திங்கள், 4 ஜூன், 2018

திருமுருகன் 469

                             பல்லவி
வரம்  தரு  முருகனை  அந்த  வள்ளி  மணாளனை --மனதில்
நினைந்திடில்  அவனே  நம்மிடம்  நேரில்  வருவான் (வரம் )
                           அனுபல்லவி
பதம் தரும்  சுகம் தரும்   பக்தியால்  சிறக்கும் --அவன்
பக்தர்கள்  பாடல்   பாரெங்கும்  ஒலிக்கும்   (வரம் )
                            சரணங்கள்
மயிலினில்  ஏறியோன்  நம் மனக்குறை  தீர்ப்பான் --நல்
மனைகளில்  செல்வங்கள்  மலையாய்க்  குவிப்பான்
பயமினி  ஏது  அவனடி  போற்றிடும்  போது --அந்த
பரமனின்  மகனே   நற்பதங்களும்  அருள்வான்      (வரம் )

வேலினை  யெடுத்தவன்  வெற்றிகள்  தருவான் --நாம்
வேண்டினால்  அவனும்  சந்தனமாய்   மணப்பான்
 பாலினைத்  தோற்றிடும்  பாங்கான  உள்ளம் --அவனை
பணிந்தவர்  தனக்குப்   பாயுமவன்  அருள்வெள்ளம்   (வரம் )

அருணகிரி  வணங்கும்  அம்பிகை  மைந்தன்  --நம்
அல்லல்கள்  போக்கிடும்  ஆறுமுகச்  செல்வன்
வறியவர்  செழிப்பினில்  வாழ்ந்திட  வைப்பான் --அந்த
வள்ளலை  நினைத்து   நம்  வாழ்வில்  முன்னேறுவோம்  (வரம் )

திருமுருகன்  நாமம்   திக்கெல்லாம்   கேட்கும் --வரும்
தீவினைகள்  யாவும்  திரும்பியே  ஓடும்
திருப்புகழ்  பாடுவோம்   தினமும்  நாம்  அன்போடு --அந்த
திருமால்  மருகன்  நமைத்  தேடியே   வருவான்  (வரம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக