வெள்ளி, 17 ஏப்ரல், 2009

கடலும் நிலவும்


அலைகள் நிரப்பிய பெருங்கடலில் -என்றும்
ஆயிரம் புதுமைகுடியிருக்கும்
நீல வானத்து நிலவினுக்கோ -இங்கு
நிதம் புதிய வுருவிருக்கும்


நதிகள் சேர்ந்திட கடலாகும் -அதில்
நன்மணி விளைந்திடும் நிலமாகும்
கலைகள் இணைந்தது நிலவாகும் -தினம்
காட்டிடும் கதைகள் பலவாகும்


பொங்கிய அலைகள் கூத்தாடும் -அதில்
புகுந்தவர் தனியே பந்தாடும்
அந்தர வானில் மிதந்து வரும் -நிலவு
ஆசையை மனதிலே தூண்டிவிடும்


கவிதைக்கு மையம் நிலவாகும் -பல
கற்பனை அங்கே பிறப்பாகும்
அமைதி இழந்தது கடலாகும் -அதன்
ஆழத்தை காண்பது அரிதாகும்

தோன்றிய காலமோ தெரியாது -இதன்
சூத்திரம் யாதென புரியாது
ஆண்டவன் தந்திட்ட அருட்செல்வம் -நாமிதை
அறிந்து நடந்திடல் நன்றாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக