென்றால்  சகல  நலமும்   அளிப்பவன்  (கனி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக