சனி, 9 ஜூன், 2018

அற்புதம் 474

                                பல்லவி
எட்டுக்குடி  வேலவன்  என்றும்  இனிய  குணசீலன் --அவனை
இதயத்தில்  நினைத்தால்  எல்லாமும்  பெறலாம்  (எட்டுக்குடி )
                               அனுபல்லவி
கட்டி  என்னை  அணைத்து   என் கன்னமதில்  முத்தம்  இட்டான் --என்னை
கலவியே   தினமும்   ககனத்தில்  பறக்க  விட்டான்  (எட்டுக்குடி )
                               சரணங்கள்
அட்டியின்றி  சேடியே  அன்பனை  அழைத்து  வாடி --என்
அருகினில்  இருந்தால்  எந்தன்  ஆவி  நிலைக்குமடி
வெட்ட  வெளியினிலும்  வேலனையே  நினைத்தேன் --வரும்
விரக தாபத்திலும்  வெம்பியே  தவிக்கிறேண்டி  (எட்டுக்குடி )

நட்டமடைய  வைத்து  எனது  நாயகன்  சென்றானடி  --இந்த
நங்கை  உருகுவது  எனோ   நாளும்  புரியவில்லை
விட்டெனைப்  பிரிந்திட  வினையென்ன  நான்  செய்தேன் --என்
வேதனை  போக்கிட   விரைந்து  அழைத்து   வாடி  (எட்டுக்குடி )

அள்ளியெனை  யெடுத்து  அன்பு மழை  பொழிந்தான் --எனது
அணுக்கள்  அனைத்திலும்  அவனே  நிறைந்து  விட்டான்
வள்ளிதனை  மணந்த   வள்ளலாம்    நமது  குகன்  --அந்த
வடிவழகன்   முருகனை  தினமும்  வாழ்த்தியே  பாடுங்கடி  (எட்டுக்குடி )

நல்லவன்  அவனென்றால்  இந்த  நாயகியிடம்  வரட்டும் --என்னை
நல்லபடி  மணந்து   என்றும்  இல்லற  சுகம்  தரட்டும்
கள்ளமறியா  எனக்கு   காதலன்  கந்தனே  கணவனடி  --அவன்
காலடி  பணிபவர்   கண்களில்  காண்பது  அற்புதமே  (எட்டுக்குடி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக