வெள்ளி, 29 ஜூன், 2018

நல்ல பிள்ளை 494

 அழகினைக்  கண்டேன்   அமுதமாய்க்  கொண்டேன் --நான்
பழகவே  நினைத்து   அவளது  பக்கம்  சென்றேன்
விழிகளை  உருட்டி    என்னையே  விரட்டி  யடித்தாள் --அந்த
வெற்றி  செல்வியை   விரும்புதல்  என்ன  தவறா ?

களி நடம்  புரிவாள்   எந்தன்   கனவினில்  வருவாள் --துணை
எனக்கு  வாழ்விலே  அவளது  தோழமை  வருமா
தனியாய்  திரிந்தேன்  தவிப்பினில்  மிதந்தேன் --நல்
தாமரை  மலராள்   என்னைத்  தழுவிடத்  தயக்கமா

இரவினில்  நடப்பேன்  இனி துயில்  மறந்தேன் --அவள்
உறவை  நினைப்பேன்  உள்ளம்  மகிழ்வேன்
ஊரார்  நகைப்பார்   உடலும்  நொந்தேன் --நானோ
வேறோர்  பெண்ணை   விரும்பிட  மாட்டேன்

கண்ணீர்  மழைதனில்  கரைந்திட  வைப்பேன் --என்
காதலைச்  சொல்லி   அவள்  கவனம்  இழுப்பேன்
என்னுள்  அவளே  எங்கிலும்  நிறைந்தாள் --தினம்
இருகரம்  கொண்டு  இழுத்து  அணைப்பேன்

உறவினில்  கலந்து  என்றும்  ஒன்றாய்  இருப்போம் --நிதம்
இளமை  விருந்தினை  இருவரும்  நன்றாய்  ருசிப்போம்
பேரினைச்  சொல்லிட எமக்கு  நல்ல  பிள்ளை  பிறப்பான் --அவனை
பேணிக்  காத்துமே  உலகினில்  பெரும்  புகழினை  அடைவோம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக