வியாழன், 21 ஜூன், 2018

ம் ) அம்மையப்பன் 486

                        பல்லவி
எனையாளும்  ஈசனே  இனிய  கயிலை  வாசனே --என்றும்
துணை  நீயே  துயர் தீர  வருவாயே  (எனையாளும் )
                      அனுபல்லவி
கனவிலும்  மறவோம்  எங்கள்  கங்காதரனே --உம்மை
காண்பவர்  மனதில்   தெம்புகள்  நிறையும்  (எனையாளும் )
                       சரணங்கள்
சித்தமதை  ஆளும்   சிவலிங்கம்   நீயே --உந்தன்
சீரடி  தொழுதிடில்   ஜென்மமும்  தேறும்
அத்தனும்  நீயே  எங்கள்  அப்பனும்  நீயே --நீங்கள்
ஆடிய   சிவ தாண்டவம்   அனைவர்க்கும்  விருந்து  (எனையாளும் )

தில்லையில்  வாழும்  திகம்பரம்   நீயே --நாவில்
தேனாய்  இனித்திடும்   திருவாசகப்  பொருளே
எல்லையிலா  கருணையினை  இறைவனே  அருள்வாய் --ஏழையர்
படும்  துயர்  உலகினில்   இல்லாது  செய்வாய்  (எனையாளும் )

மதுரை  மீனாட்சி   மனதினை  ஆளுவாய் --இந்த
மண்ணகம்  வளமுற  மழைதனைப்  பொழிவாய்
ஓதிடும்  அடியவர்  உன்புகழ்  பாடுவார்  --அவர்
உய்திட  நாளும்   சிவனுனை  நாடுவார்  (எனையாளும் )

கலைகளில்  சிறந்தவன்  கண்களுக்  கினியவன் --உலகில்
கற்பகத்  தருவாய்  கருணையில்  ஜொலிப்பவன்
அற்புதம்  செய்பவன்  இந்த  அகிலத்தை  ஆள்பவன் --என்றும்
அன்பர்கள்  மனதில்  ஆனந்தமாய்  நிறைபவன் (எனையாளு ம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக