புதன், 27 மே, 2009

நேர்மை


செக்கர் வானத்தில் இளம் பரிதி -அண்ணன்
ஜெயமே அடைவார் இது உறுதி
கொக்கும் தவளையும் கூச்சலிடும் -அவர்
கொடுக்கும் அடியில் தலை கவிழும்

வெட்கம் இல்லாத சிறு நரிகள் -அவரை
வீழ்த்த நினைக்கிற தற்குறிகள்
நிச்சயம் அழிவது உண்மையடா -என்றும்
நேர்மையே உலகினில் நிலைக்குமடா

வெற்றி திரு மகள் அழைக்கின்றாள் -அண்ணனை
விரும்பி தழுவிட விழைகின்றாள்
சுற்றி நாமும் சூழ்ந்திருப்போம் -அந்த
சுகத்தை எண்ணி உழைத்திடுவோம்

செவ்வாய், 26 மே, 2009

காவியம்


பொங்கல் இங்கு பொங்கட்டுமே -பொங்கி
புத்தொளி எங்கிலும் தங்கட்டுமே
திங்கள் மாரி பொழியட்டுமே -பொழிந்து
தேசம் சிறப்புற வாழட்டுமே

வள்ளல் குணமிங்கு வளரட்டுமே -வளர
வறுமை உலகினில் குறையட்டுமே
கள்ள எண்ணம் மறையட்டுமே -மறைய
கருணை உள்ளம் பிறக்கட்டுமே

அமைதி இனிமேல் நிலவட்டுமே -நிலவி
ஆனந்தம் வீட்டினில் நிலைக்கட்டுமே
கலைகள் பெருகி சிறக்கட்டுமே-நாடே
காவியம் ஓவியம் ஆகட்டுமே

பாராட்டு


கவிஞர் குலத் தலைவன்
கற்பனைக்கு மறு கம்பன்
புவியரசு போற்றி நிற்கும்
கவியரசு எங்கள் அண்ணன்

கை அசைந்தால் காவியமாம்
கண் திறந்தால் நாடகமாம்
மெய் எங்கும் தமிழ் மனமாம்
மேன்மையே அவர் குணமாம்

வெள்ளி விழா கவிதை தந்தாய்
வெற்றி பல காணவேண்டும்
உளமகிழ வாழ்த்தி நின்றோர்
வுவகையுடன் வாழி வாழி

சூரியன்


பொன்னிற வானம்
பூத்திட காலையில்
புதியவன் வந்தான் -ஒரு
புதுமையை கண்டேன் தோழி

தன்னை மறந்து
விண்ணில் அலைந்த
தலைவனை கண்டேன் தோழி -நெஞ்சில்
தயக்கமும் கொண்டேன் தோழி

தாமரை மகளின்
தளிருடல் தழுவி
தலைவன் சிரித்தான் தோழி -உடன்
தலை குனிந்தா ளந்த தலைவி

புள்ளினம் கூவிட
புது மலர் வாழ்த்திட
மெல்ல சிரித்தாள் தலைவி -அவன்
மேகத்தில் நுழைந்தான் தோழி

முல்லை சிரிப்பினில்
மோகன அழகில்
கொள்ளை யடித்தான் தோழி -மனதை
கொண்டே சென்றான் தோழி

ஆலய மணிகள்
அண்ணலின் வரவை
ஆடியே முழக்குதடி-உள்ளம்
தினம் நாடியே செல்லுதடி

எத்தனை உள்ளங்கள்
என்னென்ன எண்ணங்கள்
எங்கும் அவனேயடி -இன்னும்
எப்படி உன்னிடம் சொல்வேனடி

சொர்க்கம்


சிங்கார கொட்டடி சேலை கட்டி -ஒரு
செந்தாழம் பூவினை தலையில் சூட்டி
மங்கிய ஒரு நாள் காலைஇலே-புது
மங்கை வந்தாள் தேரினிலே

தங்கத்தை யள்ளி குடித்து விட்டு -இளன்
தாமரை கொடியில் உடலெடுத்து
செங்கனி வாயில் முத்துடைத்து -இன்று
தேரினில் வந்தவள் யாரெநிலொ
(வேறு )
திங்களும் புதனும் போன்றவளாம்
தேசத்தை காப்பதில் வல்லவளாம்
எங்குமே இன்பம் தருபவளாம்
இராறு மாதத்தில் வருபவளாம்

வந்ததும் வரமே தருபவளாம்
வாழ்வுக்கு துணையே புரிபவளாம்
சொந்தம் கொண்டிட சோதரியாம்
சொர்க்கத்தை தந்திடும் சித்திரையாம்

திங்கள், 25 மே, 2009

தாய்


மார்கழி மாசி இருவரிடை நல்ல
மகவாய் பிறந்த தைமகளே
போர்குரல் காதினில் கேட்கிறதா -உள்ளம்
பொங்கி கொதிப்பது புரிகிறதா

யாரெதிர் வரினும் விட மாட்டோம் -உள்ள
யாவையும் அரிதென கொள்ள மாட்டோம்
நேரெதிர் சென்றே போரிடுவோம் -என்றும்
நேர்மையே உணர்வாய் கொண்டிருப்போம்

கொட்டி முழக்கிடும் வெடியோசை -காது
குளிரக் கேட்பதில் தனி ஆசை
வெட்டி வீழ்த்திடும் பல சடலம் -எமது
வெற்றி கதைகோர் புதுப்படலம்

பொங்கி பீறிடும் செங்குரிதி -எமக்கு
புதுமையை கூறிடும் சிற்றருவி
எங்கும் முனகிடும் சோக ஒலி -இரவில்
இமைகளை மூடிடும் இன்ப ஒலி

காலடி மிதிபடும் சடலங்கள் -எங்கள்
கைவண்ணம் காட்டிடும் எழிற்சிலைகள்
இன்னும் சொல்லிட பலவுமுண்டு -ஆனால் -
இருந்திடும் நேரமோ மிகவும் கொஞ்சம்

வாரி வழங்கிடும் வள்ளல்களும் -உள்ள
வழிமுறை தெரிந்திட்ட நல்லவரும்
ஊரினில் இருப்பதை நீயறிவாய் -என்ற
உண்மையை நன்மையை யாமறிவோம்

பொங்கிடும் உணர்வினில் இருப்பவளே -எம்
பூமியை காத்திடும் தூயவளே -உன்
தங்க திரு முகம் நினைக்கின்றோம் -நீ
தாயாகி இன்றே காத்திடுவாய்

வசந்தம்


பழுத்த இலை உதிரும் -புது
பச்சை இலை துளிரும்
திளைத்த இன்பம் வேண்டி -வண்டு
தேன் மலரை மூடும்

குயில்கள் கூட்டம் கூடும் -தங்கள்
குரலை கொஞ்சம் காட்டும்
மயீல்கள் வந்து ஆடும் -இள
மான்கள் எங்கும் ஓடும்

காமன் அங்கு வருவான் -உடன்
காதல் பாணம் தருவான்
வேகம் மீறி போகும் -நெஞ்சில்
விரக தாபம் சேரும்

கொட்டும் அருவி யோரம் -காதல்
கொதிப்பும் அடங்கி போகும்
வெட்ட வெளியில் நடக்கும் -அது
விடியும் வரைக்கும் கிடைக்கும்

காற்று வந்து வீசும் -நல்ல
கவிதை உடனே பிறக்கும்
நேற்று இன்று நாளை -என்ற
நினைவே மறந்து போகும்

இன்பம் இன்பம் இன்பம் -அதில்
இணைய மறுத்தால் துன்பம்
அன்பு பெருகி சிறக்கும் -உலகின்
அமைதி காலம் வாழி

வெள்ளி, 22 மே, 2009

சித்திரை


சித்திரை இன்று பிறந்ததினால்
செல்வம் எங்கும் நிறையுமம்மா
இத்தரை வாழும் உறவுகளேலாம்
இன்ப கடலினில் நீந்து தம்மா

கல்வி கலைகள் வளருமம்மா
காவியம் ஓவியம் பெருகுமம்மா
எல்லையோர சண்டை எல்லாம்
இனிமேல் நலமாய் முடியுமம்மா

பஞ்சம் பசிபிணி தீருமம்மா
பாரதம் சிறப்புற விளங்குமம்மா
தஞ்சம் தஞ்சமுன் பாதமம்மா
தாயாகி எங்களை காருமம்மா

நாளை


தேடி அலைவதென்ன -கண்கள்
சென்றே வருவதென்ன
வாடி மெலிவதென -அந்த
வள்ளலை காணாமல்

அன்றொரு நாள் வந்தார் -எனக்கு
ஆயிரம் தான் தந்தார்
கன்றிய என்மேனி -காதற்
கதை சொல்லுமே தோழி

நிலவிங்கு வர வேண்டாம் -வந்து
பல நினைவுகள் தர வேண்டாம்
மலருக்கு மணம் வேண்டாம் -மலர்ந்து
மயக்கத்தை பெற வேண்டாம்

வானுக்கு ஒளிஇல்லை -பேதை
வாழ்வுக்கு சுகமில்லை
தேனுக்கு சுவைஇல்லை -எந்தன்
தெய்வத்தை காணும் வரை

வீசிடும் பூங்காற்றே -என்
வேதனை கேளாயோ
பேசிடும் நிலை யானேன்றே-சற்று
புரிந்திட நீயும் சொல்லாயோ

பாடிடும் பறவைகளே -நான்
படும் துயர் அறிவீரே
நாடிய நாயகனை -அழைத்து
நாளைக்கே வருவீரோ

உத்தமன்


உத்தமர் ஒருவர் மறைந்து விட்டார் -இந்த
உலகினை காத்தவர் பிரிந்து விட்டார்
சத்திய வழிஇனில் நடந்து வந்தார் -என்றும்
சாந்தமே உயிராய் கொண்டிருந்தார்

கூடி வாழ்தல் இன்ப மென்றான் -பிறர்
கொள்கைக்கு மதிப்புமே தந்திருந்தான்
நாடு உயர வேண்டு மென்றான் -அதற்கு
நல்லன செய்திட தூண்டி நின்றான்

அல்லும் பகலும் பாடு பட்டார் -நாட்டின்
அவலத்தை போக்கைஇல் கூடு விட்டான்
சொல்லும் செயலுமாய் இணைந்து நின்றான் -நமை
துடிக்க விட்டேன் பறந்து சென்றான்

இனிமை


வண்ண மலர் சோலையில் -தினம்
வந்து பாடும் குயிலே
என்ன சொல்லி பாடுகிறாய் -அங்கே
யாரை நீ தேடுகிறாய்

காதல் எண்ணம் வந்ததோ -மனதில்
கலக்கம் அதிகம் தந்ததோ
கீதம் சோகம் ஆனதா -நெஞ்சில்
கிளர்ச்சி பொங்கி போனதோ

காக்கை கூட்டில் பிறந்ததால் -என்றும்
கருமை உனக்கு கிடைத்ததோ
கருமை அதிகம் உள்ளதால் -உன்
கானம் இனிமை யானதோ

இறைவன் தனது கருணையை -உலகில்
எடுத்து சொல்ல வேண்டியே
குறைவில்லாத நல் இனிமையை -கருங்
குயில் உனக்கு தந்ததோ

வியாழன், 21 மே, 2009

அப்பா


உயர்ந்த குடியில் பிறந்தீர் -நீவிர்
உலகம் மெச்ச வாழ்ந்தீர்
கயவன் செய்த செயலால் -அன்று
கல்லு முள்ளில் நடந்தீர்

அன்பு காட்ட எனக்கு -ஏனோ
அருகில் நீங்கள் இல்லை
பண்பு ஊட்டி வளர்த்தாள் -நான்
பாடி புகழும் என்தாய்

ஈர்க்கும் முகத்தின் அழகு -உள்ள
இரக்கம் அவரது செய்கை
யார்க்கும் உதவி வேண்டின் -தன்
யாக்கை கூடவும் தருவார்

கணவன் அருகில் இருந்தாள் -அவள்
காலம் முழுதும் உழைத்தாள்
துன்பம் சூழ்ந்த போதும் -தனது
தோளில் வைத்து சுமந்தாள்

உழைத்து உழைத்து உயர்ந்தீர் -தொழிலில்
உன்னத புகழினை பெற்றீர்
நிலைத்த பெருமை அடைந்தீர் -என்
நெஞ்சினில் கோவில் கொண்டீர்

திங்கள், 18 மே, 2009

மேகம்


இரவும் பகலும் நினைத்திருப்பேன் -உன்னை
இரண்டு கைகளால் அணைத்திருப்பேன்
உறவை எண்ணி சிரித்திருப்பாய் -வரும்
உணர்ச்சியில் யாவையும் மறந்திருப்பேன்

காலம் முழுதும் கலந்திருப்பேன் -நான்
கனவில் கண்டு ரசித்திருப்பேன்
ஞாலம் பார்த்து தலை குனிவாய்-அந்த
நாணத்தில் இன்பம் கண்டிருப்பேன்

காணும் பொருளில் உன்நினைவு -சிறிது
கண்களை மூடினால் உன்கனவு
நாளும் கிடந்து வாடுகிறேன் -இளைய
நங்கையே உன்னை தேடுகிறேன்

துன்ப மேகம் கலையாதோ -என்
சோகம் ஒரு நாள் விடியாதோ
கண்ணை உறக்கம் தழுவாதோ -கொண்ட
காதல் இன்றே வாழாதோ

கற்கண்டு


அல்லி மலர் சோலையடி -உன்
அன்பு மனம் வேலியடி
கன்னி முகம் கண்டதுமே -நெஞ்சில்
காதற் கலை மீறுதடி

வான மென்னும் பூந்துகிலே -கூட
வந்து செல்லும் கார்முகிலே
மோன சுகம் கண்டதுண்டோ -நீ
முத்த மழை உண்டதுண்டோ

துள்ளி வரும் மானினமே -அழகு
தோகை இவள் மேனி என்ன
முல்லை மலர் பூச்சரமோ -தீரா
மோக மது இருப்பிடமோ

கெண்டை விழி சண்டையிட -தினம்
கிண்கிணி ஒலி தாளமிட
வண்டு மன வாசலிலே -கொஞ்சும்
வஞ்சி வந்த மாயமென்ன

புன்னகையில் தேன் சுரக்கும் -இந்த
பூவை இதழ் நிலவிருக்கும்
கன்ன மிரண்டும் தேன்குடமோ -அது
கற்கண்டு சுவை தருமோ

ஊரறிய மாலை சூட்டி -அன்று
உன்னுடனே நான் கலந்து
பேறு பெறும் காலமெப்போ -நமது
பிள்ளை வரும் கோலமேப்போ

ஒளிக்கண்ணி


தீப வோளிகன்னி வந்தாள் -எங்கும்
தேனான சுகம் கோடி தந்தாள்
சோக நிலை இனிமேல் மறையும் -மண்ணில்
சூழும் வளம் பொங்கி நிறையும்

புத்தம் புதிய உடை அணிந்து -மனம்
பூரிக்க அவள் கருணை நினைந்து
நித்தம் நேர்மை வழி நடப்போம் -என்றும்
நிலைக்கும் புதுமை வாழ்வு படைப்போம்

வாழ்க்கை


வாழ்க்கை என்பது சிறைவாசம் -இதில்
வருவதும் போவதும் வனவாசம்
யாருக்கும் நிலையில்லை சுகவாசம் -நன்றாய்
அறிந்தும் எதுக்கு வெளிவேஷம்

சொந்தம் தருவது தொல்லையடா -அது
தொடர்ந்தால் துயரமே எல்லையடா
வந்தவன் கதையில் வரவுமில்லை -அவன்
வாழ்ந்ததை பார்க்கையில் மீதமில்லை

சேர்த்திட மனிதன் எண்ணுகிறான் -உடன்
தீமைகள் செய்வதில் முந்துகிறான்
காத்திட்ட பொருளினை அடையாமல் -தானே
கடைசியில் எங்கோ ஓடுகிறான்

நாடு




நல்லவர் இருப்பது நாடு -அது
நல்லவர் வாழ்ந்திடும் வீடு
தொல்லை வந்திடில் சாடு -தினம்
சூழ்ந்துமே வெற்றியை தேடு

சத்தியம் பெற்றிட்ட உருவம் -என்றும்
சஞ்சலம் கொண்டிடா பருவம்
இத்தரை காத்திடும் சொத்து -இங்கு
எளிமைக்கு கிடைத்த முத்து

நீதியை பேணிட நிற்கும் -அதன்
நேர்மையில் எதிரியும் வெட்கும்
சாதியை ஒழித்திட முந்தும் -எங்கும்
சமரசம் பொங்கிட செய்யும்

ஊருக்கு உழைத்திட வந்தாய் -தன்னிடம்
உள்ளது யாவையும் தந்தாய்
பாருக்குள் தெய்வமாய் ஆனாய் -நான்
பாடிட பொருளாகி நின்றாய்