புதன், 27 ஜூன், 2018

பிரியமானவள் 492

 விண்ணிலோடும்  வெண்ணிலவிற்கு  விழிகள்  தெரியுமா --அது
விரைந்து  எங்கோ  போவதாலே  வழிகள்  புரியுமா
பெண்ணிலாடும்  மனதின்  ஆழம்  புரிய  முடியுமா --வீணே
வேலையின்றி  சுற்றுவதால்   யாருக்கு  லாபமோ

கண்கள்  தொட்டதால்    களிப்பில்  மிதந்தேன் --அதில்
காதலென்ற  பயிரினை  நன்றாய்  வளர்த்தேன்
எண்ணமதைச்  சொல்லிடவே  நானும்  பயந்தேன் --நீ
இருப்பதற்கு  வேண்டுமென  என்னிதயம்  திறந்தேன்

நாளும்  நான்  உன்னைத்  தினமும்  தொடர்ந்தேன் --நடு
இரவில்  புது  உறவில்  நலமாய்ப்  படர்ந்தேன்
வேளை  வந்தது  என்றுதானே  நினைத்தேன் --எனோ
சிலர்  விரித்து  வைத்த  வலையினில் விழுந்து  விட்டேன்

உன்னை  விட்டு  வெகு  தூரம்  எங்கோ  பறந்தேன் --இனிய
உறவினை   எதனாலோ  நானும்  மறந்தேன்
பொன்னினைப்  புழுதியில்  தூக்கி  எறிந்தேன் --அன்று
புத்தி   கெட்டுப்  போனதாலே  புலம்பித்  தவித்தேன்

காதல்  கொண்ட  மனமோ  கலக்கம்  கொண்டது --உனது
கட்டழகை  மனதில்  நினைத்து  கதறி  யழுகுது
கோதையே  என்னைக்  காக்க  உனக்கு  பிரியமில்லையோ --அன்று
பிரிந்தவர்கள்  ஒன்று  சேர   நல்ல  வழியும்  இல்லையா



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக