திங்கள், 15 ஜூன், 2009

ஈரம்




வந்தாள் அருகில்
வளைத்தேன் முடிவில்
தந்தாள் அமுதம்
தலையணை முழுதும் ஈரம் .

காற்று



காற்றில் ஏறி வந்தாள்
காதில் எதோ சொன்னாள்
நேற்றா இன்றா என்றேன்
நிஜமா என்றால் .....கனவு

நிலம்


நீரும் நிலமாகலாம்
நிலமோ நீராகலாம்
செடி கொடியாகலாம்
என் வேலை நிலையாகுமோ

ஞாயிறு, 14 ஜூன், 2009

Noothuku Nooru


இறைவன் கருணையால் நூறு பாடல்கள் எழுதினேன் .
அவருக்கு மனமார்ந்த நன்றிகள் .எனை ஈன்ற பெற்றோர்க்கும்
எழுதத் தூண்டிய பெரு மக்களுக்கும் எனது நல்லாசான்களுக்கும்
என்றும் நன்றி கூறுவேன் .எனது பணி மேலும் தொடரும்.
விமர்சனங்களை வரவேற்கிறேன் .வணக்கம் -வாயுபுத்திரன் .

சனி, 13 ஜூன், 2009

கோதை -100



நிலவு சூடானது -உள்ள
நிஜமே பொய்யானது
பழமும் கசப்பானது -வரும்
பாதை முள்ளானது

முள்ளும் மலராகுமோ -கொண்ட
மோகம் துணையாகுமோ
துள்ளும் மனமாகுமோ -அந்த
தோகை இணையாகுமோ

நினைவு நனவாகுமோ -அவள்
நேசம் வசமாகுமோ
உணர்வு உயர்வாகுமோ -இனி
உலகம் நமதாகுமோ

காலம் கனிவாகலாம்
நம் காதல் நலமாகலாம்
கோலம் இனிதாகலாம்
இந்த கோதை மனையாகலாம்

காதல் நெஞ்சம்



கட்டவிழும்
மொட்டவிழும்
கட்டை விரல் கோலமிடும்
போட்டு வளர் நெற்றியிலே
பூங்குழல்கள் மெல்ல ஆடும்

கண் இரண்டும் கவி பாடும்
காலிரண்டும் நடை போடும்
எண்ணமெல்லாம் சுழன்றாடும்
ஏந்திழையாள் மனம் வாடும்

தென்றல் அங்கு மெல்ல வரும்
சேதி ஒன்றை கொண்டு வரும்
ஒன்றி விட்ட காதல் நெஞ்சம்
வுவகைஇல் துள்ளி எழும்

தொட்ட இடம் சொர்க்கமாகும்
தோகை முகம் வெட்கமாகும்
பட்டு மலர் மேனிஇலோ
பாச சுமை ஏறிவிடும்

சரணம்



காவிரிக் கரை யோரம் -நான்
கண்ணயர்ந்து படுத்திருக்க
பூவிரி எழில் முகத்தாள் -பொற்
குடம் கொண்டு வந்தாள்

வா வெனச் சொன்னது கண்கள் -சுற்றி
வளைத்திடத் துடித்தன கைகள்
தா வெனக் கெஞ்சின அதரம் -அந்த
தையலோ இன்பத்தின் சிகரம்

காவியக் கண்ணகியோ -இல்லை
கற்பனை பூங்குயிலோ
ஓவியப் பெண்ணழகோ -அவள்
ஊர்வசி தன் மகளோ

தங்கம் அங்கமாய் அமைந்ததுவோ -முகம்
தாமரை மலரில் செய்ததுவோ
பொங்கும் இளமை வழிந்ததுவோ -அது
பூவையை தேடி வந்ததுவோ

அன்னம் நடையில் தோற்றிடுமோ -இடை
ஆண்களை வென்றிடும் பெரும் படையோ
கன்னம் இரண்டும் குங்குமமோ -அவள்
காலடியில் புவி சரண் புகுமோ

வாழ வரம்



இறைவா இங்கே வர வேண்டும் -வரம்
இன்றே நீயும் தரவேண்டும் -உன்னை
மறவா திருக்கும் மனம் வேண்டும் -உலகில்
மகிழ்வாய் வாழும் திறம் வேண்டும்

அழியா புகழைப் பெறல் வேண்டும் -வீணே
ஆத்திரம் கொள்வதை விடல் வேண்டும்
சலியா துழைக்கும் உரம் வேண்டும் -மன
சஞ்சலம் தவிர்க்கும் திடம் வேண்டும்

நல்லதை செய்திட பொருள் வேண்டும் -தினம்
நன்மை நாடிடும் உளம் வேண்டும்
உன்னை தேடிடும் அருள் வேண்டும் -என்றும்
உண்மையே பேசிடும் நிலை வேண்டும்

துன்பங் கண்டேதுவளாமல் -நான்
துடிப்பாய் செயல் பல செய்திடவும்
அன்பால் உலகை வாழ்விக்கும் -நல்ல
ஆக்கமும் வுக்கமும் இனி வேண்டும்

போதுமென்ற நிறை வேண்டும் -பிறர்
புகழ்ச்சியில் மயங்கா நிலை வேண்டும்
சூதும் வாதும் விடவேண்டும் -நான்
சுகமாய் வாழ வரம் வேண்டும்

வெள்ளி, 12 ஜூன், 2009

பாரதம் -தேச பக்தி பாடல்




கோடி துன்பம் சூழினும்
குவலயம் வந்து எதிர்கினும்
வாடி மடிய நேரினும் -என்றும்
வஞ்ச கதேதிர் கொடோம்

எங்கள் வாழ்வு தாழ்வெல்லாம்
எங்கள் சொந்த மண்ணிலே
என்று சொல்லும் வீரர் கீதம்
எதிரொலிக்குது நம் விண்ணிலே

இமயம் குமரி எல்லையாய்
இணைந்து வாழ்ந்த மக்கள் நாம்
அபயம் என்று போவதோ -கொடும்
அநீதிக்கு தலை சாய்வதோ

தாய் தந்த பாலிலே
தமிழர் வீரம் கலந்தது
பாயும் குணத்தை தந்தது -இன்றே
பகை அழிக்க வந்தது

கொடியர் பலரை கொன்ருமே
குருதி வெள்ளம் கட்டுவோம்
மடையை திறந்து நம் வயலுக்கு
மனித இரத்தம் பாய்ச்சுவோம்

மானம் உண்டு வீரம் உண்டு
மக்கள் துணை யாவுமுண்டு
தானம் தருகமுந்துவோம் -எதிரி
தலையை கொய்தே திரும்புவோம்

வெற்றி கண்டு மிதந்திடோம் -சிறு
வீழ்ச்சி வரின் அயர்ந்திடோம்
பற்றும் கொள்கை மறந்திடோம் -எங்கள்
பாரதத்தை கை விடோம்

நினைவு -கவிதாஞ்சலி



உத்தமன் நேரு போனதெங்கே -மக்கள்
உள்ளமும் கலங்கி வாடுதின்கே


சொத்து சுகமும் துறந்தானே-தன்
துடிக்கும் இளமை மறந்தானே
நித்தம் ஓயாமல் உழைத்ததினால் -அறன்
நினையாத வழிதனில் மறைந்தானே

பம்பரம் போல சுழன்று வந்து -இந்த
பாரத நாட்டினை காத்திருந்தான்
வம்பர்கள் இல்ல நாடு தேடி -ஏனோ
வான வீதியில் பறந்து விட்டான்

மழலை மொழியில் மகிழ்ந்திருந்தான் -நம்
மனதை யள்ளத் தெரிந்திருந்தான்
குழலை வெல்லும் மொழி படைத்தான் -ஏன்
கொடுமை சாவினில் விழுந்து விட்டான்

செல்வ சிறுவனாய் உருவெடுத்து -அவன்
சிறப்பாய் நாளும் வளர்ந்திருந்தான்
வெள்ளை பள்ளியில் சேர்ந்திருந்தான் -அவர்
வியக்கும் வண்ணம் சிறந்து நின்றான்

அண்ணல் வழியை புரிந்து கொண்டான்
அன்பு செய்வதே தொண்டு என்றான்
கண்ணுக்கு இமைபோல காத்து நின்றான்
கலங்க விட்டேன் பிரிந்து சென்றான்

வெள்ளை உள்ளம் கொண்டிருந்து -ஏழை
வேதனை போக்கத் துடி துடித்தான்
கொல்ல வருகின்ற மனிதரிடம் -அவன்
கொள்ளை அன்பையே காட்டி வந்தான்

உலகம் வியந்திடும் மேருவானான் -நம்
உள்ளம் வாழ்த்திடும் நேருவானான்
நிலவும் அமைதிக்கு துணையாகி -என்றும்
நீங்காத நினைவாக ஆகிவிட்டான்


சுமையை தாங்கிடும் தாங்கியானான் -மக்கள்
சோகத்தை போக்கிடும் சாந்தியானான்
உவமை இல்லாத பொருளுமானான்-நாம்
உள்ளவரை வாழும் அருளுமானான்

வாழ்க



சின்னக் குழந்தை வண்ண உடைகளில்
சீறிப்பாயும் கண்ணி வெடிகளில்
எண்ணை முழுக்கில் இளமை மனதில்
இன்று வந்தது இனிய தீபாவளி

மங்கல நாளில் மண்ணகமெங்கும்
மங்களம் பொங்கி மகிழ்வு தங்குக
திங்களும் வானும் சேர்ந்தது போல
எங்கள் தமிழர் என்றுமே வாழ்க

அடிமைப்பெண் -வெற்றிவிழா



அண்ணன் பெற்ற பிள்ளை -அவள்
அழகிற் கீடிணை இல்லை
கண்கள் செய்திட்ட பேறு -மக்கள்
கண்டதும் தீஞ்சுவை நூறு

வள்ளல் மனதில் கருவாய் -தினம்
வளர்ந்தது தாய்மைஇன் உருவாய்
அள்ளித் தருவது வருவாய் -எங்கும்
ஆனந்தம் பொங்குது நிறைவாய்

கொட்டகை வழிந்திடும் கூட்டம் -குறை
சொல்ல வந்தவர் ஓட்டம்
தொட்டது துலங்கிடும் காட்சி -திரை உலகில்
தொடர்வது அண்ணனின் ஆட்சி

பாலைவன மணலிலும் நடந்து -வைத்த
பரீட்சை யாவையும் கடந்து
நாளைய சரித்திரம் கொண்டாள் -தமிழ் -
நாட்டையே வெற்றி கண்டாள்

நிலவில் காதல்



நிலவில் தங்கி குடிஇருக்க -இன்று
நீயும் நானும் போவாமா
பழக வரும் பூங்கொடியே -உடனே
பதில் எனக்கு சொல்லடியோ

அமைதி கடல் ஓரத்திலே -மன
ஆசை பொங்கும் நேரத்திலே
உறவு பூண்டு நிற்போமா -வான
உலகில் நாமும் பறப்போமா

கால்களில் மண் அளக்க -உன்
கண்களில் பொன் கலக்க
நாளிறேண்டில் கீதம் பாடி -அங்கே
நாம் இருப்போம் ஒன்று கூடி

காற்று மனிதர் யாருமில்லை -நன்கு
கலந்து பேச தடையுமில்லை
நேற்று இன்று என்பதில்லை -காதல்
நெஞ்சம் மட்டும் மாறவில்லை

பூவுலகில் துன்பம் உண்டு
புத்துலகில் இன்பம் கண்டு
கூவும் குயில் ஆவோமா -ஒரு
குறையுமின்றி வாழ்வோமா

நிலவிற்கு மூவர் வந்தார் -மக்கள்
நினைவிலும் அவரே நின்றார்
உலகமும் இதையே சொல்லும் -உண்மை
வீரமே என்றும் வெல்லும்

வாழ்க




திரை எனும் உலகம் வாழ்க -இனி
தீமைகள் எங்கும் மாய்க
துரை எனும் ராசன் பெற்ற -நம்
தூய்மை நல்லேடு வளர்க

வள்ளல் தம் கைவாளாகி -அவர்
வழிஇனில் சென்று நாளும்
அல்லலை தீர்க்கத் தன்னை -என்றும்
அர்ப்பணம் செய்த தாயே

சமநிலை செய்தி தந்து -வந்த
சமரிலே பலரை வென்று
அமைதியேநெஞ்சம் கொண்டாய் -தமிழர்
அகத்திலே மஞ்சம் கண்டாய்

வியாழன், 11 ஜூன், 2009

மணிவிளக்கு



பிறந்தவர் மண்ணில் இறப்பதுண்டு -சிலர்
பெருமையால் என்றும் இருப்பதுண்டு
எரிப்பினும் புதைப்பினும் அழிவதில்லை -நல்ல
இதயங்கள் அவரினை மறப்பதில்லை

எத்தனை துறைதனை தொட்டாலும் -இருப்பது
அவர் பெயர் முன்னாலே
புத்தரை போன்றிட்ட உருவமையா-இங்கு
பொறுமையில் காந்தியை போன்றதையா

ஆயிரம் ஆண்டிர்கோர் தலைவன் -மக்கள்
அவலத்தை தீர்ப்பதில் பேரிறைவன்
ஈண்டு அணைந்தது மணிவிளக்கு -நம்
இன்னலுக் கில்லையே விதிவிலக்கு


அண்ணன் வழிஇனில் நடந்திடுவோம் -எங்கும்
அன்பெனும் குணத்தை வளர்த்திடுவோம்
கண்ணை போலவே நம் தாயகத்தை -இனி
கடின உழைப்பினில் உயர்த்திடுவோம்

பொற்காலம்




பொங்குக பொங்கல் புதுமையில் இன்று -தினம்
பூக்கட்டும் இன்பம் புவியினில் நன்று
மங்கல கோலம் மாவிலை தோரணம் -இந்த
மண்ணகம் எங்கணும் மகிழ்ச்சியே காரணம்

காய் கதிர் செல்வனின் கருணையில் நனைந்து -நம்
கழனியில் உழைத்திடும் கடவுளை நினைந்து
ஆவினை சேவையில் அன்புடன் இணைந்து -ஒன்றாய்
ஆடுவோம் இங்கு நாம் அல்லலை மறந்து

உழைத்தவன் வாழ்ந்தால் உயர்ந்திடும் நாடு -என்றும்
உண்மை எங்கோ உணர்ந்ததை தேடு
இளைத்தவன் இல்லை இனிவரும் ஞாலம் -இங்கு
என்றுமே பெறுவோம் இனிய பொற்காலம்

புதன், 10 ஜூன், 2009

அமுது



பொங்கல் பிறந்தது பூமிஇலே -உளம்
பொங்கி ஆடிட வா குயிலே

திங்களை உழவரை கும்பிடுவோம் -தமிழ்
திக்கெட்டும் ஆண்டிட நம்பிடுவோம்

புதிய பானை அரிசி வைத்து -சுவை
பொங்கி வழிந்திடும் அமுதமைத்து
இதய நன்றி செலுத்திடுவோம் -அந்த
இன்பத்தில் வாழ்வினை கழித்திடுவோம்

செல்வி



நெஞ்சில் வந்தது நினைவு -தினம்
நினைக்க வருவது கனவு
கொஞ்சுதல் குயி லின் ஓசை -உன்னை
குலவ நெடு நாள் ஆசை

பஞ்சு மெத்தை காலடியோ -அதில்
பட்டு சட்டை மேனியடி
கொஞ்சிடும் விரல் வெள்ளரியோ -தமிழ்
குலவிடும் இதழ் கோவையடி

முல்லை சரம் பல் வரிசை -நல்ல
முழுமை நிலா முகமழகு -
இல்லை என்பது இடையழகு -காதல்
ஏக்கம் தருவது நடையழகு

கண்களில் கயல் இரண்டு -அழகிய
கன்னம் தீஞ்சுவை கற்கண்டு
பெண்களில் நீதான் தலைவியடி -உலகில்
பிழைகள் இல்லா செல்வியடி

தீப ஒளி


தீப ஒளி தன்னை ஏற்றுங்கடி -தமிழ்
தெய்வ குறளினை போற்றுங்கடி
மோக இருளினை மாற்றுங்கடி -நம்
முன்னோர் பெருமைகள் சாற்றுங்கடி

புதிய ஆடைகள் அணியுங்கடி -மனம்
பொங்கி கவிதை படியுங்கடி
இதய உறவினை கூறுங்கடி -அந்த
இன்பத்தில் ஒன்றென சேருன்கடி

உண்மை


ஒளிதரும் விளக்கினை ஏற்றி -நல்ல
உயர்வெனும் ஆடைகள் சாற்றி
பயமெனும் இருளினை நீக்கு -உனது
பாதையை நேர்மையாய்ஆக்கு

வெடித்திடும் வெடிகளின் ஓசை -இதை
விரும்பி ரசிப்பதோ ஆசை
படித்திடும் நீதிகள் எங்கே -சற்று
பதியட்டும் மனதினில் இங்கே

ஆள்வது மக்களின் அரசு -அது
அணிபெற அமைதியேஇருசு
வாழ்வினில் துயரம் இயற்கை -வீணே
வாடி வதங்குதல் செயற்கை


இருப்பதை இல்லார்க்கு கொடுப்பாய் -அவர்
இதயத்தில் தெய்வமாய் வசிப்பாய்
புறப்படு செயலினை காட்ட -இன்றே
புரட்சி தேர் பூமியில் ஓட்ட

சோம்பி இருந்திடல் தீது -பிறர்
சூதுகள் செய்திடும் போது
ஓங்கி உயரவே நிற்பாய் -என்றும்
உண்மை வழியொன்றே கற்பாய்