சனி, 23 ஜூன், 2018

நேசம் 489

 என்னருந்தேவி  இயல்  இசை  வாணி --உன்
கரம்  பற்றிட  உவகை  கொண்டேன்
தென்னவன்  மகளே  தீதிலா  நிலவே --நீயும்
என்னிலே  பாதியே  இல்லற  ஜோதியே

கன்னம்  சுவையே  கரு  நாவற்  பழமே --தினம்
எண்ணி  இளைத்தேன்  இதயம்  துடித்தேன்
பின்னல்  சடையினில்  பேதமை  கொண்டேன் --உன்னை
என்று    மணப்பேன்   இனிமை   பெறுவேன்

நீராய்  வடித்தேன்  காதல்  நெருப்பால்  தகித்தேன் --கண்ணில்
பாராது  துடித்தேன்   பனியாய்க்  கரைந்தேன்
கூரெனும்  விழிகளால்  என்னை  கொள்ளை  யடித்தாய் --எனோ
இதுவும்  சரியா  உனக்கு  இதயமே  இல்லையா

சிரித்து  சிரித்துமே   எந்தன்  ஜீவனைக்  கொன்றாய் --நான்
சிக்கித்  தவிக்கையில்  சினமுடன்  சென்றாய்
எரிக்குமே  நிலவு   உன்னால்  இரவினில்  தொல்லை --நாம்
இணைவது  என்பது  இனிமேல்  இல்லையோ

வாசலில்  நின்றே   உனது  வருகை  காண்பேன் --நம்
வண்டமிழ்  மொழியினில்  வாழ்த்துகள்  படிப்பேன்
நேசம்  நினைத்து   இங்கே  நீயும்  வர  வேண்டும் --எந்தன்
நெஞ்சினில்  வைத்து  உன்னை  நித்தமும்  ரசிப்பேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக