வியாழன், 7 ஜூன், 2018

காப்பிய நாயகன் 472

                                   பல்லவி
சொல்லி   அழைத்து  வாடி   தோழி --என்
சுந்தரனை  வேலவனை  சுப்பிரமணிய  சீலனை  (சொல்லி )
                                   அனுபல்லவி
புள்ளி மயில்  ஏறிவரும்  வள்ளி மணவாளன் --என்றும்
புன்னகை  தவழும்   கந்தனெனும்  நேசன் (சொல்லி )
                                    சரணங்கள்
ஆளான  நாள்  முதலாய் அவன்மேல்  ஆசை  வைத்தேன் --நான்
அனுதினம்  தவறாது   அன்பாக  பூசை  செய்தேன்
வேலன்  வருகவென  விரதங்களும்  இருந்தேன்  --அந்த
விண்ணவர்  தலைவனை எந்தன்  விழிகள்  காணவில்லை (சொல்லி )

சந்தனம்  மணக்கின்ற   ஷண்முகன்   வருவான் --எந்தன்
சஞ்சலம்  தீர்த்திட   சரசங்கள்   தினம்  புரிவான்
பந்தத்தை  நினைந்து  பாவை  மனம்  துடிக்குதே --அந்த
பரம சிவன்  மகன்  எனைப்  பார்த்திட  வந்தால்  என்னடி  (சொல்லி )

கூப்பிட்ட  குரலுக்கு  என்குமரனும்  வருவான் --என்
கொவ்வை  இதழினில்  குளிர் மழை  பொழிவான்
காப்பிய  நாயகன்  கண்கவர்  அழகன் --எந்தன்
கந்தனை   கனக வேலனைகண்டு  ரசிக்க வென்றே  (சொல்லி )

இரவென்றும்  பகலென்றும்  எதுவும்  தெரியவில்லை --என்
இளமை  விடுகின்ற  மூச்சின்  ஏக்கம் புரியவில்லை
உறவினைப்  பெரிதாக்க  என் உத்தமன்  வருவானோடி --நான்
உழன்று  தவிப்பதை  உரியவரிடம்  போய்   இன்றே  (சொல்லி ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக