வெள்ளி, 19 அக்டோபர், 2018

அன்னை 612

 அமிழ்தினும்        இனியவள்       அன்னை     --உலகில்
 ஆளாக்கி        விட்டாள்        என்னை
 கமழ்ந்திடும்     மலரவள்      வாசம்     --அவள்
 கண்களில்    தெரிவது      பாசம்

உயிரைப்    பணயமாய்     வைப்பாள்    --தன்
உதிரமே       பாலாய்க்      கொடுப்பாள்
பயிர்களைப்       போலவே     வளர்ப்பாள்   ==நல்ல
பழக்க       வழக்கங்கள்    சொல்வாள்

நன்றியை     நினைத்திட    வைப்பாள்    --என்றும்
நயவஞ்சகம்       சூதினை     வெறுப்பாள்
அன்பினை    சொல்லிக்    கொடுப்பாள்     --இங்கு
அனைவரும்    ஒன்றென    நினைப்பாள்

இரவும்     பகலுமாய்    உழைத்தாள்    --என்னை
இமையென    வாழ்வினில்     காத்தாள்
உறவுக்கு  அவள்தான்       எல்லை    --அவளை
உள்ளத்தில்    மறப்பதும்      இல்லை

அன்னையை      நினைக்கையில்    இன்பம்    --என்றும்
அருகில்        வராது       துன்பம்
எண்ணி   எண்ணியே     ரசிப்பேன்    --இனி
எந்நாளும்    அவளையே    துதிப்பேன்

சரஸ்வதி 611

வெள்ளைத்       தாமரையில்      வீற்றிருப்பாள்   --வீணை
கூட்டும்         நல்லிசையாய்        ஒளிர்வாள்
கள்ளமற்ற       வெள்ளை       மனது   ---அவள்
கவிஞர்கள்       நாவினில்       உறையும்      அமுது

பொங்கும்       தமிழாய்       புனலெடுப்பாள்   --இங்கு
பொருநை       வைகை     பெருக்காய்      வருவாள்
கங்கை       காவிரி         கற்பகக்     கனியே     --இந்த
காசினி      வாழ்ந்திடக்      கைத்தலம்      கொடுப்பாள்

எல்லாக்      கலைகளின்   இருப்பிடம்      அவளே  --ஏழை
குடிசையில்     நுழைபவள்      இவள்  தான்
நல்லோர்     வாழ்ந்திட      நலமே      அருள்வாள்   --உலகில்
நன்னெறி      தழைத்திட      இந்த நாயகி     துணையே

கொற்றம்    கொடிபடை       குரலுக்கு     அடிமை     --குளிர்
முகம்        கண்டால்       விலகிடும்     மடமை
கற்ற புலவர்     தாயின்      கருணையால்    வாழ்வார்    --இவள்
காலடி      பணிந்தால்    மலையென     உயர்வார்

தாயைப்     போற்றி     தமிழினில்     பாடு    --அவள்
தயவினில்     தானே      சிறந்திடும்   நாடு
ஆயகலைகள்    அளிப்பவள்     அன்னை    --அகம்
மகிழ்ந்தாலே     அடையலாம்     பொன்னை

சனி, 13 அக்டோபர், 2018

புள்ளிமான் 610

வெள்ளி      வண்ணத்     தாரகை    --அவள்
விழிகள்       வானின்     கருநீலம்
புள்ளி       மானென      வந்தாள்   --என்
புலன்களை     மாற்றிட    வைத்தாள்

பொன்னால்     வடித்த    உடல்   --அவளது
பொற்பாதம்       பூவென்னும்     மடல்
கண்ணால்      என்னை    வளைத்தாள்   --ஒரு
கணத்தில்     என்னையே     மறந்தேன்

சிரித்தால்    என்ஜீவன்     பறிபோகுமே   --முகம்
சீதள        நிலவென       ஆகுமே
விரித்தாள்     கடையை     எதிரிலே   --நான்
விழுந்தேன்     காதல்    வலையிலே

காலம்      ஓடுது       மெல்ல    --எனது
காதலை    எப்படிச்     சொல்ல
ஆழம்    விழுதுகள்      போலவே   --எங்கும்
ஆசைகள்     ஊறுது     உள்ளே

சொல்லில்    சொல்லிட     நினைத்தேன்    --அந்த
சொர்க்கத்தை    எண்ணியே     துடித்தேன்
பள்ளியில்    புதுப் பாடம்    படிப்பேன்    --தினம்
பணிவிடை      செய்தே     மகிழ்வேன்  

சனி, 6 அக்டோபர், 2018

கற்பகவல்லி 609

 கலையெழில்    வடிவாக    காட்சி    தருபவளே    --இங்கு
 கற்பக  வல்லி   எம்மைக்    காத்திட     வருபவளே
 நிலையாக    வாழ்வதற்கு     நீயருள்    புரிவாயே    --உனை
 நினைந்தவர்    நலம்பெற    நிம்மதி    அருள்வாயே

 கைகளில்    மலரெடுத்து     காசினி    ஆள்பவளே   --தமிழ்
 கவிஞர்கள்    நாவினிலே    கனிவாய்    அமர்ந்தவளே
 மயிலைப்     பதிவாழும்    மங்கலத்    தாயல்லவோ   --ஏழைகள்
 மகிழ்ந்திட    வரமருளும்      மாதாவும்    நீயல்லவோ

 நெற்றியிலே    குங்குமம்       நிறைவான    புன்னகையில்   --இங்கு
 பற்றிவந்த     துயரமெல்லாம்    பறந்தோடிப்    போகுமம்மா
 வெற்றி       வெற்றியென்றே     விண்ணதிற    முழங்குதம்மா   --வடி
 வேலனை     ஈன்றவளே     விமலனின்       சோதரியே

 அலை பாயும்     கடல்நடுவே    உனதண்ணனின்    குடியிருப்பு   --எம்
 அன்னையே    உயிர்களுக்கு    எந்நாளும்     நீ காப்பு
 நிலையான    வாழ்வளிக்க     நேரினில்      வருபவளே   --என்றும்
 நித்தமும்    தொழுதிடுவோம்     நிர்மலன்    தேவியே

ஏழை நெஞ்சில்   இன்பம்    நிலைத்திட     வேண்டும்   --எங்கள்
 ஈஸ்வரி      மனது    வைத்தால்    இன்பங்கள்  தேடிவரும்
 நாளினைக்    கழிப்பதற்கு    நாயகி    துணையிரும்மா   --நாங்கள்
 நன்றியைப்     பொங்கல்   வைத்து   நல்லபடி    காட்டிடுவோம்  

மாதா 608

 கனிந்திடும்     கண்களில்     கருணை     உண்டு   --உந்தன்
 கமலமலர்       பாதங்கள்   கதிதனை     யளிக்கும்
 நினைந்தவர்     நெஞ்சினில்     நீயே     வருவாய்   --நினை
 நித்தமும்     தொழுதால்       பலன்களும்    மிகுமே

 அழைத்திடும்    குரலுக்கு      ஆதரவு      தருவாய்  --உன்
 அடியவர்     நலமுற      அனைத்தும்      அளிப்பாய்
 பிழைகளை    மறந்திடும்    பேரருள்     நீயே    --உமை
பின்தொடர     வாழ்வில்      பெருகிடும்     பலமே

 எங்கும்      எதிலும்      எல்லாம்       இருப்பாய்   --உன்னால்
 இகபர     சுகங்கள்       என்றும்    கிடைக்கும்
 பொங்கும்     நிலவாய்    பூமியைக்    காப்பாய்  --தினம்
 போற்றிப்     பாடுவோம்       பொற்றாமரைச்    செல்வியே

 இயங்கிடும்    பொருள்களில்    இருப்பவள்     நீயே   --ஏழையர்
 துன்பங்கள்       போக்கிடும்       தாயே
 மயங்கிடும்    நிலையினை    மாற்றிட    வருவாய்  --எங்கள்
 மாதா      தேவி    நீயும்     மனம்    கனிவாயே

போற்றித்    தொழுவதால்    புண்ணியம்    அடைவோம்    --என்றும்
 புவனம்    காத்திடும்      புனித     ஜோதியே
ஏற்றம்      பெற்றிட    இனிதே     அருள்வாய்   ==எம்
ஈஸ்வரித்    தாயே    இறைஞசினோம்      உம்மையே