புதன், 25 செப்டம்பர், 2019

மாதவன் 7 9 2

சொந்தமென       உலகில்       யாருமில்லை    ----அதனால்
சோர்வும்       அடையத்      தேவையில்லை
பந்தமென      வந்திடும்     பரந்தாமா   ---உன்னை
பணிந்து       தொழுகிறேன்    பலகாலமா

ஆடு         மாடுகள்       மேய்ப்பவன்   ---தன்
அடியவர்     தம்மையும்      காப்பவன்
பீடுநடை       போடும்     பெரியவன்   ---நம்
பேதைமையைப்    போக்க  வந்த    ஹரியவன்

மண்ணை  யள்ளித்     தின்றது   வாயிலே   ---பல
மாயங்கள்     காட்டிடுவான்    கண்ணிலே
கண்ணனாக     வடிவெடுத்த     கற்பகம்   ---நாம்
காணக்      கிடைக்காத      அற்புதம்

மலையினைக்      குடையாக்கிய      மாதவன்   ---நம்
மனக்குறையை    தீர்க்கவந்த       மாயவன்
அலைமகளின்     துணைவனான     தூயவன்    ---தனது
அன்பினாலே       அகிலமதை      ஆள்பவன்

கண்ணனின்      காலடி       பற்றி   விடு   --உள்ள
கவலைகளை     அவனிடத்தில்     விட்டு விடு
நன்மையெல்லாம்      அவன் தருவான்     நெஞ்சமே  ---அவனை
நம்பினார்      கெடுவதில்லை      எந்த நாளுமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக