புதன், 30 ஏப்ரல், 2014

கீதை 230.

பொன்னான  காலம் -மீண்டும்
 புவிமீது   வருமா
 என்னாசைக்  கண்ணா -உன்னை
 என்றுநான்   காண்பேன்

 கண்களில்   நீரோ -ஏனோ
 கரைந்தோட   நின்றேன்
 பெண்ணிலே   நானோ -என்ன
 பெரும்பிழைகள்   செய்தேன்

 கங்கை  நதிதீரம் -நம்
 காதல்கதை   சொல்லும்
 கண்ணனின்  கீதம் -நம்
 காதுகளை    அள்ளும்

 கோபியர்   நடுவே -நீ
 குழலூதும்   காட்சி
 கொள்ளை   இன்பமாகும் -அது
 குவலயத்தில்   நேர்த்தி

 காளிங்கனை   வதைத்து -மக்களை
 காத்தவனும்   நீயே
 ஆலிங்கன   சுகம்பெறவே -இன்னும்
 அலையுதே   நெஞ்சம்

 துரியனின்   சபையில் -அன்று
 துகிலுரியும்   பொழுதில்
 பெண்மானம்   காத்த - எங்கள்
 பெருமானும்   நீயே

 கீதையெனும்   வேதம் -உரைத்த
 கிருஷ்ணனும்   நீயே
 சோதனையில்   காக்கும் -நல்ல
 சுகபுருஷன்   நீயே 

தர்மம் 229.

ஆரம்பம்   எளிதானது -அதன்
 அர்த்தங்கள்   தெளிவானது
 வேறெங்கும்  இல்லாதது -அந்த
 விதிகூட   அறியாதது

 போரென்று   முடிவானது -அதன்
 பிறகென்ன   தெரியாதது
 யாரென்று  உணராதது -அதில்
 நியாயங்கள்   மறைவானது

 கண்ணென்று   அரிதானது -வரும்
 காலங்கள்   விரைவானது
 பெண்ணென்று   துணையானது -பல
 பேதங்கள்   வரவானது

 நாமென்னும்   நினைப்பானது -பல
 நன்மைகள்   பிறப்பானது
 நாளுமே   இரவானது -அதில்
 நல்லவை   உறவானது

 அன்பொன்றே   நிலையானது -வரும்
 ஆசையோ   தீதானது
 பண்புதான்   சரியானது -போகும்
 பயணமோ   இனிதானது

 சொன்னாலே   புரியாதது -எங்கும்
 சூட்சுமம்   நிலையானது
 தன்னாலும்   விளங்காதது -என்றும்
 தர்மமே   முடிவானது 

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கண்ணாலம் 228.

அவன் :செவத்த  பொண்ணு  செல்லம்மா -நீ
 சித்தே  கொஞ்சம்  நில்லம்மா
 ஒத்த   ஆளு  தானம்மா -உனக்கு
 உதவி   செய்ய   வேணுமா

 அவள் :  பொலம்ப   வேணாம்   புலவரே -உனக்கு
 பொழப்பு  எதுவும்  இல்லையா
 சொல்லிப்  புட்டேன்  தெரியுதா -நீயும்
 சுருக்கப்   போயிடு  புரிஞ்சுதா

 அவன்:  அம்பைச்  சொன்னால்  பாவமா -உனக்கு
 அதிகம்  எதுக்கு  கோவமா
 வம்பு  செய்யலை  நானம்மா -இது
 வயசு   பண்ணும்   கோலம்மா

 அவள்:  சத்தம்  போட்டு நான்  அழைக்கவா -என்
 சாதி சனத்தை  இங்கே  கூட்டவா

 பேரைக்  கெடுப்பேன்  போதுமா -நீ
 பொழைச்சு  போய்யா  விவரமா


 அவன்:  அழகைப்  பாத்தேன்  ஆசையில் -நான்
 அதிகம்  வளத்தேன்  மீசையை
 பழக   வந்தேன்  பாசத்தில் -உனக்கு
 பாக்கு  வைப்பேன்  வருகிற  மாசத்தில்

 இருவரும்:  முறை  இருக்குது  கொஞ்சவே -நமக்கு
 மோகம் பொங்குது  நெஞ்சிலே
 உறவைக்  கூட்டித்தான்  கண்ணாலம் -பொறவு
 உடனே  கிளம்பணும்  ஊர்கோலம் 

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

அழகு 227.

பொன்னிற   வானம் -நன்கு
 பூத்திடும்  வேளை
 கண்களின்  எதிரே -ஒரு
 காரிகை   வந்தாள்

 நில்லெனச்  சொன்னேன் -தலை
 நிமிரவே  இல்லை
 வில்லெனும்  புருவம் -பிறர்
 வியந்திடும் உருவம்

 தங்கத்தின்  நிறமோ -அந்த
 தாரகை   அழகு
 பொங்கிடும்  இளமை -கவியில்
 புனைவதோ  பெருமை

 வாழைத்  தண்டென -அவளுக்கு
 வாய்த்திட்டக்  கால்கள்
 பாளைக்  குருத்தென -நன்கு
 பளிச்சிடும்  பற்கள்

 நெற்றியில்  திலகம் -அவளை
 நெருங்கினால்  கலகம்
 பற்றிப்  படருமே -அந்த
 பாவை  இளங்கொடி

  துணையென   வேண்டி -நானும்
 தூதுகள்   விடவோ
 இணையில்லாப்  பரிசினை -எனக்கே
 என்றுநான்  கொள்ளவோ 

சொர்க்கம் 226.

மானாடும்   வேளை -அது
 மகிழ்வான  சோலை
 மனம்துள்ளும்  நேரம் -என்
 மணவாளன்  எங்கே

 தேனோடும்  மொழியான் -அவனை
 தினம்தேடி  அலைந்தேன்
 வீணாக  மறைந்தே -ஏனோ
 என்விழிநீரை  ரசித்தான்

 விண்ணோடும்  முகிலே -அங்கு
 விளையாடும்  மீனே
 என்தேவன்  எங்கே -எனை
 இட்டுப்போ  அங்கே

 கண்ணாலே  பேசியே  -நல்ல
 காலங்கள்  போச்சு
 என்னாசைத்   துரையே -உன்னை
 எந்நாளும்  மறவேன்

 நீராடும்  வேளை -எனது
 நெஞ்சத்தில்  நீயே
 போராடும் மனதில் -நீ
 புதையலாய்  வந்தாய்

நீயள்ளித்    தந்தாய் -நானும்
 நிறைவாக  உண்டேன்
 சொல்லியது  சொர்க்கம் -அதில்
 சொக்கினேன்  நித்தம்

 வந்தாலே  மகிழ்வேன் -எனது
 வாசல்  வழி  பார்ப்பேன்
 சொந்தமெனச்  சொல்ல -எனக்கு
 சுந்தரனும்  நீயே 

மகிழ்வு 225.

அழகான   சிலைஒன்று  நடமாடுது -அதைக்
 காணும்   மனமிங்கே  தடுமாறுது
 விலைகூற  முடியாத  பொருள் அல்லவா -இதை
 விவரிக்க   யாராலும்  முடியாததோ

 கண்ணென்ற  சொல்கூடக்  கவியாகுமே -உன்
  காலடி  என்காதில்  சுவையாகுமே
 என்நாவில்  நீவாழும்  இடமாகுமே -அதில்
 இருவேளை   என்பூசை  உனக்காகுமே

 பட்டான   உன்மேனி  பளிங்காகுமே -உனது
 பருவமோ   பளிச்சென்று  விருந்தாகுமே
 தொட்டாலே   இனிக்கின்ற  சுவைமாங்கனி -நீ
 தேன்பொங்கிப்  பாய்கின்ற  எழிற்கோலமோ

 கண்ணாலே   பார்த்தோர்கள்  களிப்பாகுவார் -பின்னர்
 காரிகை  உனைஎண்ணி  மனம்வாடுவார்
 பொன்னாலே  செய்தாரோ  புவிவாழ்த்தவே -ஏனோ
 புறப்பட்டாய்  உலகத்தை  தடம் மாற்றவே

 எண்ணிரெண்டு  வயதுள்ள   எங்கள்தேவியே -அந்த
 இலங்கனிகள்  காண்பதற்கு  அலங்காரமே
 என்னிதயம்  புண்ணாதல்  என்செல்வமே -இனி
 எதிர்வந்தால்  மகிழ்வாகும்  என்னுள்ளமே

 நாமினி   எந்நாளும்  ஒன்றாகலாம் -நம்
 வாழ்வில்  இன்பங்கள்  நன்றாகலாம்
 நீஎன்றும்  என்வாழ்வில்  ஒளி கூட்டம்மா -நான்
 நிலையாக  வாழ்ந்திடவே  வழிகாட்டம்மா 

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

வெற்றி 224.

கண்   மலர்வாய்  கண்ணே -எங்கள்
 கலியை  தீர்த்த  பெண்ணே
 விண்ணில்  உலவும்  நிலவோ -நீ
 வேனில்   காலத்து  குளிரோ

 பொன்னும்  மணியும்  பூட்டி -அழியா
 பொங்கும்  செல்வம்  ஈட்டி
 என்னில்  உறையும்  இறைவன் -என்றும்
 எல்லா  நலமும்  தருவார்

 அன்னைநீ  இங்கே  பிறந்தாய் -என்
 ஆசை   நிறைய  செய்தாய்
 உன்னை  எண்ணியே  மகிழ்வேன் -இந்த
 உலகில்  நெடுநாள்  வாழ்வேன்

 மாடு   மனையும்  சுகமும் -உனது
 மக்கள்  தொகையும்  பெருகும்
 ஏடு  போற்ற  வாழ்க -நீயோ
 எங்கள்    வீட்டின்   விளக்கு

 ஆசை  பலவும்  சொன்னேன் -தூய
 ஆலயம்  எங்கும்  தொழுவேன்
 அன்பு  நிறைந்த  பேத்தி -நீயே
 அனைத்திலும்  எனக்கு  உசத்தி

 வாழும்   காலம்  முழுதும் -நீ
 வாழ்க  வளர்க  என்பேன்
 வேலும்  மயிலும்  காக்கும் -எதிலும்
 வெற்றி  உனக்கே  கிடைக்கும்

தங்கம் 223.

வானில்  உலவும்  நிலவு -உனக்கு
 வந்து  என்ன  சொல்லும்
 காணும்  உலகில்   என்றும் -தூய
 கடமை  ஒன்றே   வெல்லும்

 தேனைப்  போன்ற  குணமும் -பிறர்க்கு
 தீமை   எண்ணா  மனமும்
 வானைப்  போல உயர்வும் -உன்
 வாழ்வில்  பெறவும்  வேண்டும்

 நன்றி  சொல்லப்  பழகு -அது
 நாளும்  தருமே  சிறப்பு
 ஒன்று  சேர்ந்து  வாழு -அது
 உனக்குள்  போக்கும்  தாழ்வு

 காலம்    எங்கோ  ஓடும் -தினம்
 கவலை  உன்னை  வாட்டும்
 வேலை  வேலை யென  உழைத்தால் -வந்த
 வினைகள்  விலகியே  ஓடும்

 நானும்  நீயும்  ஒன்றே -இதில்
 நமக்குள்  பேதம்  சரியோ
 பிணக்கும்  பேச்சும்  எதற்கு -நீயும்
 பிரிந்திட  நினைப்பது  முறையோ

 எங்கோ  இறைவன்  இருப்பான் -அவன்
 எல்லா   மக்களை யும்   அணைப்பான்
 தங்கம்  போலவே  ஜொலிப்போம் -இந்த
 தரணியை  ஒருநாள்  ஜெயிப்போம்