திங்கள், 4 ஜூன், 2018

நற்பலன் 468

                               பல்லவி
இதுவும்   சரியோ  நியாயமோ  இறைவா நீ சொல்லு --இனி
என்ன  செய்யவோ   நீயும்  அண்ணல்  அல்லவோ  (இதுவும் )
                                அனுபல்லவி
புதுமை  செய்திட வா   நீயே  புனிதன்  அல்லவா --புலம்பும்
என்குரல்   உனக்கு  இன்னமும்  புரியவில்லையோ  (இதுவும் )
                                 சரணங்கள்
நீ  வருவாயென  நானும்  நித்தமும்  நினைத்தேனே --நல்ல
நெடு முடி  வேந்தனே   நிர்மல  சீலனே
வரந்தர  இங்கு  வந்தால்  தானென்ன --உலகில்
வள்ளல்  என்றாலே   வழங்கிட  வருவாய்  (இதுவும் )

கனிவாய்  என்று  நான்  காத்தது  உண்மை  --உந்தன்
கண்களில்  பட்டால்   வந்திடும்  நன்மை
தணியாத   தாகம்   தவிக்கிறேன்  ஐயா --நீ யும்
தன்னருள்  காட்டியெனைத்  தடுத்தாள  வேண்டும்  (இதுவும் )

கழுத்தினில்   நீலம்  உனது  கண்களில்  ஞாலம் --தூய
காலடி  பற்றிட  கனியுமோ   நற்காலம்
நிலைத்திடும்  செல்வம்  நீயே  அல்லவா --என்
நிர்மல வேணியனே   உன்  புகழ்  சொல்லவா   (இதுவும் )

பார்வதி  மணாளா  சிவபக்தர்கள்   தலைவனே  --இன்றே
பரிவுடன்  காத்திட   ஏழையர்  பக்கமும்  வருவாய்
வேருக்குள்  நீரையும்  விரும்பிடும்  சிவனே --உன்னை
வேண்டிடும்  அடியவர்   பெறுவார்  நற்பலனே  (இதுவும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக