ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

காவிரி 7 3 9

  அன்பினால்     உலகை    ஆள்வதற்கு   ---நம்
அன்னை       காவிரி      புறப்பட்டாள்
தென்னகம்     வாழ்வில்    சிறந்திடவே    ---இந்த
தெய்வ       மங்கை     வெளிப்பட்டாள்

குறுகி       வளைந்து     குதிக்கின்றாள்   ---சிறு
குமரி         போல்     சிரிக்கின்றாள்
அருவியாய்ப்     பொங்கி   வழிகின்றாள்   ---நாம்
அருகினில்     வந்திட     அழைக்கின்றாள்

மண்ணைப்        பொன்னாய்    மாற்றுகிறாள்    ---பெரும்
மகசூல்        அள்ளித்        தருகின்றாள்
கண்களைப்    போன்றவள்    காவிரியே   ---அவள்
கருணையில்     வாழ்வது      நம்குலமே

உழவர்       கண்களில்      தாயாவாள்   ---தமிழர்
உள்ளங்களில்     என்றும்     சேயாவாள்
புலவர்       பாடிடும்      பொருளாவாள்   ---இந்த
புவனம்       காக்கும்      அருளாவாள்

நதிகள்       எல்லாம்       பொது உடமை   ---அவளை
நன்றாய்ப்      புரிந்திடல்     நம்கடமை
சதிகள்       செய்வது      சரியில்லை    ---இதனை
சகலரும்      உணர்ந்தால்    பகையில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக