புதன், 25 மார்ச், 2009

வரவும் செலவும்


மாடு மனை சொந்தமும்
மக்கள் சுற்றம் பந்தமும்
வீடு விட்டு போகையில் வருவதோ
விளக்கமாக சொன்னபோதும் புரியுதா

கணக்கையெல்லாம் மாற்றிவைத்து
கட்சிதமா காசு சேர்த்து
தனக்கெனவே உலகமொன்று கட்டுறான்
தானே விழுந்து வீணிலேன் சாகிறான்

சொந்தம் சொந்தமென்று சொல்லி
சோற்றுக்காக பல்லை காட்டி
வந்து நின்று தின்றவர்கள் எத்தனை பேர்
வசை பாடி சென்றவர்கள் எத்தனை பேர்

பிறந்த சொந்தம் தெரியவில்லை
பெரிய சொந்தம் எதுவுமில்லை
இறந்தபின்னே சொந்தமேங்கே போனது
இதுவரைக்கும் தெரியாததாய் தோணுது

முதலுமில்லை இங்கு முடிவுமில்லை
முயன்று பார்த்தால் துவுமில்லை
வந்ததெல்லாம் மீதமாகி நின்றதா
வரவுக்குளே செலவாகி சென்றதா

செவ்வாய், 24 மார்ச், 2009

திரு நங்கை


அழகான உலகொன்று படைத்தான் -அதில்
ஆணொன்று பெண்ணென்று சமைத்தான்
தெரியாமல் திருநங்கை ஏன் படைத்தான்-அவர்
தெருவோரம் அழுதும் தெரியாமல் சிரித்தான்

உடலாலே வருகின்ற மாற்றம் -அதை
உணராமல் நாம் போடும் பலமான ஏச்சல்
கடல்போல பெருநோக்கு வேண்டும் -அவர்
கடைத்தேற நல்வழி கண்டாகவேண்டும்

உயிர் வாழ பல் உதவி உடனே செய்வீர்
உயர் கல்வி நல வாழ்வு ஓட்டுரிமை தருவீர்
வளமான சிந்தனையில் வாலிபரே வருவீர்
வற்றாத சுகவாழ்வு வனிதயற்கு தருவீர்

திங்கள், 23 மார்ச், 2009

தேன்


ஏனடி
என்னடி ஆனது
உனக்கு எப்படி பொழுது போனது
கூறடி தேனடி நீயடி -உன்னை
குலவ வந்தவன் யாரடி

கார்மேக கூந்தலால் கட்டி இழுத்தாயோ
கயல் விழி கண்ணாலே வெட்டி இழுத்தாயொ
நீர்போல சலச்சளத்து நெஞ்சை அழைத்தாயோ
நெடுமூச்சு விடும்போது கெஞ்சி விழித்தாயொ

சூராதிசூரனோ அந்த சுப்ரமண்யன் தம்பியோ
வில்லாதிவில்லனோ அந்த வில்விஜயந்தம்பியோ
தேரோடும் வீதியிலே தினம் சுற்றும் வீரனோ
வீராதி வீரனோ வேங்கைதிருமார்பனோ

எவ்வளவு கேட்டுமடி இல்லை உன் பதில்
எந்நாளும் நீதானே எனக்குள்ள புதிர்
பொன்னான உன் மனது புரியாதவளோ நான்
புத்தம் புது பானையிலே நீ பொங்கிவரும் தேன்

திங்கள், 16 மார்ச், 2009

வரவு


கனவு நனவாக -வரும்
காலம் துணையாகும்
நினைவு சரியாக -வாழ்வில்
நேர்மை வழியாகும்

உள்ளம் பெரிதாக -வாழும்
உலகம் சிறிதாகும்
கள்ளம் புகுந்தாலோ -எங்கும்
கலகம் உருவாகும்

இளமை பயிராக -மனதில்
ஏக்கம் வரவாகும்
நிலைமை உணர்ந்தாலோ -வாடும்
நெஞ்சம் தெளிவாகும்

துணிவு பிறந்தாலோ -வந்த
துயரம் பறந்தோடும்
பணிவு நிறைந்தாலோ -போகும்
பாதை எளிதாகும் !

புதன், 11 மார்ச், 2009

நீ


உலகாள கருவின்றி
உருவின்றி பயிராகி
நிலமாள வந்தவள் நீ

பலகாலம் நிலையாகி
பாரெங்கும் புகழாகி
குலமாதர் இனமாவாய் நீ

எதிர்த்தாளும் அழியாமல்
எடுத்தாலும் குறையாமல்
புதிருக்கு விடையாவாய் நீ

படைகொண்ட பெரு வீரர்
படிப்புள்ள பெரியோர்கள்
அடிதொழ நிற்பவள் நீ

இறவாத பல நூல்கள்
எரிகின்ற அருட்தீபம்
இருந்திட காரணம் நீ

சதிராடும் விழி மாதர்
தருமாடற் சுவையெல்லாம்
தனதாக கொள்பவள் நீ

தீராத பெருந்தாகம்
தீண்டிட புது மோகம்
மாறாத இளங்கன்னி நீ

நட்பு

உன்னை நினைத்து இருந்தேன் - இந்த
உலகை மறந்திருந்தேன்
என்னை தவிக்க விட்டே - நீ
எங்கோ ஏன் சென்றாய் !

இரவு பகல் எனினும்- என்னை
இமை போல் காத்திருந்தாய்
உறவு என்னும் சொல்லினுக்கு-இங்கு
உரிய இலக்கணம் நீ !

வாழும் காலம் தோறும் - உன்
வருகை எதிர் பார்ப்பேன்
நாளும் பொழுதும் தினம் -நான்
உனது நட்பை நினைத்திருப்பேன்

நீ இருந்த இடம்மெல்லாம் - என்
நெஞ்சில் நிழல் ஆடும்
உதய நிலவாகி பாட - தமிழில்
உகந்த பொருள் ஆனாய் !!

கண்ணன் திருவடியில் அன்று
கவனமுடன் சேர்ந்தாயோ
அன்னை அருள் நிழலில் - நீயும்
அயர்ந்து கண் மலர்வாய் அய்யா !!!

செவ்வாய், 10 மார்ச், 2009

வள்ளல்








வந்ததை
இங்கு யாரறிவார் -பின்
வருவதை யார் முன் உணர்ந்திடுவார்
யந்திரம் போல்வது வாழ்கையென - இன்னும்
ஏனோ
மனிதா உணராயோ

வாழ்க்கை என்பது நீரோட்டம் -இதை
மறந்து திரிபவர் பேயாட்டம்
தாழ்வு
வாழ்வு மிங்கு சூதாட்டம்-இதில்
தன்னை மறந்திடில் போராட்டம்

ஆய்ந்து நன்றாய் அறிவதற்கே -நல்ல
அறிவை
அதிகம் கொடுத்தானே
தேர்ந்து உயர்ந்து விளைந்திடாது -வீணே
தேம்பி
அழுவதிலே லாபமுண்டோ

வாழும் காலம் அறிபவர் யார்
வந்தவர்
நின்றவர் யாரிருப்பார்
பாழும்
வுலகின் இயல்புதனை -தினம்
பகுத்து வகுத்து கண்டவர் யார்

உழைத்தவன் வலுத்தவன் இருப்பதில்லை
ஒருநாள்
மண்ணில் மறைந்திடுவர்
நிலைத்தவர் பூமியில் யாரேனிலோ -தன்
நெஞ்சினை பிறர்க்கு அளித்தவன் தான்


திங்கள், 9 மார்ச், 2009

கவிஞன்










கடவுளும்
கவிஞனும் ஒன்றல்லவா-அதை
கற்பனை செய்திடல் நன்றல்லவா
புவியைபடைத்தவன் கடவுளெனில்-அழியா
புகழை பெற்றவன் கவிஞனன்ரோ

கண்ணில் தோன்றும் காட்சிகளை -நல்ல
கற்பனை
உருவம்- கொண்டமைத்து
மண்ணில்
படைத்திடும் பிரமனவன் - தினம்
மாயங்கள்
செய்திடும் மன்னனவன்

இருவர் மனதிலும் களங்கமில்லை -உலக
இன்ப
துன்பத்தை வென்றநிலை
ஒருவர்
வேலையும் முடியவில்லை -இதை
உலகம் இன்னமும் உணரவில்லை

காணும்
பொருள் உயிர்வகைகள்
கடலும் நிலமும் மற்றவைகள்
கடவுள்
படைத்தவை அழிவதுண்டு-ஆனால்
கவிஞன்
படைத்தவை அழிவதில்லை

காதல் நெஞ்சம்

கட்டவிழும்; மொட்டவிழும்
கடை
விரல் கோலமிடும்
பொட்டு வளர் நெற்றியிலே
பூங்குழல்கள் மெல்ல ஆடும்

கண் இரண்டும் கவிபாடும்
காலிரண்டும் நடை போடும்
எண்ண
மெல்லாம் சுழன்றாடும்
ஏந்திழையாள்
மனம் வாடும்

தென்றல்
அங்கு மெல்லவரும்
சேதி
ஒன்றை கொண்டுவரும்
ஒன்றி
விட்ட காதல்நெஞ்சம்
உவகையிலே துள்ளி எழும் !

தொட்ட இடம் சொர்க்கமாகும் ;
தோகை முகம் வெட்க்கமாகும் !
பட்டு மலர் மேனியிலே
பாசச்சுமை
ஏறிவிடும் !

ஞாயிறு, 8 மார்ச், 2009

பூங்குயிலோ


காவிரிக் கரை யோரம் - நான் கண்ண அயர்ந்து படுத்திருக்க பூவிரி எழில் முகத்தாள்-பொற் குடம் கொண்டு வந்தாள்

"வா" வென சொன்னது கண்கள் -சுற்றி வளைத்திடத் துடித்தன கைகள் "தா" வெனக் கெஞ்சின அத ரம்-அந்த தைய லோ இன்பத்தின் சிகரம் !

காவிய கண்ணகியோ -இல்லை கற்பனை பூங்குயிலோ ஓவிய பெண்ணழகோ -அவள் ஊர்வசி தன் மகளோ ?

தங்கம் அங்கமாய் அமைந் ததுவோ -முகம் தாமரை மலரில் செய்ததுவோ பொங்கும் இளமை வ்ழிந்ததுவோ -அது பூவையை தேடி வந்ததுவோ?

அன்னம் நடையில் தோற்றிடுமோ -இடை ஆண்களை வென்றிடும் பெரும் படையோ கன்னம் இரண்டும் குங்குமமோ -அவள் காலடி உலகம் சரண் புகுமோ ?

அம்மா

பத்து மாதம் சுமந்திருந்து
பாசமெல்லாம் காட்டி வைத்து
நித்தம் என்னை காத்து வந்த
நேச
மிகு தெய்வம் எங்கே

அடித்து
என்னை வளர்க்கவில்லை
ஆளடிமை
செய்யவில்லை
தடித்த ஒரு வார்த்தை கூட என்
தங்கமே
நீ சொன்னதில்லை

காலன் உன்னை அழைத்தானோ உன்னை
கையை தொட்டும் இழுத்தாணூ
பாலன் முகம் பார்ர்த்தபின்னும் அந்த
பாவி மகன் மறுத்தானோ

கற்றாழை
பறிக்க வந்த
காலமெனும்
கொடிய மகன்
பொற்றாமரை
பறித்தான் என்னை
புழு
போல துடிக்க விட்டான்

என்ன நினைத்து அவன்
என்னுயிரை
எடுத்து சென்றான்
சின்னவன் தானே என்று சிறிது
சித்து விளையாடினானா

காலனை
இங்கு அழைப்பேன் அவனை
கட்டி
வைத்தும் உதைப்பேன்
கோல மயில் உன்னை மீண்டும்
கூட்டி
வந்து வாழ வைப்பேன்

சனி, 7 மார்ச், 2009

அறிமுகம்

வணக்கம் அன்பர்களே , நான் முதல் முதலாய் எழுதும் இணைய தொகுப்பு இது , திருவரங்கத்தில் இருந்து என் உள்ளக் கதவை உலகிற்கு திறக்கிறேன் , உள்ளேய்த்தான் வாருங்களேன் !!!