திங்கள், 25 ஜூன், 2018

மும்மாரி 490

                                       பல்லவி
கலை ஞான  முதல்வன்  நம்  கண்களுக் கழகன்  --அவன்
கைவேலுடன்  வந்தே  கருணையைப்  பொழிவான்  (கலை )
                                     அனுபல்லவி
அழகான  தெய்வமாம்  நமக்கு  அன்பான  துணைவனாம் --இங்கு
அடியவர்  நலம்  பெறவே  பெரும்  ஆற்றலைத்  தருபவன்  (கலை )
                                      சரணங்கள்
தமிழாக  வாழ்பவன்  தருக்கரை  அழித்தவன் --மண்ணில்
புயலாக  வருபவன்  புல்லர்களை  ஒழித்தவன்
பயமினி  இல்லை  பரம்  பொருள்  துணையுண்டு --உலகில்
இணை சொல்ல  முடியாத   இன்னருள்  செல்வமே  (கலை )

வடிவேலன்  வந்தால்  வாழ்வினில்  வசந்தமே  --உடலில்
வல்லமை  பெருகுமே  வளங்களும்  நிறையுமே
இடிபோல  இன்னல்கள் எதிரிலே  வந்தாலும்  புள்ளி
மயிலோன்   மனம்  வைத்தால்  மண்ணாகிப்  போகுமே  (கலை )

கனி தந்து  அவ்வைக்கு  கருணையைப்  புரிந்தவன்  --தன
காலடி  பணிந்தோரைக்  காப்பாற்றும்  இறையவன்
இனிதாக  உலகில்  என்றுமே  வாழ்பவன் --அவனே
இயல்  இசை  நாடகத்தின்  இலக்கணமாய்த்  திகழ்பவன்  (கலை ) 

ஒருநாளும்  மறவோமே  உனது  திருப்பெயர்  சொல்ல --அதனால்
உற்ற  துயர்  தீரும்  நமது  உள்ளம்  தெளிவாகும்
முருகாவென  அழைத்தால்  மனதில்  மோகங்கள்  விலகும் --அவன்
முன்வந்து  நின்றாலே   மாதம்  மும்மாரி  பொழியும்  (கலை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக