சனி, 29 செப்டம்பர், 2018

நிறை 607

 சொன்னாலும்      புரிவது     இல்லை   --பின்
 சுயமாய்      தெரிவதும்      இல்லை
 மன்னாதி     மன்னனாய்   மமதையில்   --அவர்
 மகிழ்ந்து      தினம்    பேசிடுவார்

கண்ணாலே     உடல்      அளப்பா ர்   --உடன்
 கட்டிலுக்கு       வலை     விரிப்பார்
பெண்ணாகப்   பிறந்த    தெய்வம் ---வீணில்
பேதலித்து      அலைய    வைப்பார்

எந்நாளும்        துயர்    தருவார்   --இங்கு
ஏழைக்கும்      கொடுமை   செய்வார்
மண்ணாசை     கொண்டு    தினம்    --எனோ
மக்களை      வதை    புரிவார்

கோடானு       கோடி   யென்பார்    --எளியோர்
குடிசைக்கும்      தீயை     வைப்பார்
கேடுகள்     தேடி         செல்வார்    --பிறரைக்
கெடுத்திட      வழிகள்   சொல்வார்

வாழப்     பிறந்த    நம்மை --இவர்கள்
வாட்டுதல்      என்ன    முறை
ஆளவே     பிறந்தவர்    நாமென்ன   --இன்றே
ஆர்த்தெழுதல்  அன்றோ     நல்ல   நிறை  

சனி, 22 செப்டம்பர், 2018

உவகை 606

கனவில்      வந்த     காதல்    --என்
வாழ்வில்     கைகூடி     வருமா
கண்ணாளன்    மார்பில்    நானும்    --இனி
கலந்தாடும்     நேரம்     பெறுமா

இரவினில்     அவரை    நினைப்பேன்   --என்
இதழ்களால்     முத்திரை     பதிப்பேன்
உறவினைப்     பெரிதாய்    மதிப்பேன்    --அவர்
உயிரினில்      ஒன்றாய்    கலப்பேன்

இருப்பதை    யள்ளிக்    கொடுப்பேன்    --அவர்
இளமையை     பார்த்து    ரசிப்பேன்
தருவதை     வாங்கிக்    கொள்வேன்    --ஒருநாள்
தாயாகும்    பேறினைப்    பெறுவேன்

தொட்டிலில்    பிள்ளை     வருவான்    --அந்த
சுகத்தினில்    என்னையே    மறப்பேன்
சிட்டுப் போல்   எங்கிலும்    பறப்பேன்    --காதல்
சிந்தனையில்    நாளினைக்    கழிப்பேன்

நல்லதை    சொல்லிக்    கொடுப்பேன்   --என்
நாயகன்     மனதில்    வசிப்பேன்
உள்ளது    போதும்    என்பேன்    --இந்த
உவகையில்    உலகினை    மறப்பேன் 

திங்கள், 17 செப்டம்பர், 2018

மனவாசல் 605

 கருணை     முகமோ    ஜொலிக்கும்   --அவள்
 கண்கள்     அருளினை    கொழிக்கும்
 அரிதினும்   அரிதாம்     அவளே --நாம்
அனுகினால்     ஆயிரம்      பலன்களே

 ஏழை       வீட்டிலும்      இருப்பாள்  --அவர்
 இன்னலைத்     தீர்த்தே    சிரிப்பாள்
 கோழையும்    வீரனாய்    ஆவான்   --அவன்
 குடும்பம்      நல்வழி      செல்லும்

 கண்ணீர்     மழையினில்    நனைப்பாய்    --நல்ல
 கதி பெற      அவளையே    நினைப்பாய்
 பன்னீர்    தெளித்துமே      பூசை    --அவள்
 பாதமலர்     மேல்தான்      ஆசை

 இரவும்      பகலாய்      மாறும்   --அவள்
 நினைத்தால்      எல்லாம்     சேரும்
 உறவினைப்    பெருக்கிட    வருவாள்   --நாம்
 உருப்பட     நேர்வழி       தருவாள்

 திருநாள்    இதுதான்     என்பேன்    --அம்மா
 திருவடி    பற்றியே    கிடப்பேன்
 வருவாள்   எந்தன்     மனவாசல்  --அதனால்
 வாழ்வினில்      இல்லையே     பூசல்  

சனி, 15 செப்டம்பர், 2018

வெற்றி 604

இழந்தது       போதும்    எழுந்திடு   --நீ
 இரவு    பகலாய்     உழைத்திடு
 பலம் பெறும்    உடலினை   அமைத்திடு   --அதில்
 பயனுள்ள    வழியினில்     சிறந்திடு

 செல்வங்கள்   நிறையவே    சேர்த்திடு    --அதை
 சேமிக்கும்   வழியினை    அறிந்திடு
 உள்ளத்தில்    உண்மையை    வளர்த்திடு   --என்றும்
 உத்தமன்    எனும் பெயர்     பெற்றிடு

 பிறரை    மதிக்கத்    தெரிந்திடு   --அது
 பெருமையை    தருமெனப்    புரிந்திடு
 மறந்தும்   பிறரினை    இகழாதே     --தினம்
 மனதில்    மகிழ்வினை ப்   பெருக்கிடு

எத்தனை    மனிதர்கள்    பிறந்தார்கள்   --முடிவில்
 எங்கோ    சென்று    மறைந்தார்கள்
 புத்தனை    உலகம்    நினைக்கிறதே --அவரை
 பொன்னென   போற்றித்   துதிக்கிறதே

நாளும்    நமக்கென    வாழ்ந்துவிடு    --உன்னை
 நம்பிய    பேருக்கும்     வாழ்வு கொடு
 வீழ்ந்திடும்    கண்ணீர்    துடைத்துவிடு   --நீயும்
 வெற்றி    வீரனாய்     விளங்கி விடு

vகணபதி 603

 உலகத்தின்     முதல்வன்    வருநாள்   --அந்த
 உத்தமத்    தலைவனின்    திருநாள்
 களங்கமில்லா   பிள்ளைக்கு   ஒருநாள்   --நம்மைக்
 காக்கும்      கணபதி    வரும்    நாள்

 பிரணவப்    பொருளாய்    வந்தார்  --நமக்கு
 பேரருள்     தினமும்    புரிவார்
 கருணையின்    உருவமும்    அவரே  --அவர்
 காலடி     தொழுவது      பலமே

 தம்பிக்கு    திருமணம்     முடித்தார்   --பெற்ற
 தாய்க்கும்     காவலாய்    நின்றார்
 நம்பிய    அடியவர்    காக்க     --இங்கு
 தும்பிக்கையால்     துன்பங்கள்    தீர்ப்பார்

 நினைத்தவர்    மனதில்   நிற்பார்  --தன்
 நீல விழியால்    நம்மையும்    அழைப்பார்
 களைய்க்கின்ற   பொழுதிலும்    காப்பார்   --வரும்
 கவலைகள்    மறந்திடச்      செய்வார்

 அவ்வைக்கு      அபயம்     தந்தார்   --அவரை
 அகிலமும்     வணங்கிட    வைத்தார்
 கொழுக்கட்டை    படைத்தால்    புசிப்பார்    --என்றும்
 குழந்தைகள்    நடுவினில்    இருப்பார்  

சனி, 1 செப்டம்பர், 2018

நாடு 602

 நாடு           என்பது          நாடு   --அதில்
 நல்லது     செய்திடப்    பாரு
 வீடு         என்பது     வீடு   --அங்கு
 விரும்பி    அன்பிலே    வாழு

 கூடு         என்பது     கூடு   --என்றும்
 கொள்கை    வழியினைத்    தேடு
 ஏடு         என்பது     ஏடு    --உள்ளே
 இருக்கும்    அறிவைப்     பாரு

 கண்ணில்     கருணை  வேண்டும்  --நெஞ்சில்
 கள்ளம்    மறைய    வேண்டும்
 பெண்ணில்    பொறுமை   வேண்டும்  --நன்றாய்
 பேசவும்       திறமை  தான்    தூண்டும்

 மனதில்    உறுதி      கொள்வாய்   --என்றும்
 மகிழ்வு      பொங்கிட     வேண்டும்
 குணத்தில்     சிறக்க    வேண்டும்   --உன்
 குடும்பம்       வாழ்ந்திட      வேண்டும்

 இருக்கும்       வாழ்வை     மதிப்பாய்   --நீ
இறைவன்   தன்னையே    துதிப்பாய்
 பெருமைகள்    பெற்றிட    வேண்டும்   --அன்பால்
பூமியை       ஆண்டிட      வேண்டும்