திங்கள், 18 மே, 2009

மேகம்


இரவும் பகலும் நினைத்திருப்பேன் -உன்னை
இரண்டு கைகளால் அணைத்திருப்பேன்
உறவை எண்ணி சிரித்திருப்பாய் -வரும்
உணர்ச்சியில் யாவையும் மறந்திருப்பேன்

காலம் முழுதும் கலந்திருப்பேன் -நான்
கனவில் கண்டு ரசித்திருப்பேன்
ஞாலம் பார்த்து தலை குனிவாய்-அந்த
நாணத்தில் இன்பம் கண்டிருப்பேன்

காணும் பொருளில் உன்நினைவு -சிறிது
கண்களை மூடினால் உன்கனவு
நாளும் கிடந்து வாடுகிறேன் -இளைய
நங்கையே உன்னை தேடுகிறேன்

துன்ப மேகம் கலையாதோ -என்
சோகம் ஒரு நாள் விடியாதோ
கண்ணை உறக்கம் தழுவாதோ -கொண்ட
காதல் இன்றே வாழாதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக