
பொன்னிற வானம்
பூத்திட காலையில்
புதியவன் வந்தான் -ஒரு
புதுமையை கண்டேன் தோழி
தன்னை மறந்து
விண்ணில் அலைந்த
தலைவனை கண்டேன் தோழி -நெஞ்சில்
தயக்கமும் கொண்டேன் தோழி
தாமரை மகளின்
தளிருடல் தழுவி
தலைவன் சிரித்தான் தோழி -உடன்
தலை குனிந்தா ளந்த தலைவி
புள்ளினம் கூவிட
புது மலர் வாழ்த்திட
மெல்ல சிரித்தாள் தலைவி -அவன்
மேகத்தில் நுழைந்தான் தோழி
முல்லை சிரிப்பினில்
மோகன அழகில்
கொள்ளை யடித்தான் தோழி -மனதை
கொண்டே சென்றான் தோழி
ஆலய மணிகள்
அண்ணலின் வரவை
ஆடியே முழக்குதடி-உள்ளம்
தினம் நாடியே செல்லுதடி
எத்தனை உள்ளங்கள்
என்னென்ன எண்ணங்கள்
எங்கும் அவனேயடி -இன்னும்
எப்படி உன்னிடம் சொல்வேனடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக