ஞாயிறு, 3 ஜூன், 2018

பரம்பொருள் 467

                           பல்லவி
சரவண பவ குக  எனத்  தினம்  ஓது --மனம்
கனிந்திடும்  நிறைந்திடும்  கந்தன்  அன்போடு  (சரவண)
                            அனுபல்லவி
நிரந்தரம்  அவனே   நம்  நிர்மலன்  மகனே --அவனை
நினைத்தவர்  உலகினில்  நிம்மதி  பெறுவார்  (சரவண )
                           சரணங்கள்
குற வள்ளி   திருமணம்  நம்  குஞ்சரன்  செய்தார் --பல
குடும்பங்கள்   வாழ்ந்திட  திருவருள்  புரிவார்
சிரமங்கள்  வந்திடில்  சீர்பெற  வைப்பார் --அவரை
சென்னியில்  வைத்தே  சீலனைத்  துதிப்போம்    (சரவண )

ஆறிரு கையன்   நல்ல  அன்பர்க்கு  மெய்யன் --என்றும்
அடியவர்க்கு  அருளினை  அள்ளியே  தருவான்
கோரிடும்  குறைகளைக்  கொய்தே  களை வான் --அவன்
குன்றினில்  நின்றாலும்  நீயும்  கூப்பிட  வருவான் (சரவண )

குஞ்சரி  மணாளன்  குணத்தினில்   சீலன் --நம்
கோதை  வள்ளி   தன்னைக்  குலவிடும்  நேசன்
வெஞ்சமர்  தன்னிலோ  வெற்றி  வீரன் --அந்த
வேலனை   சிவபாலனை  வேண்டுவோம்  தினமே  (சரவண )

இதம் தரும்  சொல்லினால்  ஏழையர்  காப்பான் --நம்
எல்லோர்  உள்ளத்தில்  இடமும்  பிடிப்பான்
பதம் தரும்  அவன்  திருவடி  பற்றிடு   மனமே  --அவனே
பரம்பொருள்  என்று  குகனைப்  பாடிடு  தினமே  (சரவண ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக