திங்கள், 18 ஜூன், 2018

இமைகள் 482

 கலைந்தோடும்  மேகங்கள்  கதை  சொல்லுமா --என்
கண்ணாளன்  இடம்  சென்று   நலம்  கேட்குமா
அலைந்தாடும்  மனதில்  அவர்  ஆட்சியே --அன்பரை
அடைந்தாலோ  என்வாழ்வில்  துயர்  மீட்சியே

நினைவாலே  அவரையே  தினம்  காணுவேன் --அந்த
இன்பத்தை  நினைத்தே  நலம்  பேணுவேன்
கனவெல்லாம்  நனவாக  காலம்  தரலாம் --என்
காதலன்  கரம் பற்ற  நல்ல வேளை  வரலாம்

மூடாத  விழிகளில்  என் மோகம்  தெரியும் --என்
முன்னாலே  அவர் வந்தால்  முகம்  நிலவாகுமே
தேடாத  வழியில்லை  இங்கே  தினம்தோறுமே --நீயும்
தரிசனம்  தந்தால்  தான்  என்மனம்  ஆறுமே

பெண்ணாகப்  பிறந்து  எனோ  பேதை  ஆகினேன்  --அவர்
பின்னாலே  சென்றதால்  பெரும்  பிழை  தாங்கினேன்
எந்நாளும்  வருகவென  நான்  பாடுவேன் --எனது
இமைகள்  மூடும்வரை அவரை  நித்தம்  தேடுவேன்

இளமானைத்  தேடியே  அவரும்  வரவேண்டுமே --என்னோடு
இணைகின்ற  சுகவாழ்வு  நான்  பெற  வேண்டுமே
களவினில்  கலந்து  விட்டேன்   அந்தக்  கள்வனிடமே --அவரை
கண்டதும்  துயர்  தீரும் காதல்  சுவை  கூடுமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக