வெள்ளி, 12 ஜூன், 2009

நினைவு -கவிதாஞ்சலி



உத்தமன் நேரு போனதெங்கே -மக்கள்
உள்ளமும் கலங்கி வாடுதின்கே


சொத்து சுகமும் துறந்தானே-தன்
துடிக்கும் இளமை மறந்தானே
நித்தம் ஓயாமல் உழைத்ததினால் -அறன்
நினையாத வழிதனில் மறைந்தானே

பம்பரம் போல சுழன்று வந்து -இந்த
பாரத நாட்டினை காத்திருந்தான்
வம்பர்கள் இல்ல நாடு தேடி -ஏனோ
வான வீதியில் பறந்து விட்டான்

மழலை மொழியில் மகிழ்ந்திருந்தான் -நம்
மனதை யள்ளத் தெரிந்திருந்தான்
குழலை வெல்லும் மொழி படைத்தான் -ஏன்
கொடுமை சாவினில் விழுந்து விட்டான்

செல்வ சிறுவனாய் உருவெடுத்து -அவன்
சிறப்பாய் நாளும் வளர்ந்திருந்தான்
வெள்ளை பள்ளியில் சேர்ந்திருந்தான் -அவர்
வியக்கும் வண்ணம் சிறந்து நின்றான்

அண்ணல் வழியை புரிந்து கொண்டான்
அன்பு செய்வதே தொண்டு என்றான்
கண்ணுக்கு இமைபோல காத்து நின்றான்
கலங்க விட்டேன் பிரிந்து சென்றான்

வெள்ளை உள்ளம் கொண்டிருந்து -ஏழை
வேதனை போக்கத் துடி துடித்தான்
கொல்ல வருகின்ற மனிதரிடம் -அவன்
கொள்ளை அன்பையே காட்டி வந்தான்

உலகம் வியந்திடும் மேருவானான் -நம்
உள்ளம் வாழ்த்திடும் நேருவானான்
நிலவும் அமைதிக்கு துணையாகி -என்றும்
நீங்காத நினைவாக ஆகிவிட்டான்


சுமையை தாங்கிடும் தாங்கியானான் -மக்கள்
சோகத்தை போக்கிடும் சாந்தியானான்
உவமை இல்லாத பொருளுமானான்-நாம்
உள்ளவரை வாழும் அருளுமானான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக