வெள்ளி, 3 மே, 2019

வண்ணப்பறவை 656

காணக்        கருப்பு      அழகன்   ---இரு
காதுவரை    தொடுகின்ற     மீசைக்காரன்
தென்னம்    பாளை     சிரிப்பழகன்    --நல்ல
தெம்மாங்கு     பாடும்      பாட்டுக்காரன்

எட்டினடந்தாலே     அவன் எதிரிகள்     தூளாவார்   ---அங்கு
பட்டையை     கிளப்பி      பந்தாட்டம்     ஆடிடுவான்
வெட்டி  வச்ச    கரும்பென    மேனியிலே    புதுவாசம்   ---அவனை
கட்டியணைக்கும்   என்காதலுக்கு   வருவானோ

கொல்லும்   விழியழகும்     கோவை     சிரிப்பழகும்    --மனம்
கொள்ளை     கொண்டு போக     குமரன்    வருவானா
கள்ளியெந்தன்    மனதில்    காதல்      வந்ததடி    ---அந்த
காதல்     தலைக்கேற    என்கண்கள்    மயங்குதடி

மடியிலே      நான்  துயில     மச்சான்      வருவானோ    ---நான்
மணமுடிக்க     நாளும்      மகிழ்வாக      வந்திடுமோ
துடிக்கும்      என்னையும்    தன்தோளில்    சுமப்பானோ    ---இது
தொல்லை என     என்னையும்     விட்டுப்     பிரிவானோ

எண்ணமதை   சொல்ல       எனக்குத்      துணையில்லையே   ---அன்பு
வண்ணப்   பறவைகளே     வாய்திறந்து      சொல்வீரா
கண்ணில்    விழுந்தவனை    கைவிடவும்    நான்    மாட்டேன்   --இன்று
கனிவாகப்     பேசியவன்      கைகளைப்      பற்றிடுவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக