திங்கள், 24 பிப்ரவரி, 2014

நாயகம் -213

நாணயம்  என்பது -நமக்கு
 நன்மையை  தருவது
 நல்லது  நாட்டவர்க்கே -அதனை
 நாடுக  தினம்  மனமே

 ஊனினை  உருக்கினால் -நீ
 உள்ளொளி  பெறலாம்
 உண்மையை   அறிந்திடலாம் -இதனை
 உலகிற்கும்  வழங்கிடலாம்

 உயர்வும்  தாழ்வும் -இங்கே
 இருப்பது  முறைதான்
 எத்தனை  பேரறிவார் -அதில்
 ஊக்கமிருக்க  உயர்வது  நிச்சயமே

 வானமதியும்  வளர்கதிர் ரவியும் -தினம்
 வருவது  மாறி  மாறியன்றோ
 தேனில் சுவையும்  தேளில் விஷமும் -அந்த
 தெய்வத்தின்  வேலையன்றோ

 உள்ளம்  விரிந்தால் -உனக்கு
 உலகம்  புரியும்
 உயர்வை  நினைந்தால் -புதிய
 ஊக்கம்  பிறக்கும்

 கள்ளம்  புகுந்தால் -பல
 கலகம்  விளையும்
 கயமை  எண்ணம் -மனதில்
 காற்றாய்  நுழையும்

 அலையும் மனதினை -என்றும்
 அடக்குதல்  செய்வாய்
 உலையின்  கொதிப்பினை-உன்
 உள்ளத்தில்  தணிப்பாய்

 வந்தார்  போவார் -நம்
 வாழ்வினில்  கோடி
 வளமாய்  இருப்பாய் -நல்ல
 வழியினைத்  தேடி

 இல்லையென்பது  இல்லாதொழிக -அதனால்
 எடுப்பாரென்பது  இயலாநிலையே
 சொல்லும்   செயலும் -இங்கு
 சுகம்  தர  வேண்டும்

 வல்லமை  வளர்க -உடன்
 வாய்மையைப்  பெறுக
 நல்லவை  நடக்க -அந்த
 நாயகம்  அருள்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக