சனி, 6 அக்டோபர், 2018

கற்பகவல்லி 609

 கலையெழில்    வடிவாக    காட்சி    தருபவளே    --இங்கு
 கற்பக  வல்லி   எம்மைக்    காத்திட     வருபவளே
 நிலையாக    வாழ்வதற்கு     நீயருள்    புரிவாயே    --உனை
 நினைந்தவர்    நலம்பெற    நிம்மதி    அருள்வாயே

 கைகளில்    மலரெடுத்து     காசினி    ஆள்பவளே   --தமிழ்
 கவிஞர்கள்    நாவினிலே    கனிவாய்    அமர்ந்தவளே
 மயிலைப்     பதிவாழும்    மங்கலத்    தாயல்லவோ   --ஏழைகள்
 மகிழ்ந்திட    வரமருளும்      மாதாவும்    நீயல்லவோ

 நெற்றியிலே    குங்குமம்       நிறைவான    புன்னகையில்   --இங்கு
 பற்றிவந்த     துயரமெல்லாம்    பறந்தோடிப்    போகுமம்மா
 வெற்றி       வெற்றியென்றே     விண்ணதிற    முழங்குதம்மா   --வடி
 வேலனை     ஈன்றவளே     விமலனின்       சோதரியே

 அலை பாயும்     கடல்நடுவே    உனதண்ணனின்    குடியிருப்பு   --எம்
 அன்னையே    உயிர்களுக்கு    எந்நாளும்     நீ காப்பு
 நிலையான    வாழ்வளிக்க     நேரினில்      வருபவளே   --என்றும்
 நித்தமும்    தொழுதிடுவோம்     நிர்மலன்    தேவியே

ஏழை நெஞ்சில்   இன்பம்    நிலைத்திட     வேண்டும்   --எங்கள்
 ஈஸ்வரி      மனது    வைத்தால்    இன்பங்கள்  தேடிவரும்
 நாளினைக்    கழிப்பதற்கு    நாயகி    துணையிரும்மா   --நாங்கள்
 நன்றியைப்     பொங்கல்   வைத்து   நல்லபடி    காட்டிடுவோம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக